ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொண்டு கழிப்பறைகள் கட்டும் இளைஞர்!
2014-ம் ஆண்டு சுகாதார திட்டம் ஒன்றை தொடங்கிய அஷ்வானி அகர்வால் சிறுநீர் கழிப்பறைகள் கட்டுவதுடன் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்தியா முழுவதும், புதுடெல்லி போன்ற மெட்ரோ நகரங்களிலும்கூட மக்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். பொது இடங்களில் சுகாதார வசதிகள் போதுமான அளவு இல்லாதது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முயற்சிகள் எடுத்து வரும்போதும் இந்த நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. உதாரணத்திற்கு 18.6 மில்லியன் மக்கள்தொகை கொண்ட புதுடெல்லி பகுதியில் ஆண்களுக்கு 3,000 கழிப்பறைகளும் பெண்களுக்கு 30 கழிப்பறைகளும் மட்டுமே உள்ளது.
எனினும் பல அரசு சாரா நிறுவனங்களும் தனிநபர்களும் இந்தப் பிரச்சனைக்கு புதுமையான முறையில் தீர்வு காண முற்படுகின்றனர். இவர்களில் ஒருவர்தான் அஷ்வானி அகர்வால். இவர் டெல்லி கலை மற்றும் வர்த்தக கல்லூரியில் நுண்கலை பட்டம் பெற்றவர்.
அஷ்வானியின் குழுவில் இசைக்கலைஞரான கரண் சிங், புகைப்பட கலைஞரான ஹிமான்ஷு சைனி ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் இணைந்து பொது சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் பொது கழிப்பறைகளை நிறுவி சுத்தமான, பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க திட்டமிட்டார். இவர்கள் ஒன்று சேர்ந்து 2014-ம் ஆண்டு புதுடெல்லியின் துவாரகா பகுதியில் ’பேசிக் ஷிட்’ தொடங்கினார்கள்.
அஷ்வானி தனது கல்லூரியில் சுகாதாரம் தொடர்பான ப்ராஜெக்ட் ஒன்றில் ஈடுபட்டபோதுதான் இந்த எண்ணம் தோன்றியுள்ளது. இந்த ஆய்வின்போது சிறுநீர் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் மக்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கவேண்டிய நிலை இருப்பதையும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதையும் உணர்ந்தார்.
“பொதுவெளியில் சிறுநீர் கழிக்கப்படுவதால் நம் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நான் குறிப்பாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண விரும்பினேன். சாலைகளில் பொதுவாக மக்கள் சிறுநீர் கழிக்கும் இடங்களில் சிறுநீர் கழிப்பறைகள் நிறுவப்பட்டால் மக்கள் அதைப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை உணர்ந்தேன். இதற்கான தீர்வு குறைந்த விலையில் சிறிய அளவில் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். எனவே அதை நானே உருவாக்கினேன்.
சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும் மாற்றத்தை கொண்டு வருவதிலும் மக்கள் பங்களிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்,” என அஷ்வானி தெரிவித்ததாக Indiegogo குறிப்பிடுகிறது.
அஷ்வானி மற்றும் அவரது குழுவினர் ABD போட்டியில் பங்கேற்றனர். ’பேசிக் ஷிட்’ உருவாக்கப்பட்ட பகுதியில் சுகாதார தீர்வைக் கண்டறிவதுதான் அந்த போட்டியின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதில் பேசிக் ஷிட் முதல் மூன்று இடங்களுக்கும் இடம்பெற்றதால் அவர்களது திட்டத்திற்கு நிதியுதவி கிடைத்தது.
பீபீ (PeePee) என்கிற சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவறை திறந்தவெளி நிலங்களில் கழிவுகளாக கொட்டப்படும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பீபீ கழிப்பறையும் 9,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் துர்நாற்றம் வராது. சுத்தப்படுத்த தண்ணீர் அவசியமில்லை. கழிவுநீர் இணைப்பும் தேவையில்லை.
ஒரு கழிப்பறைக்கான கட்டுமானச் செலவு சுமார் 12,000 ரூபாய் ஆகும். தேவையான பகுதியில் இரண்டு மணி நேரத்திற்குள் இதை நிறுவிடலாம். டிசைனரான அஷ்வானி உட்புற வடிவமைப்பு மற்றும் கிராஃபிக் டிசைனிங் பகுதியில் பணிபுரிகிறார். இவர் தனது பணி மூலம் ஈட்டும் வருவாயை சுகாதார திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்.
கழிப்பறைகள் இரண்டு ஒருங்கிணைக்கப்பட்ட சிறுநீர் கேரேஜ்களைக் கொண்டுள்ளது. சிறுநீரை சேகரிக்கும் இவை ஒவ்வொன்றின் கொள்ளளவும் 200 லிட்டர் ஆகும். ஒவ்வொரு கேரேஜும் நாள் ஒன்றிற்கு சராசரியாக 150 லிட்டர் சிறுநீரை சேகரிக்கிறது. பின்னர் இவை ஆக்டிவேடட் கார்பன் கொண்டு சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சிறுநீரில் உள்ள நச்சுப்பொருட்கள் நீக்கப்படுகின்றன.
பின்னர் சிறுநீரில் இருந்து யூரியா பிரித்தெடுக்கப்படுவதற்காக மறுசுழற்சி செய்யப்பட்டு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் இந்த செயல்முறையில் அமோனியா கழிவுகளின் வெளியேற்றம் குறைக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் உதவுகிறது என Efforts For Good தெரிவிக்கிறது.
தற்போது அஷ்வானி 100 பீபீ சிறுநீர் கழிப்பறைகளை உருவாக்க விரும்புகிறார். இவை டெல்லி சாலைகளில் நிறுவப்படும்.
கட்டுரை: THINK CHANGE INDIA