பத்திரிகையாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்ட ஓய்ஜிபி-ன் வாழ்க்கைப் பயணம்...
ஒய்ஜிபி என அவரது மாணவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கல்வியாளர் பத்மஸ்ரீ ராஜலட்சுமி பார்த்தசாரதி, ஆகஸ்ட் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 93 வயதான அவர் கல்வி, இலக்கியத்தில் சிறந்த பணியாற்றியமைக்காக 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
ஒய்.ஜி.பி என சென்னைவாசிகள் மற்றும் அவரது மாணவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கல்வியாளர் பத்மஸ்ரீ ராஜலட்சுமி பார்த்தசாரதி ஆகஸ்ட் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 93 வயதான அவர் கல்வி மற்றும் இலக்கியத்தில் சிறந்த பணியாற்றியமைக்காக 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
நவ. 8, 1925ல் சென்னையில் வசதியான மற்றும் கல்வியில் சிறந்த பாரம்பரியம் மிக்க ஐயங்கார் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை ஆர்.பார்த்தசாரதி (இவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற திவான் பகதூர் டி. ரங்காச்சாரி), பர்மா ஷெல் லிமிடெட் ஊழியர். இவரது தாயார் அலமேலு அம்மா. மேலும், ராஜலட்சுமியின் சகோதரர் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும் இயக்குநராகவும் இருந்த கே.பாலாஜி ஆவார்.
ராஜலட்சுமி மெட்ராஸ் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். அந்த காலத்தில் பெண்கள் கல்வியில் அந்தளவுக்கு முன்னேற்றம் கொண்டிருக்கவில்லை. இந்திய அளவிலேயே சில பெண்கள் மட்டுமே உயர்கல்வி பயின்ற அக்காலத்தில் 1947ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், எம்.எட், முடித்து, சென்னைப் பல்கலையிலேயே வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதையடுத்து, தி இந்து மற்றும் தமிழ் வார இதழான குமுதத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் அவருக்கு நாடக ஆசிரியரான ஒய்.ஜி. பார்த்தசாரதியுடன் திருமணம் நடைபெற்றது. தமிழ் நாடக உலகின் பிதாமகனாக கருதப்படும் ஒய்.ஜி.பார்த்தசாரதி யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் (UAA) எனும் நாடகக் குழுவைத் தொடங்கி 1980களில் பல நாடகங்களை அரங்கேற்றியவர். இவரது நாடகக்குழுவில் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் ஒய்.ஜி.ராஜேந்திரன் என இரு பிள்ளைகள். இதில், ஒய்.ஜி.மகேந்திரன் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் என்பதும், நடிகர் ரஜினிகாந்துக்கு நெருங்கிய நண்பர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியபோது, திரைப்படங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்தார் ஒய்ஜிபி. தனது மகனின் நாடகம் குறித்து விமர்சனக் கட்டுரை எழுதவேண்டிய சூழல் வந்தபோது, எனது மகனின் நாடகத்துக்கு நானே விமர்சனம் எழுதுவது சரியாக இருக்காது என அவர் மறுத்தது அவரின் நேர்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டுவிட்ட அவர், 1958ம் ஆண்டில், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் ஒரு கொட்டகையில் 13 மாணவர்களுடன் நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் உறுப்பினர்களுடன் ஓர் பள்ளியைத் தொடங்கினார்.
இப்பள்ளியே பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியாகும். இப்பள்ளி 1971ஆம் ஆண்டில், அதன் முதல் கிளையான டி.பி. சாலை ஜூனியர் பள்ளியைத் திறந்தது. தற்போது, சென்னையில் பிஎஸ்பிபி என அழைக்கப்படும் பிரபல பள்ளியான, இப்பள்ளி 5 கிளைகளுடன் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 500க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் ஆலமரமாய் விரிவடைந்துள்ளது.
1958ஆம் ஆண்டு பள்ளி தொடங்கியதில் இருந்தே ராஜலட்சுமி, இப்பள்ளிகளின் டீன் மற்றும் இயக்குநராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாணவர்கள் மத்தியில் வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்ததில் இவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கலாச்சாரப் பிரிவான பாரத் கலாச்சரை இப்பள்ளி நிறுவி நடத்தி வந்தது. மேலும் இதுகுறித்து ராஜலட்சுமி தமிழ் நாளேடு ஓன்றுக்கு அளித்த பேட்டி கூறியதாவது,
“மாணவர்களுக்கு எல்லாவற்றையும் பற்றிய அறிவு மிக முக்கியம். ஆனால், நமது இளைஞர்களிடையே நமது பாரம்பரியத்தைப் பற்றிய அறிவு இல்லாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும், அவர்களின் சிந்தனை மேற்கத்தியமயமாக்கலை நோக்கியே நகர்கின்றன. எனவே, நாம் நம் பாரம்பரிய வேர்களை வெளிப்படுத்தவேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதிலும் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
மேலும், அவர் தனது குடும்பம் குறித்து கூறுகையில்,
எனது கணவர் (ஒய்.ஜி. பார்த்தசாரதி) என்னிடம் எப்போதுமே எனக்காக இதை செய், அதை செய் எனக் கூற மாட்டார். மேலும், இப்பள்ளியைத் தொடங்கவும், கல்விப் பணியாற்றவும் ஊக்கப்படுத்தினார். எங்கள் பள்ளிகளின் சிறப்பம்சமே இந்திய கலாச்சார, பாரம்பரிய முறையில் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வழிகாட்டுவதாகும் என்றார்.
இவரது பள்ளிகளில் பள்ளி நேரத்துக்கு பின்பு சிறப்பு வகுப்புகளாகவே இசை, நடனம், கலை உள்ளிட்டவைகள் பயிற்றுவிக்கப்பட்டன. மாணவர்களின் திறன் வளர்க்கும் இவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவமும் அளிக்கப்பட்டன.
இவரது பள்ளியின் கோடம்பாக்கம் கிளையில்தான் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 8ஆம் வகுப்பு வரை பயின்றார். மேலும், இவரது பள்ளியில் படித்த பலர் சினிமா, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடல், சென்னை தி.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் புதன்கிழமை (ஆக.7) மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மண்ணுலகை விட்டு அவரது பூத உடல் மறைந்தாலும் அவர் செய்த கல்விப் பணிகளால் தனது மாணவர்கள் மற்றும் மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்து வாழ்ந்து வருவார் என்பதில் ஐயமில்லை.