டானா நெட்வொர்க் அளிக்கும் இயற்கை வேளாண்மைக்கான மென்பொருள்
டானா நெட்வொர்க் (Dana Network)- இணையான இரண்டு உண்மையான நிலைகளிடையே உள்ள இடைவெளியைப் போக்குவது என்பது இயற்கை வேளாண்மையால் நிரப்ப முடியும் என்பதை விளக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஒர் அமைப்பு. "நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் நமது நுகர்வில், துளியும் அக்கறை இல்லாமல் இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே உள்ள தடை உண்மையில் நீக்கப்பட வேண்டும். இந்த இரண்டு பிரிவினரும் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளாமலே உள்ளனர்" என்கிறார் டானா நெட்வொர்க்கின் இணை நிறுவனர் சுஜாதா ராம்னி.
இரண்டு பேர் இணைந்து ஐதராபாத்தில் தொடங்கிய கூட்டு நிறுவனமான டானா நெட்வொர்க், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் இணைக்கும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறது. "விவசாயிகள்,முதல் கூட்டுறவுகள், சில்லரை வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரையும் இணைக்கிறது டானா நெட்வொர்க்" என்கிறார் சுஜாதா. இது சமூக வலைத்தளம் என்பதைவிட இதனை ஒரு மின் வர்த்தக மேடை என்றே கூறலாம். "இது ஒரு வர்த்தக ஒருங்கிணைப்பு. இதில் உறுப்பினர்கள் தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளாமல் தங்களது பொருட்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். விவசாயிகள் தாங்கள் பயிர் செய்தவற்றை விற்பனை செய்யலாம். விவசாயி எதை உற்பத்தி செய்கிறார் என்று சில்லரை வியாபாரிகள் தெரிந்து கொள்வதுடன் தங்களிடம் உள்ள பொருட்களையும் பகிர்ந்து கொள்ளலாம். வாங்குபவர்களும் தங்களுக்கு வேண்டியவற்றை கூட்டாக சேர்ந்து வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்".
மொழி மற்றும் கல்லாமை ஆகிய இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு, தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது மற்றும் 3ஜி இணைப்பு, ஆதரவு ஆகிய இரண்டு தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. "இங்கு ஆங்கிலம் தான் மொழியாக பயன்படுத்தப்படுகிறது என்ற போதிலும், இங்குள்ள அனைத்து தகவல்களும் காட்சிகளின் மூலம் விளக்கப்படுகிறது. எனவே இதை எப்படிப் படிப்பது, எப்படி எழுதுவது என்பது குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. பெரும்பாலான தகவல்கள் எண்ணிக்கையாகவே தரப்பட்டுள்ளன. எண்ணிக்கை, அளவு, விலை, கையிருப்பு, கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் எண் அடிப்படையிலானது" என்று அவர் கூறுகிறார். அடுத்த சில மாதங்களில் டானா தற்போதைய உள்ளடக்கங்கள் அனைத்தையும் ஆறு தென்னிந்திய மொழிகளில் மொழிபெயர்க்கத் திட்டமிருப்பதாகவும் சுஜாதா கூறுகிறார்.
கிராமப்புறங்களில், இணையதள இணைப்பு ஊடுருவல் பிரச்சனை குறித்து கேட்டபோது, "மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இணையதள இணைப்பு மிகக் குறைந்த விலையிலேயே கிடைக்கிறது என்று சுஜாதா கூறுகிறார். 3ஜி இணைப்பும் எளிதாகவே கிடைக்கிறது. மேலும் ஒரு அடிப்படை ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதுமானது. இதனை 5000 முதல் 7000 ரூபாய் விலையில் வாங்கிக் கொள்ள முடியும். பல நடுத்தர வயதிலுள்ள விவசாயிகளும், அவர்களது மகன்கள் கண்டிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள் வைத்துள்ளனர்".
டானா நெட்வொர்க் தொடங்கும் முன்பாக, நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த சுஜாதா, தனது அனுபவத்தை தொழில்நுட்பத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை வேளாண் பொருட்கள் சில்லறை அடிப்படையில் விற்பனை செய்வதற்காக "குட் சீட்ஸ்" (Good seeds) என்ற ஒரு நிறுவனத்தை ஐதராபாத்தில் தொடங்கினார். "2012ம் ஆண்டில் நான் டானாவை என் பங்குதாரர் அஷார் ஃபர்ஹான் உடன் இணைந்து தொடங்கிய போது தான், எனக்கு விருப்பமான இயற்கை வேளாண்மை துறையில் அடி எடுத்த சந்தோஷம் கிட்டியது" என்கிறார் அவர்.
இதுவரை டானா 25 வேளாண்மை கூட்டுறவுகளுடன் பங்கு கொண்டு தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்றுள்ளது. அழுகிப் போகும் பொருட்கள் ஐதராபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், அழுகாத பொருட்கள் தொலைதூர இடங்களில் இருந்தும் வருகின்றன. அடுத்த சில மாதங்களில் நாங்கள் தனிப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்களுடனும் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் எங்களது தொடர்பில் உள்ள இணைப்புக்களை 150 ஆக அதிகரிக்க இருக்கிறோம்" என்கிறார் சுஜாதா.
விலை மற்றும் இயற்கை வேளாண் உற்பத்தி ஆகியவை இந்த வர்த்தகத்தில் நாங்கள் சந்திக்கும் சில பெரும் சவால்களாக உள்ளன என்கிறது டானா குழு. "இயற்கை வேளாண் பொருட்கள் சிறந்தது என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்ற போதிலும் அது கூடுதல் விலை என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட யாரும் அதை வாங்க முன்வருவதில்லை. இதுவரை நாங்கள் டானாவில் எங்களது பணத்தைத் தான் முதலீடு செய்திருக்கிறோம். மக்கள் இதைப் பின்பற்றி, பயன்படுத்தி அதில் உள்ள மதிப்பை உணர வேண்டும் என நாங்கள் இப்போது கருதுகிறோம். இதன் மதிப்பு அங்கீகரிக்கப்பட்டால் அதன் பின்னர் அதற்கு உரிய விலையைக் கொடுப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது" என்று கூறுகிறார் சுஜாதா. அவர் மேலும் கூறுகையில், இதற்கான சூழலை, பழக்கத்தை உருவாக்கி விட்டால் அதன் பின்னர் நீங்கள் லாபம் நிறைந்த சந்தையை உருவாக்க முடியும்" என்கிறார்.
உற்பத்தி எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை மற்றும், உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த இயலாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்பதால் இயற்கை வேளாண்மை வேகமான வளர்ச்சியை சந்திக்க முடியாமல் இருப்பது இரண்டாவது பிரச்சனையாகும். "இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து வேலை செய்கிறோம். சில சமயங்களில் இயற்கை வேளாண்மை குறித்து கிராமங்களில் கல்வி புகட்டும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறாம். தற்போது நாங்கள் நீடித்த மாதாந்திர தேவையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் விவசாயிகள் இயற்கை வேளாண்மையின் பயன்களை அங்கீகரிக்க முன் வருவார்கள்" என்கிறார் சுஜாதா.
இந்தக் குழு சந்தித்து வரும் போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல என்பதால் இப்போதைக்கு இதனை விரிவுபடுத்துவதில் அவர்கள் எதுவும் திட்டமிடவில்லை. இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் உற்பத்தி செலவினங்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து அவர்கள் சிந்தித்து வருகின்றனர். இந்தக் குழு ஆன்லைன் மூலமாக தரகர்களை தவிர்த்திருக்கிறது என்பது ஒரு வெற்றி என்றே கூறலாம். எனினும் போக்குவரத்து செலவுகள் போன்றவை இன்னும் அவர்களுக்கு சிக்கல்களை அளிக்கத்தான் செய்கின்றன.
எது எவ்வாறிருப்பினம் இயற்கை வேளாண்மை என்பது ஆதரிக்க வேண்டிய ஒரு அர்த்தமுள்ள விவசாய முறை என்று சுஜாதா கூறுகிறார். இதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருப்பது மிகவும் ஆச்சரியமானது என்று கருதுகிறார். நாங்கள் டானாவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்கிறார் சுஜாதா மனநிறைவுடன்.
டானா நெட்வொர்க் பற்றிய தகவல்களுக்கு: http://www.daana.in/