8 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள மூளைச் சாவு அடைந்த இளைஞர்!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதில் எட்டு பேர் உயிர் காப்பாற்றப்பட்ட உருக்கமான சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கண் தானம், ரத்த தானம் போலவே உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வும் சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்துள்ளது. மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது என கைவிடப்பட்ட மூளைச் சாவு அடைந்த நோயாளிகளின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று எட்டு பேர் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சரத்குமார். வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியின் மகனான இவர், சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 11ம் தேதி சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் வழக்கம்போல் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் சரத்குமார். இளையான்குடி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அதிகரை விலக்கு ரோட்டில் அவரது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் சரத்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பரமக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் உடனடியாக சரத்குமாரை மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் சிகிச்சை பலனளிக்காமல், சரத்குமாருக்கு மூளைச்சாவு நிலை ஏற்பட்டது.
அதிகம் கல்வியறிவு இல்லாத போதும், அந்த சோகமான நேரத்திலும் தங்களது மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து மேலும் பலரது உயிரைக் காப்பாற்றும் உயர்ந்த முடிவிற்கு சம்மதித்தனர் சரத்குமாரின் பெற்றோர்.
பின்னர், மதுரை, சென்னை மருத்துவக்கல்லுாரி டீன்கள் மூலம் சரத்குமாரின் உடலுறுப்புகள் எடுக்கப்பட்டது. இதில் இதயம் விமானம் மூலம் சென்னைக்கும், சரத்குமாரின் கண்கள் திருச்சிக்கும், அவரது சிறுநீரகங்கள் மதுரை மற்றும் தஞ்சாவூருக்கும் வழங்கப்பட்டது. சரத்குமாரின் கல்லீரல் கோயமுத்தூர் மெடிக்கல் சென்டரில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் 30 நிமிடங்களில், மதுரையில் இருந்து கோவைக்கு சரத்குமாரின் கல்லீரல் எடுத்து வரப்பட்டது. கோவை வட்டமலையாம் பாளையத்தில் பத்திரமாக தரையிறங்கி அங்கிருந்து கல்லீரல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு வழிநெடுகிலும், போக்குவரத்தை நிறுத்தி சீர்மிகு காவல்துறையினர் சிறப்பாகச் செயல்பட்டனர்.
இதன்மூலம் மறைந்த சரத்குமாரின் உடல் உறுப்புகள் மூலம் எட்டு நோயாளிகள் மறுவாழ்வு அடைந்துள்ளனர். இந்த சம்பவம் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே தன்னைப் பற்றி பேச வைத்துள்ளார் சரத்குமார்.
கூலித் தொழிலாளிகளாக இருந்த போதும், சரியான நேரத்தில் சரியாக முடிவெடுத்து செயல்பட்ட சரத்குமாரின் பெற்றோரை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டு வருகின்றனர். இந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் எட்டு பேர் வாழ்வில் புதிய வசந்தத்தை தந்துள்ள சரத்குமாரின் பெற்றோருக்குத் தமிழக அரசு தகுந்த உதவி செய்ய வேண்டும் எனவும் ராமநாதபுரம் மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும், பரமக்குடி நகர் முழுவதும் சரத்குமார் மரணம் குறித்து கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில்,
"அனைவரும் கட்டாயமாகத் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டவும். இது சரத்குமாரின் வேண்டுகோள்...” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முதலிடம் :
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழகம் விளங்கி வருகிறது. தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் நமது மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மூளைச் சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின்படியே பயனாளிகளுக்கு பொருத்தப் படுகின்றன.
தமிழகத்தில் இதுவரை 1328 கொடையாளா்களிடம் இருந்து சுமார் 7,804 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 2,387 சிறுநீரகங்களும், 2,004 கருவிழிப் படலங்களும், 1,225 கல்லீரல்களும், 841 இதய வால்வுகளும், 581 இதயங்களும், 494 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
உடல் உறுப்பு தானமளிப்பதற்காக 12,511 போ் இதுவரை பதிவு செய்துள்ளனா். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூளைச்சாவு அடைந்தவர்கள் மட்டும் தான் என்றில்லை, எந்தவொரு சராசரி மனிதரும் இறப்பிற்குப் பிறகு தங்களது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க இயலும். கண் தானம் போலவே இதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.