மாற்றுத் திறனாளிகளுக்காக ஸ்கிராப் கொண்டு மின்சார பைக்குகளை உருவாக்கும் 60 வயது விஷ்ணு!
சூரத்தைச் சேர்ந்த விஷ்ணு படேல் மாற்றுத்திறனாளிகளுக்காக லித்தியம் அயன் பேட்டரியால் இயங்கும் ஒன்பது மின்சார வாகனங்களை இதுவரை உருவாக்கியுள்ளார். விரைவில் இதை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளார்.
நீங்கள் எப்போதாவது சிக்கன் பிரியாணி தயாரிக்கும் செய்முறையைக் காண யூட்யூபை ஆராய்ந்து இறுதியில் இரண்டு மணி நேரம் கழித்து சோர்வுற்ற கண்களுடன் அமெரிக்காவில் கோழி வளர்ப்பு முறை குறித்த வீடியோவை பார்த்த அனுபவம் ஏற்பட்டதுண்டா? இதேபோல் விஷ்ணு படேலின் தேடல் இறுதியாக டிஐஒய்-ல் முடிந்துள்ளது.
60 வயதான இவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தனது வெற்றியை நினைத்து திருப்தி கொள்ளவில்லை. குஜராத்தின் சூரத் பகுதியில் சாயப்பொருள் வணிகத்தின் உரிமையாளரான இவர் பொறுப்புகளை தன் மகன் நிகிலிடம் ஒப்படைத்தார். பிறகு ஆன்லைனில் DIY வீடியோக்களை ஆராயத் துவங்கினார். அதிலிருந்து அவருக்கு ஆர்வம் அதிகமுள்ள பகுதியைக் கண்டறிந்தார்.
2017-ம் ஆண்டு DIY வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்தபோது முழுமையாக ஸ்கிராப் கொண்டு ஒரு வாகனத்தை எப்படி உருவாக்குவது என்கிற பயிற்சி வீடியோவைப் பார்த்தார். விஷ்ணு அதை அதிகம் ரசித்தார். மேலும் இரண்டு வீடியோக்களை பார்த்த பிறகு தன்னால் அதை உருவாக்கமுடியும் என்கிற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது.
போலியோ பாதிப்புடனும் செவித்திறன் குறைபாட்டுடனும் பிறந்த விஷ்ணு படேல் 2018-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உருவாக்கி வருகிறார். பசுமையான வாகனங்கள் உருவாக்குவதில் ஆர்வம் கொண்டு இவர் ரிமோட், சர்க்யூட் போர்ட் போன்ற ஸ்கிராப் பொருட்களைக் கொண்டு ஒன்பது மின்சார பைக்குகளை உருவாக்கியுள்ளார்.
விஷ்ணு 2,000 சதுர அடி பரப்பளவில் ஸ்கிராப்பைக் கொண்டு மின்சார வாகனங்களை வடிவமைத்து உருவாக்குகிறார். அடுத்தவரின் உதவியை சற்றே பெற்றுக்கொண்டு தானே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
DIY வாயிலாக சிறந்த முயற்சி
மின்சார பைக்குகளை உருவாக்கி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது விஷ்ணுவின் நோக்கமல்ல. மாற்றுத்திறனாளிகளின் தனித்தேவைக்கேற்றவாறு விலை மலிவான வாகனங்களை உருவாக்கவேண்டும் என்பதே அவரது நோக்கம். அத்துடன் இவரது முயற்சியைக் கண்டு உந்துதல் பெற்று மக்கள் போக்குவரத்திற்கு பசுமையான வகையில் உள்ள மாற்றுகளை ஆராய்ந்து கார்பன் அடிச்சுவட்டை குறைப்பார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
விஷ்ணு ஸ்கிராப் சந்தையில் இருந்து ஸ்கிராப் வாங்குகிறார். அத்துடன் வீட்டில் அப்புறப்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களையும் ஆராய்ந்து சேகரிக்கிறார்.
ஐந்தாம் வருப்பு வரை மட்டுமே படித்துள்ள விஷ்ணு வாகனங்களை உருவாக்குவதில் முறையான பயிற்சி பெறாத நிலையிலேயே தனது முதல் மின்சார பைக்கை உருவாக்கியுள்ளார். ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட முன்வடிவம் குறித்து நிகில் கூறுகையில்,
”அப்புறப்படுத்தப்பட்ட ஸ்கூட்டரை நாங்கள் முழுவதுமாக பிரித்தோம். என்னுடைய அப்பா மின்சார பைக் உருவாக்க விரும்பியதால் வாகனத்தில் பேட்டரி பொருத்தவும் பெட்ரோல் டேங்கிற்கு பதிலாக லித்தியம் அயன் பேட்டரியை பொருத்தவும் முயற்சி செய்தார். பேட்டரியுடன் கன்ட்ரோல் போர்ட், ப்ரேக் மற்றும் சில முக்கிய பாகங்களையும் நாங்கள் வாங்கினோம். இதற்கு கிட்டத்தட்ட 35,000 ரூபாய் ஆனது,” என்றார்.
ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் வடிவமைப்புப் பணிகளிலும் விஷ்ணு முக்கிய பங்கு வகிப்பதால் ஒவ்வொரு மின்சார பைக்கையும் முழுமையாக உருவாக்க ஒன்று முதல் இரண்டு மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு மின்சார பைக் உருவாக்கவும் 30,000 முதல் 60,000 ரூபாய்க்கும் மேலாக செலவிடப்பட்டதாக தெரிவிக்கிறார் நிகில். இதில் லித்தியம் அயன் பேட்டர்களின் விலைதான் அதிகம் என்கிறார்.
விஷ்ணுவிற்கு உள்ள குறைபாடுகளை சமாளிக்க நிகில் உதவுகிறார். சில குறிப்பிட்ட பாகங்களை விஷ்ணு தாமே கையாளர்கிறார். அவரால் இயலாத பணிகளில் மகனின் உதவியைப் பெற்றுக்கொள்கிறார்.
இவர் உருவாக்கியுள்ள மின்சார பைக்குகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 35-45 கி.மீட்டர் வரை செல்லும் என்கிறார் நிகில். இதிலுள்ள ஆக்சில் மோட்டார் சந்தையில் வாங்கப்பட்டது. இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். இது கிட்டத்தட்ட 150 கிலோ எடையை சுமக்கக்கூடியதாகும்.
அப்பா, மகன் இருவரும் உருவாக்கியுள்ள மின்சார பைக் தற்போது சோதனைக்கட்டத்தில் உள்ளது. சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து நிகில் கூறுகையில்,
”நாங்கள் முதலில் எங்களை ஸ்டார்ட் அப்பாக பதிவு செய்துகொண்டு அதன் பின்னர் எங்களது மின்சார பைக்குகளை வணிக ரீதியாக சந்தையில் அறிமுகப்படுத்துவோம்,” என்றார் நிகில்.
சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக இணக்கம் சார்ந்த சில பணிகள் முடிக்கப்படவேண்டியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எளிதாக நகர்ந்துசெல்லலாம்
விஷ்ணு சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டிருந்தார். மேலும் மாற்றுத்திறனாளி சமூகத்தினர் பிறர் உதவியின்றி சுதந்திரமாக ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல உதவவேண்டும் என விரும்பினார். எனவே இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மின்சார பைக்குகள் உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்தினார்.
விஷ்ணு வணிகரீதியாக செயல்படும் ஆர்வத்திற்கு அப்பால் மாற்றுத்திறனாளிகள் சுதிந்திரமாக நகர்ந்துசெல்ல உதவ விரும்பினார்.
”மாற்றுத்திறனாளிகளுக்கு பின்புறம் மூன்று சக்கரங்களைக் கொண்ட பைக்குகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான்கு பேர் ஒன்றாக பயணம் செய்ய பின்னால் மற்றொரு இருக்கையை இணைக்கவேண்டும் என்பதே என் அப்பாவின் நோக்கம். மேலும் அந்த வாகனத்தை மனிதத் தலையீட்டுடன் பின்னோக்கி இயக்கவேண்டிய அவசியமிருக்காது. மாறாக இதிலுள்ள தனிப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பு வாகனத்தை எளிதாக பின்னோக்கி இயக்கிவிடும்,” என நிகில் விவரித்தார்.
இதுவரை விஷ்ணு அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட 10 பைக்குகளை மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கியுள்ளார். அவரிடம் கோரிக்கை வைப்போருக்கு வழக்கமான பைக்குகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தும் தருகிறார். அவ்வாறு மாற்றியமைப்பதற்கான கட்டணமாக 25,000 ரூபாய் வசூலிக்கிறார்.
வருங்காலத் திட்டம்
இதுவரை விஷ்ணுவிற்கு அரசாங்கத்திடமிருந்தோ தனியார் ஏஜென்சிக்களிடமிருந்தோ எந்தவித ஆதரவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்கவும் மின்சார பைக்குளை அறிமுகப்படுத்தி சுற்றுச்சூழலை தூய்மையாக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
தற்சமயம் நகர்புற மற்றும் கிராமப்புற சாலைகளில் வாகனத்தின் செயல்திறனை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் வணிகரீதியாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பு எடை தாங்கும் திறனை மேம்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில் : ஸ்ரீவித்யா