இஎம்ஐ செலுத்த ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி!
ரெப்போ ரெட் விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைத்து அறிவித்த நிலையில் அடுத்த இரு மாதங்களில் மீண்டும் 40 புள்ளிகளைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
கடனுக்கான தவணை (emi) செலுத்தும் காலக்கெடு மேலும் 3 மாத காலம் நீட்டிக்கபடுவதாகவும், குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ ரேட் விகிததம் 4.4%-லிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 27-ம் தேதி ரெப்போ ரெட் விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைத்து அறிவித்த நிலையில் அடுத்த இரு மாதங்களில் மீண்டும் 40 புள்ளிகளைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த வட்டிக்குறைப்பின் மூலம் வங்கிகளில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழிலுக்காக கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணைக்கான வட்டி பெருமளவு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது வங்கிக்கடனுக்கான தவணைகள் மீதான மூன்று மாத கால தற்காலிக செயல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல இந்த முறையும் கடனுக்கான தவணையைச் செலுத்தும் காலத்தை கூடுதலாக 3 மாதங்கள் அதாவது, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்வதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.
இதன் மூலம் கடனுக்கான தவணை செலுத்தும் அவகாசம் 6 மாதங்களாக கடந்த மார்ச் மாதம் முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் மக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்கும்.
கொரோனா லாக்டவுனால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல், வேலை இழப்பு என பல வழிகளில் மக்கள் வருமானமில்லாமல் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று வந்த அறிவிப்பால் மக்கள் தவணையை செலுத்த கால அவகாசம் கிடைத்துள்ளது சற்று ஆறுதலான விஷயமாகக் கருதப்படுகிறது.
தகவல்: பிடிஐ