முகத்தை பாதுகாக்கும் ‘ஃபேஸ் ஷீல்ட் 2.0’ உருவாக்கியுள்ள பொறியியல் மாணவர்!
இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் படிக்கும் மாணவரான பி. மோகன் ஆதித்யா மக்கும்தன்மை கொண்ட பாதுகாப்புக் கவசத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினருக்கு உதவும் வகையில் பலர் புதுமையான கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் மக்களின் நடமாட்டத்தை மட்டுமே முடக்கியுள்ளது. புதுமையான சிந்தனைகளுக்கு எதுவும் தடையாக இருக்கமுடியாது. அந்த வகையில் ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்.
அந்த மாணவர் பெயர் பி மோகன் ஆதித்யா. மெக்கானிக்கல் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். முகத்தை முழுமையாக பாதுகாக்கும் கவசத்தை இவர் உருவாக்கியுள்ளார்.
மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் இந்தக் கவசத்தின் பெயர் 'ஃபேஸ் ஷீல்ட் 2.0’. இந்தக் கவசம் கல்வி அமைச்சர் அடிமுலாப்பு சுரேஷ், எம்பி நந்திகம் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் லேசானது. அணிந்துகொள்ள வசதியாக இருக்கும். நிலைத்திருக்கக் கூடியது. இதை அணிந்துகொள்பவர்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் பிற வைரஸ் அல்லது பாக்டீரியாக்களில் இருந்து முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் படிக்கும் பி மோகன் ஆதித்யா ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக உருவாகக்கூடியவர் என்பதை அவரது கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மிகக் குறைந்த விலையில் முகத்தை முழுவதுமாகப் பாதுகாக்கக்கூடிய மிகவும் பயனுள்ள கவசத்தை கண்டுபிடித்துள்ளார்,” என்று `தி ஹான்ஸ் இந்தியா’ குறிப்பிட்டுள்ளது.
தலையில் பொருத்தப்படும் பட்டை (Headband) மூன்றடுக்கு அட்டையால் ஆனது. இது மக்கும் தன்மை கொண்டது. இந்தக் கவசத்தில் உள்ள 175 மைக்ரான் பிளாஸ்டிக் ஷீட் மறுபயன்பாட்டிற்கு உகந்தது.
இது சிஎன்சி இயந்திரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வடிவமைப்பு தயாரானதும் CAD மூலம் பிளாஸ்டிக் ஃபிலிம் வடிவம் உருவாக்கப்படுகிறது.
“நான் CAD மாடலை சிஎன்சி இயந்திரத்தில் உள்ளீடாகக் கொடுத்தேன். சிஎன்சி இயந்திரத்தின் மென்பொருள் CAD மாடலை ஆராய்ந்து உள்ளீடாக வழங்கப்பட்ட வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அட்டையையும் ட்ரான்ஸ்பரண்ட் ஷீட்டையும் கட் செய்யும். இதனால் முகத்தை முழுவதுமாகப் பாதுகாக்கக்கூடிய கவசத்தைத் தயாரிக்கும் பணியும் அவற்றை ஒன்றிணைத்து பொருத்தும் பணியும் இரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே முடிந்துவிடும்,” என்று EdexLive இடம் ஆதித்யா தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் பி. சத்யநாராயணன், சார்பு துணைவேந்தர் பேராசிரியர் டி. நாராயண ராவ் ஆகியோர் இந்தக் கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளனர். மாநில அரசாங்க அதிகாரிகளும் மாணவரின் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA