செடிகளைப் பயன்படுத்தி நோய்களுக்கு நிவாரணமளிக்கும் சமூக தொழில்முனைவர்!
சுமா மன்சில் தனது முயற்சியைத் துவங்கிய ஐந்து மாதங்களுக்குள்ளாகவே பல்வகையான நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு உதவியுள்ளார். அத்துடன் சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் வீட்டிற்குள்ளேயே வளர்க்கப்படும் செடிகளையும் வளர்க்கிறார்.
உங்களது கண்களை மூடிக்கொண்டு அடர்ந்த பசுமையான காடு ஒன்றை காட்சிப்படுத்திப் பாருங்கள். உங்களைச் சுற்றி செடிகள் இருந்தால் அது உங்களது மன ஆரோக்கியத்திலும் மகிழ்ச்சியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதுமட்டுமல்ல செடிகள் உடலில் ஏற்படும் காயங்களையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
53 வயது சமூக தொழில்முனைவரான சுமா மன்சில் மாசு காரணமாக ஏற்படும் சுவாசப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மக்கள் தங்களது வீட்டைச் சுற்றி பசுமைப் போர்வையை அதிகரிக்கச் செய்ய உதவி வருகிறார். வீட்டிற்குள்ளேயே தோட்டம் ஒன்றை அமைக்க, காற்றில் இருக்கும் மாசுகளை எளிதாக அகற்றும் திறன்கொண்ட செடி வகைகளை இவர் தேர்வுசெய்கிறார். இவர் ’தி நியூஸ் மினிட்’ உடன் உரையாடுகையில்,
“நகரில் காணப்படும் மாசு பிரச்சனை எனக்கு எப்போதும் கவலையளித்தது. கொச்சி மெட்ரோ கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டபோது எனக்கும் பல குடியிருப்புவாசிகளுக்கும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டது. எனவே என்னுடைய பெற்றோர் இறந்த பிறகு அவர்களது வீட்டில் சிறியளவிலான ஒரு தோட்டத்தை அமைத்தேன்,” என்றார்.
சுமா ப்ளாஸ்டிக் பானைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பீர் பாட்டில்கள், இறக்குமதி செய்யப்பட்ட பீங்கான் பாத்திரங்கள் போன்ற மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தக்கூடிய கழிவுப்பொருட்களை தேர்வு செய்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறியளவில் துவங்கப்பட்ட இவரது முயற்சி தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளது. இதுவரை நோய் பாதிக்கப்பட்ட சிலருக்கு உதவியுள்ளார். இவரது செடிகளை விற்பனை செய்வதன்மூலம் ஈட்டப்படும் வருவாய் நோயாளிகளின் சிகிச்சைக்கு செலவிடப்படுவதாக ’இண்டியன் வுமன் ப்ளாக்’ தெரிவிக்கிறது. வீட்டிற்குள்ளேயே வளர்க்கப்படும் செடிகளை விற்பனை செய்து பணத்தேவை இருப்போரின் சிகிச்சைக்கு உதவுகிறார்.
இந்த முயற்சியை மேற்கொண்டதற்கான காரணத்தை சுமா விவரிக்கையில்,
“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னுடைய அப்பா டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் அவர் உயிரிழந்தார். என்னுடைய அம்மாவும் சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதம் காரணமாக உயிரிழந்தார். என்னுடைய அப்பா டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டம் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான நாட்களாகவே இருந்தது. சிகிச்சைக்கு செலவிடும் நிலையிலும் தேவையான ஆதரவை வழங்கும் நிலையிலும் நாங்கள் இருந்தபோதும் அது கடினமான நாட்களாகவே இருந்தது. இந்த சூழலே அன்றாட மருந்து தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள இயலாத நிலையில் போராடுபவர்கள் குறித்து சிந்திக்க வைத்தது,” என தெரிவித்தாக ’தி நியூஸ் மினிட்’ தெரிவிக்கிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA