தமிழகத்தில் தொழில் முனைவோர் பெருந்திரளாக தொழில் தொடங்க முன் வரவேண்டும்!
ஆரஞ்ச் ஸ்கேப் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் உற்சாகமான பேச்சு...
தமிழகம் இரண்டு முக்கியமான சாதனைகளை இதுவரை செய்திருக்கிறது. அடுத்து அதிக தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும். இதுதான் தமிழகத்தின் தற்போதைய தேவை என ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் பேசினார்.
கடந்த 4-ம் தேதி ’யுபிசி கிக்ஸ்டார்டர் 2019’ என்னும் தொழில்முனைவோர்களுக்கான சந்திப்பு நடந்தது. இதில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சி.கே குமரவேல், ஃபிளின்டோபாக்ஸ் நிறுவனத்தின் அருண் பிரசாத், யப் டிவியின் விஜய் ஆதிராஜ், ஏவம் நிறுவனத்தின் கார்த்திக்குமார் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ஆரஞ்ச் ஸ்கேப் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் தமிழகம் இதுவரை செய்த சாதனைகளையும், இனி செய்ய வேண்டியவ குறித்தும் பேசினார்.
அவர் பேசியதின் முழுமையான வடிவம் இதோ:
தமிழகத்தில் மெத்த படித்தவர்கள் அனைவரும் சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகத்தில் பல விஷயங்கள் இல்லை, அதனால் வெளிநாடு செல்கிறோம் என்று. ஆனால் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்று தொடங்கினார் சுரேஷ்.
சுதந்திரம் அடைந்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் இந்த நிலையில் இன்று இருக்கிறது.
இந்தியாவில் அதிக தொழில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் தொழிற்சாலைகள் மூலம் அதிக வேலைவாய்ப்பு உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். தமிழ்நாடு என்று பெயருக்காக சொல்லவில்லை. மத்திய அரசின் தகவல் மூலம் இதனை புரிந்துகொள்ளலாம்.
தொழிற்சாலை மூலமாக தமிழகத்தில் 23 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மகாராஷ்ட்ராவில் 18 லட்சம் என்னும் அளவில்தான் தொழிற்சாலை மூலம் வேலைகள் உருவாகி இருக்கிறது. தொழில்களும் அதிகம், வேலைவாய்ப்பு உருவாக்குவதிலும் அதிகம் என்றாலும் மாநில ஜிடிபியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம் பெரும்பாலான நிறுவனங்களின் தலைமையகம் மும்பையில் இருப்பதுதான்.
சமூக குறியீடுகள்
தொழில்துறையில் மட்டுமல்ல சமூக மேம்பாட்டு குறியீடுகளிளும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்று தரவுகளுடன் பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார் சுரேஷ் சம்பந்தம்.உதாரணத்துக்கு,
- Gross enrollment ratioஅதாவது 18 வயது முதல் 23 வயதுக்குள் கல்லூரி படிப்பவர்களின் சதவீதம்தான் Gross enrollment ratio ஆகும். இந்த விகிதம் தமிழ்நாட்டில் 46.9 சதவீதமாக இருக்கிறது. தேசிய சராசரி 25.2 சதவீதம் மட்டுமே. இதற்கு மிக அடிப்படையான காரணம் தமிழகத்தில் பெண்கள் கல்லூரிகளுக்கு செல்லும் விகிதம் அதிகம். தேசிய அளவிலும் பெண்கள் கல்லூரிக்கு செல்லும் பட்சத்தில் இந்த விகிதம் இரு மடங்காக உயரும்.
- அடுத்ததாக குழந்தை இறப்பு விகிதம். 2016-ம் ஆண்டில் இந்தியாவில் 1,000 குழந்தைகள் பிறந்தால் இதில் 34 குழந்தைகள் துரதிஷ்டவசமாக இறக்கின்றன. ஆனால் தமிழகத்தில் 1000 குழந்தைகளில் 17 குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன. தமிழகம் போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ சேவை கிடைத்தால் மட்டுமே இந்த விகிதம் இவ்வளவு குறைவாக இருப்பது சாத்தியமாகும்.
- அடுத்து சமூக ஏற்றத்தாழ்வுகள். சமூகத்தில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கும் பட்சத்தில், சமூக அமைதியின்மை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச சூழல் அதுவாகவேக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கையே அதிகமாகும். இதுபோல பல குறியீடுகளில் தமிழகம் மேம்பட்ட சூழலில் இருக்கிறது என்று காட்டுகிறது.
- தமிழகம் குறித்து வைக்கப்படும் மற்றொரு விமர்சனம் டாஸ்மாக். இதனுடைய வருமானத்தில் தமிழகம் இயங்குகிறது என்றும் தமிழகத்தில் அனைவரும் குடிக்கிறார்கள் என்னும் கருத்து மேலோங்கி இருக்கிறது. ஆனால் இதில் உண்மையில்லை. டாஸ்மாக் மூலமாக கிடைக்கும் வருமானம் ரூ.27,000 கோடி மட்டுமே. ஆனால் தமிழக ஜிடிபியில் இது 1.67 சதவீதம் மட்டுமே. இந்தியாவில் அதிக ஆல்கஹால் பருகும் மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை.
வளர்ச்சிக்கான காரணம்?
சமூக குறியீடுகள், தொழில் குறியீடுகள் என பலவற்றிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை. முதல் தலைமுறையில் தமிழகம் பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 1950களில் 6,000 பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஆனால் 1960களில் 27,000 பள்ளிகள் உருவாக்கப்பட்டன. அப்போதைய குழந்தைகளில் 77 சதவீதம் பள்ளிக்கு சென்றனர். பள்ளிக்கல்வி வெற்றியடைந்தது சத்துணவுத் திட்டமே காரணம் என்று சொல்லுவார்கள். ஆனால் அதைவிட முக்கியம் பள்ளிகளை உருவாக்க அது உதவியதே.
ஒரு தலைமுறை படித்தாகிவிட்டது. அடுத்து உயர்கல்வி. 1980 முதல் 2000-ம் ஆண்டுவரை 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன.
பொறியியல் கல்வி குறித்த அடுத்த குற்றச்சாட்டு, தரமான மாணவர்கள் இல்லை என்பது. ஆனால் இந்தியாவில் முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. தெற்கு ஆசியாவில் தரமான பொறியியல் மாணவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர்.
அடுத்ததாக இட ஒதுக்கீடு மூலம் பல சமூகங்களின் வாழ்க்கைதரம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் நாம், நம்முடைய தமிழை தற்காத்துக்கொண்டும், அதே சமயத்தில் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணமாகும்.
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்னும் குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படி இருந்தால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் சானல் தொடங்க மாட்டார்கள். பேடிஎம் நிறுவனம் தமிழில் விளம்பரம் செய்யாது. பல நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்தும் கொடுக்க மாட்டார்கள். தமிழ் சினிமா சந்தை மிகப்பெரிய சந்தையாக உருவாகி இருக்காது.
கன்னடா மற்றும் மராத்திய சினிமாத் துறை பெரிய அளவில் வளரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். மொழி இருந்தால்தான் சினிமா, வியாபாரம் உள்ளிட்டவை இருக்கும்.
நம்முடைய தமிழகத்துக்கு மகாராஷ்டிரா மாடல் வளர்ச்சியோ அல்லது குஜராத் மாடல் வளர்ச்சியோ நமக்குத் தேவையில்லை. நம்முடைய மாடலை அவர்கள் பின்பற்றாலாம் என்னும் அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம் என்று சுரேஷ் சொல்லி முடிக்கையில், பங்கேற்பாளர்கள் கரகோஷம் எழுப்பினர்.
அடுத்து என்ன?
முதல் தலைமுறையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அடுத்த தலைமுறையில் கல்லூரி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன்றாம் தலைமுறையின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் முதல் இரண்டு தலைமுறையில் செய்த நல்லவையால் மட்டுமே நாம் தற்போதைய நிலைமையில் இருக்கிறோம்.
மூன்றாம் தலைமுறை ஆகிய நாம் செய்ய வேண்டியது தொழில்முனைவு. இதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். பலரும் திரளாக தொழில்முனைவில் களம் இறங்க வேண்டும். தமிழகத்தில் படிப்பவர்களுக்கு இங்கேயே பணி புரிவதற்கான சூழலை உருவாக்க முடியும்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி 5 டிரில்லியன் டாலர் என்னும் அளவுக்கு உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் 20 சதவீத (ஒரு டிரில்லியன் டாலர்) பங்களிப்பினை தமிழகம் வழங்க முடியும். தமிழக இளைஞர்கள் தொழில்முனைவு பாதையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.
இதனிடையே மக்களின் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக்கொள்வதும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஆகியவற்றை அரசாங்கம் செய்ய வேண்டும். ஏனெனில் மக்களின் மகிழ்ச்சியை குறைத்து, சுற்றுச்சூழலை நாசப்படுத்தி ஒரு டிரில்லியன் டாலர் என்னும் வளர்ச்சி தேவையற்றது, எனக் கூறினார்.