மும்பை தீ விபத்தில் 10 உயிர்களை காப்பாற்றிய ஸ்விகி டெலிவரி பாய்!
உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பாய்களை பற்றி எதிர்மறையான கருத்து பரவி வரும் நிலையில், ஸ்விகி விநியோகம் செய்யும் டெலிவரி பாய் ஒருவர் ஹீரோவைப் போல் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் 10 உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
மும்பையில், திங்கள் அன்று எப்பொழுதும் போல் உணவு விநியோகம் செய்யக் கிளம்பியுள்ளார் 20 வயது டெலிவரி பாய் சித்து ஹுமன்பதே. அன்று மாலை கம்கர் மருத்துவமனையில் இருந்து புகை வருவதைக் கண்ட சித்து, சற்றும் யோசிக்காமல் மீட்புப் பணியில் இறங்கிவிட்டார்.
கம்கர் மருத்துவமனை திடிரென்று தீப்பிடித்து எரிய 10க்கும் மேலானோர் பலி ஆயினர், அப்பொழுது அப்பக்கம் ஸ்விக்கி டெலிவரிக்கு வந்த சித்து அங்கேயே தன் வண்டியை போட்டுவிட்டு உடனடியாக மீட்புப் பணியில் இணைந்துவிட்டார்.
“தீயணைப்பு வீரர்கள் தங்களது வேலையை செய்துக்கொண்டிருந்தனர்; அவர்களுடன் இணைந்து மீட்புப் பணியை செய்ய அனுமதித்ததற்கு நன்றி. அவர்களின் உதவியோடு ஏணி வழியாக நான்காவது மாடிக்குச் சென்று, ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தேன்,”
என்கிறார் தற்போது சவன் ஹில்ஸ் மருத்தவமனை, அந்தேரியில் சிகிச்சைபெற்று வரும் சித்து. உள்ளே நுழைந்து 3 மற்றும் 4வது மாடியில் உள்ளவர்களை ஏணி வழியாக கீழே இறக்க உதவி செய்த்துள்ளார். புகை மூட்டமாக இருந்த நிலையிலும் தன்னால் முடிந்தவரை உதவியுள்ளார் இவர்.
3 மணிநேரம் மீட்டுப் பணியில் ஈடுப்பட்டு 10க்கும் மேலோரைக் காப்பாற்றிய சித்துவிற்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார். தற்பொழுது உடல் நலம் தேறி வருகிறார்.
“முகத்தில் கைக்குட்டை அணிந்து தான் மீட்புப் பணியில் இணைந்தேன். சிறிது நேரம் கழித்து அது கீழே விழுந்ததால் புகையை சுவாசித்து நெஞ்சு வலி ஏற்பட்டது,” என்கிறார்.
அவரது பைக் மற்றும் அதிலிருந்த உணவுகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டு சித்துவின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நமக்கு என்னவென்று பிரச்சனையை பார்த்தும் பாக்காமல் போகும் இந்தக் காலத்தில் சித்துவை போன்ற நல்லுள்ளங்களும் உள்ளது.
தகவல் உதவி: இந்தியா டுடே