ஆடை வடிவமைப்பில் சிகரம் தொட்ட ஜ்யோதி சச்தேவ் ஐயர்!
ஆடைகள் உலகை மாற்றப் போவதில்லை. அவற்றை அணியும் பெண்கள் தான் உலகை மாற்றுவார்கள் -ஆன் க்ளெய்ன்.
ஜ்யோதி சச்தேவ் ஐயரின் வடிவமைப்பு அடையாளத்தின் உயிர் நாடி, இந்தத் தத்துவம் தான். அவர் உருவாக்கியிருக்கும் இந்த அடையாளம், தங்கள் தேவைகளை அறிந்த, வழி நடத்தத் தயாராக இருக்கும் இன்றைய பெண்களைப் பற்றியது. தங்களுடைய விருப்பங்களை தாங்களே முடிவு செய்கிற, தனித்து தெரிவதிலோ, டிரெண்ட்செட்டராக இருப்பதற்கோ பயப்படாத பெண்களைப் பற்றியது.
மேற்கத்திய ஓவியங்களோடு, மெல்லிய வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள் தான் ஜ்யோதி ஐயரின் வடிவமைப்பின் அடையாளம். கொல்கத்தாவில், அவருடைய கடைகளில் இருக்கும், எண்ணற்ற வண்ண ஆடைகள், பெண்களை தமக்கென ஆடை தேர்வு செய்ய அழைக்கும் அளவு அழகானவை. இணைய வணிகம் மற்றும் கொல்கத்தாவிற்கு மாற்றலானது பற்றியும் பேசிய போது :
பெங்களூர்-டில்லி-கொல்கத்தா
பெங்களூரில் பிறந்த ஜ்யோதி, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தது பெங்களூரிலே தான். அவர், தான் படைப்பாற்றல் மிக்கவர் தான் என்பதை அறிந்திருந்தாலுமே, ஆடை வடிவமைப்பு அவரது துறையாக இருக்கும் என நினைத்ததே இல்லை. “கல்லூரியில், நுண் கலை தேர்வு செய்யும் வரை நான் எப்போதுமே ஆக்கப்பூர்வமாகத் தான் இருந்திருக்கிறேன் என்பதை உணரவே இல்லை” என்னும் ஜ்யோதி, கல்லூரியில் தான், ஃபேஷன் தனது துறை என உணர்ந்திருக்கிறார்.
பெங்களூரில் கல்லூரி படிப்பு முடித்த பிறகு, டில்லியில் நிஃப்டில் (NIFT) படித்து, டில்லியிலேயே தனது முதல் ஸ்டுடியோவைத் திறந்திருக்கிறார். டில்லியில் வெற்றிகரமான இருபது வருடங்களுக்கு பிறகு, நான்கு வருடங்களுக்கு முன், அவர் கொல்கத்தாவிற்கு செல்ல நேர்ந்தது.
ஜ்யோதியின் கணவர்,வேலை காரணமாக கொல்கத்தாவிற்கு மாற்றலாக, அவரோடு கூட செல்வதாய் முடிவு செய்தார் ஜ்யோதி. ஒரு புதிய நகரத்திற்கு வந்திருந்த போதிலும், அவருடைய வேலை சிறப்பாக சென்று கொண்டிருந்தது, ஆச்சரியமானது. தற்போது கொல்கத்தாவில் ஒரு அழகான ஸ்டுடியோவை அமைத்திருக்கிறார் ஜ்யோதி.
பல சர்வதேச மற்றும் இந்திய ஃபேஷன் ஷோக்களை நடத்திய ஜ்யோதிக்கு, பிரபல டிசைன் நிறுவனங்களான லா-பெர்லா, ஃபெண்டி மற்றும் கென்ஸோவுடன் பணி புரிந்த அனுபவமும் இருக்கிறது. இவர் வடிவமைத்த ஆடைகள் லண்டன், மிலன் மற்றும் சிட்னி நகரங்களின் பிரபல கடைகளிலும் இருக்கின்றன.
ஓவியங்களும், வடிவமைப்பும்
“ஓவியங்கள் முற்றிலும் மேற்கத்தியவை தான், அவற்றில் அதிகப்படியான ‘ட்ரேப்பிங்’கும், துணியின் விளையாட்டும், அழகு வேலைப்பாடுகளும் இந்திய உணர்வை வெளிக்கொணர்கின்றன. ‘ட்ரேப்ஸ்’ வகைகளில் சிறந்த ஆடை, சேலைகள் தான், என நினைக்கிறேன். என்னை ஊக்கப்படுத்துவதும் அவை தான்” என்னும் ஜ்யோதி, தனக்கென தேர்வு செய்வது சாதாரணமான ஜீன்ஸும், டி-ஷர்ட்டும். “ஏதாவது மாலை வேளைகளில், வெளியே செல்லும் போது, நான் வடிவமைக்கும் ஆடைகள் போன்றவற்றை அணிவதும் பிடிக்கும்”.
இந்தியாவில் பல துணி வகைகள் இருப்பதனால், ஒவ்வொரு காலத்திற்கேற்ப விதவிதமான துணியில் வடிவமைப்பது, ஜ்யோதியை உற்சாகப்படுத்துகிறது. ஒவ்வொரு பெண்ணும், தான் வடிவமைத்த ஆடை ஒன்றையாவது வைத்திருக்க வேண்டும் என்பது ஜ்யோதியின் விருப்பம்.
ஆட்ரி ஹெப்பர்னின் ஃபேஷன் அறிவு மற்றும் ஸ்டைலை ரசிக்கும் ஜ்யோதிக்கு, இன்றைய விருப்பம், தான் எங்கு இருந்தாலுமே சிறப்பாக தோன்றி, நிலையான அழகில் மயக்கும் ஏஞ்சலினா ஜோலி தான்.
ஃபேஷன் துறை
கடந்த இருபது வருடங்களாக, இந்தியாவில் வடிவமைப்பாளர்கள் அதிகரித்திருப்பது உண்மை. சில வருடங்களுக்கு முன், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் வடிவமைப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால், இன்று, தங்களது தனித்தன்மையுடன் செயல்பட்டு வரும் வடிவமைப்பளர்களின் பட்டியல், மிகப் பெரியது. இந்த மாற்றத்தைப் பற்றி பேசுகையில், “இந்த உலகம் சிறிய இடமாக ஆகிக் கொண்டிருக்கிறது. எல்லாமே எளிதாக எட்டக் கூடிய நிலையில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும், சர்வதேச சந்தையை அணுக முடியும், அதற்கு, தொழில்நுட்பத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதன் காரணமாகத் தான் இந்தத் துறையின் மேல் இவ்வளவு வெளிச்சம் பாய்கிறது”, என்கிறார்.
அவரைப் பொறுத்தவரை, இந்திய வாடிக்கையாளர்கள், பலவும் அறிந்தவர்களாகவும், சோதனை செய்து பார்ப்பதில் ஆர்வமுடையவர்களாகவும் இருக்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆடைகளில் மீது கவனம் செலுத்தும் பெண்களின் எண்ணிக்கையும், அதிகரித்துள்ளது. இது வடிவமைப்பாளர்களுக்கு ஒரு நெடிய மேடையை அமைத்திருக்கிறது என்கிறார் ஜ்யோதி.
ஒவ்வொரு வருடமும் ஏதாவது புதிதாகவும், வேறுபட்டதாகவும் இயங்கிக் கொண்டே இருப்பது தான் ஃபேஷன் உலகில் ஏற்படும் முக்கியமான மாற்றம். “இந்த வருடத்தை நீங்கள் கவனித்து இருந்தால்,டெக்ஸ்டைலும் கைத்தறியும் தான் பிரபலமாக இருந்தது என்பது தெரியும். ஆனால் அடுத்த வருடம், நிச்சயம் வேறு விஷயம் தான் பிரபலமாக இருக்கும்”.
சவால்கள்
ஒரு புதிய நகரத்திற்கு வருவதும், மாறுபட்ட சந்தையை சந்திப்பதும், கண்டிப்பாக சவால் தான். அது மட்டுமின்றி, கொல்கத்தாவின் சந்தைப் பெரியது. யாரையுமே தெரிந்திராத நகரத்தில், இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் ஜ்யோதி, சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
திறனுள்ளவர்களை பணியிலமர்த்தி, அவர்களுக்கு பயிற்சி அளித்து, பின் புதிய பணியாளர்களுடன் அதையே திரும்ப திரும்ப செய்யச் சொல்வது தான், ஜ்யோதி போன்ற வடிவமைப்பாளர்களுக்கு முக்கியமான சவாலாக இருக்கும்.
சவால்களால் துவண்டு போகாத ஜ்யோதி,உற்சாகமாக, “ஒவ்வொரு தினமும் சவால் தான். பணியாளர்களுடன் சண்டை, டிசைன்கள் சரியாக வரவில்லை என எதுவாக இருந்தாலுமே, நீங்கள் புதுமை செய்து கொண்டு நகர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும், அது தான் படைப்பாற்றலின் அடையாளம்” என்கிறார்.
தொழிநுட்பமும், ஃபேஷனும்
தொழில்நுட்பம், ஃபேஷனின் கதவுகளை திறந்து வைத்துள்ள வேளையில், ஆன்லைனில் இருக்க வேண்டிய தேவையை உணர்கிறார் ஜ்யோதி. இணைய வணிகத்தில், எங்கள் இடத்தைப் பெறுவதற்காக வேலை செய்துக் கொண்டு இருக்கிறோம். இதன் மூலமாக, ஆடைகளை பெரிய அளவிலான பார்வையாளர்களுக்கு முன் வைத்து, வியாபாரத்தை வளர்க்கிறோம்”.
அடுத்த ஐந்து வருடங்களில், “பல நாடுகளிலிருந்து கலையை கொண்டு வந்து, அவற்றை அனைத்தையும் ஒன்றாக்கி, வேறொன்றாக மாற்றும், வித்தியாசத்தை ஏற்படுத்தும் வடிவமைப்பாளர்களின் மத்தியில் இருக்க விரும்புகிறேன். அடுத்த ஐந்து வருடங்களில் கற்க நிறைய இருக்கிறது, மேலும், இன்னும் பல நாடுகளில் எங்கள் ஆடைகள் இருக்கும் என நம்புகிறோம்”, என்கிறார்.
ஃபேஷனையும், வடிவமைப்பையுமே சுவாசிக்கும் ஜ்யோதியை ஊக்கப்படுத்துவதும் அவைதான். “என்னால் இதை செய்ய முடியாது என்று நான் நினைக்கும் நாள் தான், என் வியாபாரத்தின் முடிவாக இருக்கும். எனக்கு ஒவ்வொரு நாளும் புதிது, சவால்கள் என்னை உற்சாகப்படுத்தும். என்னை சுற்றி தினமும் என்ன நடக்கிறது என்று கற்றுக் கொள்கிறேன். அது தான் வளர்ச்சியின் வழி என நான் நினைக்கிறேன்”, தன்னுடைய வேலை தரும் திருப்தியோடும், நம்பிக்கையோடும் அமைதியாக நிறைவு செய்கிறார்.