சொத்தை அபகரித்து சோறு போடாத மகன்கள்: சவுக்கடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!
பெற்றோரின் நிலத்தை அபகரித்து அவர்களுக்கு உணவு கூட வழங்காத மகன்களுக்கு பாடம் புகட்டும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எடுத்த அதிரடி நடவடிக்கை பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இல்லறத்தின் அடையாளமாகவும் சந்ததியை வளர்த்தெடுக்கவும் மகன் வேண்டும் என்று தவமாய் தவமிருந்து பெற்றெடுக்கின்றனர் பெற்றோர். கருவில் உருவானது முதல் வெளிஉலகிற்கு வந்து பதின்பருவம் எட்டும் வரை கண்ணும் கருத்துமாக வளர்த்து சமூகத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்து ஒரு அடையாளத்தையும் உருவாக்கிக் கொடுக்கின்றனர். தான் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் தன்னுடைய மகன் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் உழைத்தே களைத்துப் போகிறவர்கள் ஏராளம்.
வளர்ந்த பின்னர் மகன்கள் செய்யும் கைமாறு என்ன தெரியுமா, வசதி படைத்தவர்களாக இருந்தால் முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவது. குறைந்த வசதி படைத்தவர்களாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு அவர்களை பற்றிய எந்த கவலையும் இன்றி தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொள்வது. பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்று சட்டம் போடும் அளவிற்கு நாட்டில் பாசமும், பொறுப்புணர்வும் பற்றாக்குறை ஆகிவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர் கண்ணன், பூங்காவனம் தம்பதியை மகன்கள் கைவிட அவர்கள் சோர்ந்து போகாமல் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயது விவசாயி கண்ணன், இவரது மனைவி 63 வயது பூங்காவனம். கண்ணன், பூங்காவனம் தம்பதிக்கு பழனி மற்றும் செல்வம் என இரண்டு மகன்கள். முதல் மகன் பழனிக்கு 40 வயதாகிறது இவர் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார், இளைய மகன் செல்வத்திற்கு 37 வயதாகிறது இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் வீதம் தான செட்டில்மென்ட் பத்திரப் பதிவு மூலம் எழுதி வைத்தார். அதன்பிறகு, மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சோறு போடாமல் தவிக்கவிட்டனர்.
இளைய மகன் செல்வம், தந்தையை அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். உணவுக்கும் வழியின்றி மனைவியுடன் தவித்த கண்ணன், இருவரும் தலா 60 சென்ட் நிலத்தையாவது கொடுங்கள், விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் என கேட்டும், மகன்கள் மறுத்துவிட்டனர். இதனால் கண்ணன், அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர், கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.
அவரது உத்தரவின்பேரில், ஆர்டிஓ (பொறுப்பு) உமாமகேஸ்வரி, அவரது மகன்களை அழைத்து விசாரித்தார். அப்போது, மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும், 60 சென்ட் நிலத்தை தருவதாகவும் தெரிவித்தார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம், ஆர்டிஓ ஓப்படைத்தார்.
இதை தொடர்ந்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி; கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்தை நேரில் அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை வழங்கினார். மகன்களே கைவிட்ட நிலையில் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஆட்சியர் எடுத்த நடவடிக்கைக்கு முதியவர்கள் இருவரும் கண்கலங்கி நன்றி தெரிவித்தனர்.
பெற்றொரின் சொத்தை அபகரித்துகொண்டு, கவனிக்கத் தவறும் பிள்ளைகளுக்கு பாடமாக இந்த நடவடிக்கை அமையும் என்று ஆட்சியர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.
பெற்றோரை கைவிடும் மகன்களுக்கு சரியான சாட்டையடி கொடுக்கும் விதமாக ஆட்சியர் கந்தசாமி எடுத்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதிரடி நடவடிக்கை மூலம் முதியவர்களின் மனம் குளிர வைத்த ஆட்சியருக்கு சல்யூட்!