இந்தியச் சட்டப்படி Facebook நடக்கவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள், இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்காதது, சட்டம் ஒழுங்கின்மையை அதிகரிப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இதர சமூக ஊடக நிறுவனங்கள், இந்தியச் சட்டங்களுக்கு கீழ்படிந்து நடப்பதில்லை என்றும், இதனால் சட்டம் ஒழுங்கின்மை அதிகரித்து, குற்றங்களை கண்டறிவது கடினமாவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை, சமூக ஊடக கணக்குகளுடன் இணைக்க கோரும் மனு தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், தொடர்ந்து விசாரிக்கலாம், ஆனால் தீர்ப்பு வழங்கக் கூடாது எனும் ஆகஸ்ட் 20 உத்தரவிலும் மாற்றம் தேவை என வேண்டுகோள் வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற விசாரணை மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக, இந்த மனுக்கள் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்திருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”உடனடி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வழியில்லாத நிலையில், மனுதாரர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் (ஃபேஸ்புக்) இந்திய சட்டத்திற்கு உட்பட்டு அல்லது கீழ்படிந்து நடக்காமல் இருப்பதை தொடர வழி வகுக்கும். அதிகரிக்கும் சட்ட ஒழுங்கின்மை, குற்றங்களை தடுப்பது, கண்டறிவது கடினமாவது மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பில் இதை ஏற்கனவே பார்க்க முடிகிறது,” என தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
பல்வேறு கிரிமினல் வழக்குகளை சுட்டிக்காட்டி, இந்த குற்றங்களை கண்டறிய மற்றும் விசாரணையில் புலனாய்வு அமைப்பினர் பலமுறை இந்த நிறுவனங்களிடம் தகவல் கோரியதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
“ இந்த நிறுவனங்கள் பதில் அளித்து, உரிய முறையில் தகவல்களை அளிப்பதற்கு பதில், இந்திய மண்ணில் செயல்பட்டு வருவதை மீறி, முறையான கடிதம் அனுப்புமாறு கூறுவதாகவும், பெரும்பாலான நேரங்களில் முழுமையான தகவல்களை அளிப்பதில்லை,” என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சென்னை, மும்பை மற்றும் மத்திய பிரதேச நீதிமன்றங்கள் முன் உள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் ஃபேஸ்புக் மனு, தவறான, திசை திருப்பும் தகவல்களை கொண்டிருப்பதாகவும், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மட்டுமே வழக்குகள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக மாற்றம் கோரும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, மற்றும் அதன் பிறகு உண்டாக்கப்பட்ட விதிகளை பின்பற்றி நடப்பது மற்றும் குற்றங்களைக் கண்டறிந்து தடுப்பதை, நீதிமன்றம் நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.”
சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரும் மனுக்களை, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் ஃபேஸ்புக் மனு தொடர்பாக, மத்திய அரசு, கூகுள், வாட்ஸ் அப், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 20 உத்தரவிட்டது.
ஃபேஸ்புக் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் செப்டம்பர் 13 க்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.
இது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், குற்றவியல் விசாரணைக்காக சேவை நிறுவனங்கள் தரவுகளை புலனாய்வு அமைப்புகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்பதை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என ஃபேஸ்புக் தரப்பில் கோரப்பட்டது.
பல்வேறு நீதிமன்றங்கள் மாறுபட்ட கருத்து கொண்டிருந்ததாகவும், சீரான தன்மைக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் ஃபேஸ்புக் தெரிவித்தது. தரவுகளை மூன்றாம் தரப்புடன் பகிர்ந்து கொள்வது பயனாளிகள் தனியுரிமை தொடர்பானது என்றும், இத்தகைய வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் ஃபேஸ்புக் கோரியது.
பொது நலன் அடிப்படையில், ஆதார் எண் தனியாருடன் பகிரப்பட வேண்டும் என ஆதார் சட்டத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தம், எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும் என்று விளக்குமாறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரிப்பதில் சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்பை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், பொய்ச்செய்திகள், ஆபாச தகவல்கள் மற்றும் பயங்கரவாத செய்திகளை அனுப்பியவர்களை கண்டறிய இது உதவும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் செய்திகளை அனுப்பியவர்களை கண்டறிய ஐஐடி பேராசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்