பொது கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்த ஃபேஸ்புக் இந்தியா!
ஐஏஎஸ் அதிகாரியாக 26 வருட அனுபவம் கொண்ட ராஜீவ் அகர்வால் நியமனம்!
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் உபர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியுமான ராஜீவ் அகர்வால் என்பவரை தங்கள் நிறுவனத்தின் பொது கொள்கை இயக்குநராக நியமித்துள்ளதாக ஃபேஸ்புக் இந்தியா அறிவித்துள்ளது.
இதற்குமுன் இந்த பதவியில் ஆங்கி தாஸ் என்ற பெண் இருந்தார். ஆனால், அவர் வலதுசாரி தலைவர்களுக்கு எதிராக வெறுப்பு-பேச்சு விதிகளை அமல்படுத்துவது தொடர்பான சர்ச்சையின் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தான் நீண்ட தேடலுக்கு பிறகு பொது கொள்கை இயக்குநராக ராஜீவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஃபேஸ்புக்கிற்கான முக்கியமான கொள்கை மேம்பாட்டு முயற்சிகளான பயனர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை, உள்ளடக்கம் மற்றும் இணைய நிர்வாகம் ஆகியவற்றை வரையறுக்கும் பொறுப்பை இனி அகர்வால் மேற்கொள்வார் என்று அவரது நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்பாக, ஃபேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகனிடம் அகர்வால் அறிக்கை அளிப்பதோடு, அகர்வால் ஃபேஸ்புக் இந்திய தலைமை குழுவில் ஒருவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியாக 26 வருட பணி அனுபவம் கொண்ட அகர்வால், உத்தரபிரதேச மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அந்தஸ்து கொண்ட மாஜிஸ்திரேட் பொறுப்பு வகித்திருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் இந்தியாவின் முதல் தேசிய கொள்கை அறிவுசார் சொத்துரிமை மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (M/o வர்த்தகம்) இணைச் செயலாளராக இருந்து வழிநடத்தினார்.
மேலும், அறிவுசார் சொத்துரிமை அலுவலகங்களை டிஜிட்டல் பயன்பாடு கொண்டதாக மாற்றியதிலும் அகர்வால் முக்கியப் பங்கு வகிதத்தார்.
இவரின் நியமனம் தொடர்பாக பேசியுள்ள ஃபேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன்,
“இந்தியா தற்போது கண்டுவரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கு ஃபேஸ்புக் ஒரு கூட்டாளியாக உள்ளது. டிஜிட்டல் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டமைப்பில் ஃபேஸ்புக் எவ்வாறு இணைந்துள்ளது என்பதற்கு இது சான்று. இதனை தான் தற்போது நாங்கள் உணர்கிறோம்.
பொதுக் கொள்கைக் குழுவை வழிநடத்த ராஜீவ் அகர்வால் எங்களுடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராஜீவ் தனது நிபுணத்துவம் மற்றும் அனுபவத்துடன் எங்களின் ஃபேஸ்புக் மூலம், வெளிப்படைத்தன்மை, அதிகாரம் மற்றும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதற்கான எங்கள் பணியை மேலும் செய்ய உதவுவார். இவை அனைத்தும் எங்கள் பொறுப்பாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதனால் இந்தப் பணியில் அவரின் அனுபவத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம்," என்றுள்ளார்.
தகவல் : பிடிஐ | தமிழில்: மலையரசு