பெண்களுக்கு பாதுகாப்பான சேவை அளிக்க தொழில் நுட்பத்தை நாடும் ஃபேஸ்புக்!
ஆன்லைனில் பெண்கள் எதிர்கொள்ளும், சீண்டல், தாக்குதலை சமாளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு போன்ற நுட்பங்களை ஃபேஸ்புக் பயன்படுத்தி வருகிறது.
ஃபேஸ்புக் சமூக ஊடக மேடையை பெண்களுக்கு மேலும் பாதுகாப்பானதாக, வரவேற்புத் தன்மை மிக்கதாக மாற்றுவதற்கான கொள்கைகளையும், தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்த நோக்கில் நிறுவனம் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் வல்லுனர்களுடன் கூட்டு முயற்சி இந்த கொள்கைகளை உருவாக்க எப்படி உதவியுள்ளன என்பதை ஃபேஸ்புக் நியூஸ்ரூம் வலைப்பதிவு விவரித்துள்ளது.
“இணையம் வழங்கும், அனைத்து பொருளாதார வாய்ப்புகள், கல்வி மற்றும் சமூக தொடர்புகளுக்கான சமவாய்ப்பை பெண்கள் பெற வேண்டும் என ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் நம்புகிறோம்,” என அந்த பதிவு தெரிவிக்கிறது.
“தெளிவான கொள்கைகளை உருவாக்குவது, தாக்குதல் நடைபெறுவதை தடுக்கும் வகையில் வல்லுனர்களுடன் கலந்தாலோசிப்பது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட, எங்கள் மேடையை பெண்களுக்கு பாதுகாப்பானதாக உருவாக்கும் விரிவான அணுகுமுறையை பின்பற்றி வருகிறோம்,” என ஃபேஸ்புக் பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர் சிண்டி சவுத்வெர்த் கூறியுள்ளார்.
செய்தி பெற விரும்பவில்லை என தெரிவித்தவருக்கு தொடர்ந்து தேவையில்லாத செய்திகளை அனுப்புவது, அனுமதி இல்லாத அந்தரங்க படங்கள் போன்ற மோசமான பயன்பாட்டிற்கு எதிரான விதிமுறைகளை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நெறிமுறைகள் கொண்டுள்ளன.
பல்வேறு இடங்களில், மோசமான செயல்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதை புரிந்து கொள்ள உதவும் சர்வதேச வல்லுனர்கள் உதவியுடன் இந்த நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவிக்கிறது. இந்தியாவில் உள்ள வல்லுனர்கள் மற்றும் பயனாளிகளுடன் ஆலோசனை நடத்திய போது, சில பெண்கள் தங்கள் ப்ரோபைல் படத்தில் முகம் இடம்பெறுவதை விரும்பவில்லை என ஃபேஸ்புக் தெரிந்து கொண்டது.
முகத்தை யாரேனும் தவறாக பயன்படுத்தலாம் எனும் அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இதனையடுத்து, தங்கள் படத்தை யார் தரவிறக்கம் செய்யலாம் அல்லது பகிரலாம் என தீர்மானிக்கும் வாய்ப்புகளை பெண்களுக்கு ஃபேஸ்புக் வழங்கியுள்ளது.
“பெண்கள் பாதுகாப்பு என்று வரும் போது, பொதுவான விஷயங்கள் உலகம் முழுவதும் ஒன்றாக இருக்கிறது” என்கிறார் ஃபேஸ்புக் உலக கொள்கை நிர்வாக துணைத்தலைவர் மோனிகா பிக்கெர்ட். “அனால், குறிப்பிட்ட நாடுகளை பார்க்கும் போது, அங்குள்ள பழக்கங்கள் உள்ளூர் சார்ந்தவையாக இருக்கின்றன,” என்கிறார்.
”கொள்கைகள் தவிர, தனது மேடையில் பயன்பாட்டு அனுபவத்தை கட்டுப்படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை அளிக்கவும் ஃபேஸ்புக் முயன்று வருகிறது.
சீண்டலை தடுக்க பின்னணில், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் அல்கோரிதம் செயல்படுகிறது என்கிறார் ஃபேஸ்புக்கின் சர்வதேச பாதுகாப்புத் தலைவர் ஆண்டிகான் டேவிஸ்.
"பயனாளிகளுக்கு மேலும் கட்டுப்பாடு அளிக்கிறோம். பிளாக் செய்வது, உங்கள் பதிவுக்கு கீழ் விரும்பாத பின்னூட்டங்களை மறப்பது அல்லது டெலீட் செய்வது போன்ற வாய்ப்புகளை அளிக்கிறோம்.”
அனுமதி இல்லாத அந்தரங்கள் புகைப்படங்கள் தொடர்ந்து சுழற்சியில் இருப்பதை தவிர்க்க, ஃபேஸ்புக், டிஜிட்டல் அடிச்சுவடு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள், படம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுவதை தடுப்பதற்கான சோதனைத் திட்டம் 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது.
டிஜிட்டல் விழிப்புணர்வு, மேம்பட்ட பாதுகாப்பு வாய்ப்புகள் மற்றும் மீறலுக்கு உள்ளாகும் உள்ளடக்கத்தை கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களில் ஃபேஸ்புக் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது,
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கவுதமன் | தமிழில்: சைபர்சிம்மன்