இந்திய ஸ்டார்ட் அப்பில் ஃபேஸ்புக்கின் முதல் முதலீடு: பெங்களூரு நிறுவனத்துக்கு நிதி!
சமூக காமர்ஸ் பிரிவில் செயல்பட்டு வரும் Meesho செயலி, ஆங்கிலம் தவிர ஏழு உள்ளூர் மொழிகளில் செயல்பட்டு வருவதோடு, இந்த மொழிகளில் 40 சதவீத பயன்பாட்டை கொண்டுள்ளது.
சமூக வலைப்பின்னல் நிறுவனமான ஃபேஸ்புக் இந்தியாவில், ஸ்டார்ட் அப் துறையில் முதல் முதலீட்டு செய்துள்ளது. பெங்களூருவைச்சேர்ந்த, சமூக காமர்ஸ் நிறுவனமான Meesho, ஃபேஸ்புக்கிடம் இருந்து முதலீட்டை பெற்றுள்ளது. இந்நிறுவனம், சமூக ஊடகங்கள் வாயிலாக ரிசெல்லர்கள் மற்றும் புதிய பிராண்ட்களை இணைக்கிறது. இந்திய ஸ்டார்ட் அப் ஒன்றில் முதல் முறையாக முதலீடு செய்துள்ள ஃபேஸ்புக், இந்தியாவின் துடிப்பான இணையச் சூழலுக்கான தனது ஆதரவை இந்த முதலீடு உணர்த்துவதாக தெரிவித்துள்ளது.
ஐஐடி தில்லி பட்டதாரிகளான விதிட் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பார்ன்வல் 2015ல் Meeshoவை துவக்கினர். இல்லத்தலைவிகள், இளம் அம்மாக்கள், இளம் தொழில் முனைவோர், ஆசிரியர்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்கள் இணைய வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான மாற்று விநிநோக வழியை மீஷூ அறிமுகம் செய்தது.
இந்த செயலி வாயிலாக பயனாளிகள், பிராண்ட்களின் பொருட்களை தங்கள் சமூக ஊடக வட்டத்தில் விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். இந்த செயலி ஆங்கிலம் தவிர ஏழு உள்ளூர் மொழிகளில் செயல்படுகிறது. உள்ளூர் மொழிகளில் 40 சதவீத பயன்பாட்டை கொண்டுள்ளது.
"இந்த முதலீடு மூலம், இந்தியாவில் வேகமாக வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய மற்றும் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் ஒரு வர்த்தக மாதிரி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புவதாக, ஃபேஸ்புக் இந்தியா, துணைத்தலைவர், நிர்வாக இயக்குனர் அஜீத் மோகன் கூறியுள்ளார்.
“மீஷூவின் பயணம் அருமையாக அமைந்துள்ளது. மேலும் பெரிய சமூகத்தை உருவாக்கி, லடச்சக்கணக்கான தொழில்முனைவோரை வெற்றி பெறச்செய்ய மேலும் அதிகம் செயல்பட ஆர்வமாக இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில், 15,000 சப்ளையர்கள் மற்றும் 2,00,000 ரிசெல்லர்கள் என வளர்ந்துள்ளோம்,” என்று மீஷூ இணை நிறுனர் விதித் கூறுகிறார்.
"சமூகம் மற்றும் சிறு வணிகம் வளர வேண்டும் எனும், இலக்கை ஃபேஸ்புக்குடன் பொதுவாக கொண்டிருப்பதகாவும், ஃபேஸ்புக் முதலீடு, இந்த இலக்கை நோக்கி மேலும் முன்னேற உதவும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு Meesho 50 மில்லியன் டாலர் சி சுற்று நிதி திரட்டியது. ஷுவிய் கேபிடல், ஆர்பிஎஸ் வென்சர்ஸ், டிடீஎஸ் பாட்னர்ஸ் ஆகிய புதிய முதலீட்டாளர்கள் மற்றும் SAIF பாட்னர்ஸ், வென்சர் ஹைவே, ஒய் காம்பினேட்டர், செக்கோச்கியா இந்தியா ஆகிய பழைய முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்றனர்.
அதற்கு முன், 11.5 மில்லியன் டாலர் சி சுற்று நிதி திரட்டியது. தற்போது ஃபேஸ்புக் செய்துள்ள நிதியின் அளவு குறிப்பிடப்பவில்லை.
ஆங்கில கட்டுரையாளர்: ராசி வர்ஷனி | தமிழில்: சைபர்சிம்மன்