முதல் படமே படுதோல்வி: தற்கொலை வரை சென்ற ‘மனோபாலா’ வெற்றிப்பட இயக்குனராகி மறைந்த கதை!
தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய மனோபாலாவின் திடீர் மரணம், திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தன் காமெடி நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்த பிரபல நடிகர் மனோபாலா இன்று தன் மறைவால் அவரது ரசிகர்களை கண்ணீர் விட்டு அழ வைத்திருக்கிறார்.
69 வயதான அவர் சமீபகாலமாகவே கல்லீரல் பிரச்சினை, நெஞ்சுவலி எனப் பல உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று, பின் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக, அவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமின்றி, குணச்சித்திர நடிகராக சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்தவரான மனோபாலா, இயக்குநர், தயாரிப்பாளர், ஓவியர், யூடியூபர் எனப் பன்முகத் திறமையாளராக வலம் வந்தவர்.
மனோபாலாவின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்களை பெரும் சோகமடைய வைத்துள்ளது.
காலத்தால் அழியாத நடிகர்
ஒல்லியான தேகம், உயரமான உடல்வாகு, கண்ணாடிக்குள் உருளும் கண்கள் என தன் காமெடி நடிப்பால் தனக்கென தமிழ் சினிமாவில் தனி ஒரு ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் மனோபாலா.
காமெடி மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பிற்கும் பேர் போனவர் என்பதால், எப்போதும் கைநிறைய படவாய்ப்புகளோடு வலம் வந்தவர். இதுவரை தமிழில் சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
உருவக்கேலி என்பது தவறான ஒன்றுதான் என்றாலும், தமிழ் சினிமாவில் அது தவிர்க்க முடியாத காமெடி கண்டெண்ட் ஆகும். அந்தவகையில், காமெடி என வந்துவிட்டால் தன்னை விட வயதில் சிறியவர்கள் தன் உருவத்தை கிண்டல் செய்தாலும் அதை பெரிதுப்படுத்தாமல் நடித்தவர் மனோபாலா. சந்தானம், விவேக் என இவர்களோடு மனோபாலா கூட்டணி சேர்ந்து நடித்த பல காமெடி காட்சிகள் காலத்தால் அழியாதவை.
ரஜினி, விஜயகாந்த்தை இயக்கியவர்
மக்கள் மத்தியில் நடிகராகவே பெரிதும் அறியப்பட்ட மனோபாலா, தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜயகாந்த் ஆகியோரை வைத்து படம் இயக்கியவர் என்பது இங்கு பலருக்கும் தெரிந்திராத ஒன்று. ஆம், ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 40 க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலாதான். இவரது முதல் படம் ஆகாயகங்கை ஆகும்.
மனோபாலா மிகச் சிறந்த ஓவியர். எந்த காட்சியை எப்படி வைக்கலாம் என்ற யோசிக்கும் திறனை அவர் கொண்டிருந்தார். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.
வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும் 16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கி இருக்கிறார். இயக்கம் மற்றும் நடிப்போடு, ‘சதுரங்க வேட்டை’, ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காலத்திற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக் கொண்ட மனோபாலா, திரைத்துறை மட்டுமின்றி யூடியூப்பிலும் ஒரு சேனலை நடத்தி வந்தார். அந்த சேனல் மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தார்.
நடிகரான கதை...
இயக்குநராக இருந்த மனோபாலா நடிகரானதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான். இது பற்றி, கடந்த 2019ம் ஆண்டு 'வேஸ்ட் பேப்பர்' இணையதளத்தில் அவரே பின்வருமாறு கூறியுள்ளார்.
“நான் இயக்குநராக பல படங்களை இயக்கி உள்ளேன். ஆனால், என்றுமே நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டதே இல்லை. பட விழாக்களின் போது, நான் நகைச்சுவையாக பேசி, நடித்துக்காட்டுவதை எல்லாம் பார்த்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ‘நீங்க ஏன் நடிக்கக்கூடாது?’ என என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘அட நீங்க வேற சார். நாம டைரக்டர்தான். நடிக்க வராது. அதில் விருப்பமும் இல்லை' எனக் கூறினேன்.
ஆனால் அத்தோடு இந்த விவகாரத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
அந்த சமயத்துல எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தினமும் சுமார் 250 சிகரெட் வரைக் குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு உடல்நலம் மோசமானது. ஒரு வழியாக உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்த போதுதான், மீண்டும் எனக்கு கே.எஸ்.ரவிக்குமார் சார் போன் பண்ணினார்.
இந்த முறை நடிப்பீர்களா என்றெல்லாம் கேட்காமல், 'என் படத்துல நீங்க நடிக்கிறீங்க' என அவரே கூறிவிட, நானும் மறுப்பேதும் சொல்லாமல், சரி சொல்லி விட்டேன். அந்தப் படம்தான் 'நட்புக்காக'. படம் முழுவதும் வரும் மாதிரி என் கேரக்டரை அவர் அமைத்திருந்தார். அந்தப் படத்தில் நான் போடும் வித்தியாசமான கும்பிடு, என்னை நடிகனாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.
அப்போது கே.எஸ்.ரவிகுமார், 'வர்ற பஸ் எதுவா இருந்தாலும் அதுல ஏறிப் போயிக்கிட்டே இருக்கணும்' எனக் கூறினார். அப்படித்தான் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்கத் தொடங்கினேன்...” என தான் நடிகரான கதையை அதில் பகிர்ந்துள்ளார் மனோபாலா.
நட்புக்காக படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மனோபாலாவிற்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. போலீஸ், மந்திரவாதி, அரசியல்வாதி என கிடைத்த பந்துகளில் எல்லாம் சிக்ஸர் அடித்தார்.
நினைவோ ஒரு பறவை
தனது திரையுலக அனுபவங்களை, ‘நினைவோ ஒரு பறவை’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் மனோபாலா. நக்கீரன் இதழில் வாராவாரம் வெளியான இந்தத் தொடர், தொகுப்பாக இரண்டு பாகங்களாக வெளியானது.
அந்தப் புத்தகத்தில் தான் திரைத்துறையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் மனோபாலா. ஆம், தற்போது இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையாளர் என அவரை ஊர் கொண்டாடினாலும், இந்த உயரம் அவ்வளவு சுலபமாக அவருக்கு கிடைத்துவிடவில்லை.
அவருடைய முதல் படமான ஆகாய கங்கை, எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. கார்த்திக், சுஹாசினி என முன்னணி நடிகர்கள் நடித்திருந்த போதும், படம் எதிர்பார்த்த அளவு திரையரங்குகளில் ஓடவில்லை. இதனால் புதிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. சினிமாவில் முதல்பட வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்றால், அதனை வெற்றிப்படமாகக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. இல்லையென்றால் மீண்டும் ஒரு படம் கிடைப்பது குதிரைக்கொம்புதான்.
மனோபாலாவுக்கும் அப்படி ஒரு நிலைமை தான் ஏற்பட்டது. சுமார் இரண்டு வருடங்கள் புதிய படவாய்ப்புகளுக்காக மட்டும் அலைந்து திரிந்துள்ளார். கிட்டத்தட்ட தற்கொலை முடிவுக்கே சென்று விட்ட அவருக்கு கை கொடுத்து உதவியது நடிகர் மோகன் தான்.
சொல்லிவிட்டு, திருச்சிக்குச் சென்றுவிட்டேன். திருச்சியில் உறையூரில் உள்ள வெக்காளி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். சக்திவாய்ந்த தெய்வம் அவள். அம்மனிடம் என் மனக்குமுறலையெல்லாம் கொட்டித்தீர்த்தேன். அங்கே பிரார்த்தனைச் சீட்டு கட்டுவது பிரசித்தம். 'இயக்குநராக ஜெயிக்க வேண்டும்' என்று பிரார்த்தனைச் சீட்டு கட்டி, வேண்டிக் கொண்டேன். ஆனாலும் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போயிடலாம்னு அடிக்கடி நினைப்பு வந்துக்கிட்டே இருந்துச்சு.
“திருச்சிலேருந்து சென்னை வந்தப்ப, எங்கிட்ட ஒண்ணேகால் ரூபா இருந்துச்சு. பாண்டிபஜார்ல கையேந்திபவன் ஹோட்டல்ல ஒரு தோசை ஒரு ரூபா. நாலணாவை பாக்கெட்ல வைச்சிட்டு, ஒரு தோசையை வாங்கி அதுல நிறைய சாம்பாரை ஊத்திச் சாப்பிட்டேன். அப்போ... 'டைரக்டரே...'னு ஒரு குரல். ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி, ஓடாத படத்தை எடுத்த நம்மளை யாருடா டைரக்டர்னு கூப்புடுறாங்கன்னு திரும்பிப் பாத்தேன். கலைமணி அண்ணன். 'இன்னும் சாப்பிடுய்யா'னு சொல்லி டிபன் வாங்கிக் கொடுத்தாரு. 'நான் படம் தயாரிக்கிறேன். நீதான் டைரக்ட் பண்றே. எல்லாம் அப்புறமா பேசிக்கலாம். இப்போதைக்கு இதை வைச்சுக்கோ'னு என் பாக்கெட்ல அம்பது ரூபாயைத் திணிச்சிட்டுப் போனாரு. அன்னிக்கி அவர் கூப்பிடலேன்னா, அந்தப் பட வாய்ப்பு வராம போயிருந்தா... நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிட்டு செத்திருப்பேன். அந்தப் படம்தான் பிள்ளைநிலா.
அந்த காலகட்டத்துல மோகன் கால்ஷீட் கிடைக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அவ்வளவு சுலபமா கிடைச்சிடாது. காத்திருக்கணும். ஆனால், மோகன் என்னுடைய நண்பர். அதனால், உடனே எனக்கு கால்ஷீட் தரேன்னு சொன்னார். கிட்டத்தட்ட ஒரு இங்கிலீஷ் படம் மாதிரி பண்ணிருந்தோம். மிகப்பெரிய ஹிட்டடிச்சுச்சு. அந்தப் படம்... 'பிள்ளைநிலா'.
"இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்துச்சு. சரியான சமயத்துல, மோகன் கொடுத்த வாய்ப்பு அது. அதுக்குப் பிறகு, எனக்கு வரிசையாக படங்கள் இயக்கும் வாய்ப்புகள் வந்தன. நானும் பிஸியான இயக்குநரானேன்,” என தன் ஆரம்பகால கஷ்டங்களை அதில் விவரித்துள்ளார் மனோபாலா.
திடீர் மரணம்
இப்படியாக வெள்ளித்திரை, சின்னத்திரை, யூடியூப் என தான் கால் பதித்த எல்லாத் துறைகளிலும் தன் காலடித்தடத்தைப் பதித்து வந்த மனோபாலா, சமீபகாலமாகவே உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவர், கல்லீரல் பிரச்சினையாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
வீட்டில் ஓய்வில் இருந்து வந்த அவருக்கு, கடந்த சில நாட்களாகவே நெஞ்சுவலி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரால் மூச்சு விட முடியாமல் திணறி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
மனோபாலாவின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல காமெடி நடிகர் மயில்சாமியும் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இந்த மூன்று மாத காலத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு காமெடி நடிகர்கள் உயிரிழந்திருப்பது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.
திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் மனோபாலாவின் மறைவுக்கு நேரிலும் சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மனோபாலா நடித்த காமெடிக் காட்சிகள் மற்றும் அவரது பேட்டிகளைப் பகிர்ந்தும், பல்வேறு நினைவலைகளை சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு உஷா மகாதேவன் என்கிற மனைவியும், ஹரீஷ் என்கிற மகனும் உள்ளார். ஹரீஷ் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். தன்னுடன் வேலை பார்த்த தமிழ்ப் பெண்ணைக் காதலித்து, கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹரீஷ், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வில் மிஸ் யூ மனோபாலா சார்...