இந்தியாவில் பொய் செய்திகளை பரப்பிய பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்!
சட்டவிரோதமாகவும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் யூடியூப் சேனல் உரிமையாளர்கள் மற்றும் சோசியல் மீடியா பயனர்கள் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாகவும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் யூடியூப் சேனல் உரிமையாளர்கள் மற்றும் சோசியல் மீடியா பயனர்கள் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களை பரப்பும், நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் மீது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு,
வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளைப் பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து சில 45 வீடியோக்கள் நீக்கப்பட்டன. அதற்கு முன்னதாக புலனாய்வு அமைப்புகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (I&B) டிசம்பர் முதல் 100க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களைத் தடுக்க உத்தரவிட்டுள்ளது. மத சமூகங்களிடையே பகைமையை உருவாக்குவதற்காக போலிச் செய்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்ட 45 வீடியோக்களைத் தடுக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானை பின்னணியாகக் கொண்டு இயக்கப்படும் இந்த யூடியூப் சேனல்கள் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், இனி சட்டத்திற்கு புறம்பான வீடியோக்களை தடை செய்வதோடு, சம்பந்தப்பட்ட டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள், யூடியூப் சேனல்கள் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வது தொடர்பாக மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“பெரும்பாலான யூடியூப் சேனல்கள் மற்றும் சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் மூலமாகவும் நாட்டு நலனுக்கு எதிராகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செய்திகள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது நாட்டிற்கு வெளியே இருந்து இயக்கப்படும் நபர்களால் நடத்தப்படுகிறது. இதனால் அப்படிப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது அல்லது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது சாத்தியமில்லை. ஆனால், இந்தியாவில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளின் தகவல்கள் மற்றும் பரிந்துரைகளைப் பின்பற்றி மத்திய அமைச்சகம் தவறான வீடியோக்களை நீக்கி வருகிறது.
இந்நிலையில், சமூகத்தில் வெறுப்புணர்வை விதைக்கும் விதமாக யூடியூப் வீடியோக்கள் வெளியாவதை தடுக்க குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைபர் சட்ட நிபுணர் பவன் டுகல் கூறுகையில்,
“ஒரு கிரிமினல் வழக்கை பதிவு செய்வது அரசின் விருப்பம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என்றாலும், வீடியோவை முடக்குவது மட்டுமே நடைமுறையில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, வீடியோவை டெலிட் செய்வது என்பது ஒரு காலாவதியான நிகழ்வு. இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை போல் காட்சியளிக்கிறதோ தவிர வெற்றிகரமானது கிடையாது. எனவே விதிமீறல் வீடியோக்களை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான மாற்று வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்கிறார்.
தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் கீழ் இந்தியாவை தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கை பதிவு செய்ய அரசாங்கத்திற்கு தகுந்த அதிகாரம் இருந்தாலும், விதிமீறல்களின் போது உள்ளடக்கத்தைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - கனிமொழி