‘மோடி’ பேர் அச்சிட்ட தக்காளி: உற்பத்தியில் 25% கூடுதல் லாபம் பார்த்த ஆந்திர விவசாயி!
மோடியின் பெயர் அச்சிடப்பட்ட இதய வடிவ தக்காளிகளை உற்பத்தி செய்து 25% கூடுதல் வருவாயுடன், இந்தியா முழுவதும் பிரபலமும் ஆகி இருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.
எந்த ஒரு தொழிலையுமே வித்தியாசமாக சிந்தித்து செயல்படுத்தினால், மற்றவர்களைவிட வருவாயிலும், பெயரிலும் தனித்து தெரிய முடியும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகி இருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த சிவக்குமார் ரெட்டி என்ற விவசாயி.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி மண்டலம் போனேட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் ரெட்டி (38). இவர் தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தக்காளி பயிரிட்டு வந்துள்ளார். ஆனால், மற்ற விவசாயிகளைப் போலவே சமயத்தில் விலை வீழ்ச்சியால், தக்காளிகள் சரியான விலைக்கு விற்கப்படாமல் அடிக்கடி நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார்.
அப்போது தான், விவசாயத்தில் புதுமை படைக்கும் வகையில், வித்தியாசமாக எதையாவது செய்து லாபம் ஈட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளார் அவர். இதற்காக அவர் கையில் எடுத்துக் கொண்டது மக்களவைத் தேர்தல் கான்செப்டை. அதன்படி, இதயம் வடிவம் கொண்ட அச்சு மூலம் தக்காளியின் ஒருபுறம் இந்திய வரைபடமும்,
மறுபுறம் பிரதமர் மோடியின் பெயரையும் அச்சிட்ட தக்காளிகளை இம்முறை உற்பத்தி செய்துள்ளார். இதன் மூலம் முந்தைய ஆண்டுகளை விட இம்முறை கூடுதலாக 25 சதவீதம் வருவாயை சிவக்குமார் பெற்றுள்ளார்.
“கர்னூலை சேர்ந்த ஜேபிஅக்ரி ப்ராடக்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இந்த புது வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு, தக்காளியை புது விதத்தில் பயிரிட்டு வழங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இதற்காக பிளாஸ்டிக் அச்சுகளை அந்நிறுவனமே எனக்கு வழங்கியது. அதில் இருதய வடிவில் ஒருபுறம் இந்திய வரைபடமும் மறுபுறம் மோடி (MODI) என்ற எழுத்துக்களுடன் கூடிய அச்சு இருந்தது.
அந்த அச்சுக்களை செடியில் இருந்த தக்காளி பிஞ்சுகள் ஒவ்வொன்றிலும் மாட்டினேன். 20 நாட்களுக்குப் பிறகு தக்காளி வழக்கம் போல் பழுக்கத் தொடங்கியது. அப்போது நான் எதிர்பார்த்த படி அதில் மோடி மற்றும் இந்திய வரைபடம் பதிந்திருந்தது” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சிவக்குமார்.
இதற்காக ஜேபி அக்ரோவிடம் இருந்து ரூ.50 ஆயிரம் முதலீட்டில், 25 ஆயிரம் மோல்டுகளை அவர் வாங்கியுள்ளார். ஜனார்தன் சௌதாரி ஜம்பாலா என்ற பொறியாளர் இந்த புதுமையான தக்காளிகளை உருவாக்கும் முயற்சியில் சிவக்குமாருக்கு பெரிதும் உதவியுள்ளார். ஜேபி அக்ரியின் உரிமையாளரான இவர், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்து பின்னர், அந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு விவசாயத்தில் ஆர்வமாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவக்குமார் விளைவித்த தக்காளிகள் இதய வடிவில் ஒருபுறம் தேசியக் கொடியுடனும், மற்றொரு புறம் பிரதமர் மோடியின் பெயருடனும் இருப்பதால், பொதுமக்கள் இதனை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், அனைத்து தக்காளிகளும் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகிறது. இந்த நூதன முறையால் இம்முறை 25 சதவீத கூடுதல் வருவாயுடன் அப்பகுதியில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார் இவர்.
“மற்ற விவசாயிகள் உற்பத்தி செய்த தக்காளிகள் 25 கிலோ கொண்ட பெட்டி ரூ. 800 விற்பனை ஆனதென்றால், என்னுடைய தக்காளிகள் ரூ.1,050க்கு விற்பனை ஆனது. இதனாலேயே எனக்குக் கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள இந்த அபார வரவேற்பால் இனி வரும் நாட்களில் ஆந்திர மாநில அரசியல் தலைவர்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட தக்காளிகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளேன்,” என்கிறார் சிவக்குமார்.
தற்போது சிவக்குமாருக்கு கிடைத்த லாபத்தைப் பார்த்து, அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளும் இதே போல் வித்தியாசமாக சிந்தித்து பயிரிட திட்டமிட்டு வருகின்றனர்.
அண்மையில் ஆந்திராவுக்கு பிரசாரம் செய்யச் சென்ற உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு மோடி பெயர் பொறித்த இந்த தக்காளியை சிவக்குமார் பரிசாக வழங்கினார். அதேபோல் வாரணாசியில் மோடி பிரச்சாரம் செய்தபோது, அப்பகுதியில் இந்த தக்காளிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மோல்டட் தக்காளிகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோன்ற மோல்டட் காய்கறிகள் இந்தியாவிற்குத் தான் புதுசு. மற்றபடி இது உலகம் முழுவதும் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. இதய வடிவிலான மோல்டிங்கில் ஒருபுறம் I (நான்) என்றும், மறுபுறம் U (நீ) என்றும் எழுத்துக்களை அச்சிட்டு ஜேபி அக்ரோ விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. அதோடு, ரமலான் சமயங்களில் பிறை வடிவிலான வெள்ளரிகளில், ‘ஈத் முபாரக்’ என ஆங்கிலத்தில், அரபி மொழியிலும் அச்சிட்டு இந்த நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.