யூட்யூப் சானல் மூலம் விவசாய நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் விவசாயி!
பஞ்சாபைச் சேர்ந்த தர்ஷன் சிங், தனது யூட்யூப் சானலில் ஆடு வளர்ப்பு குறித்தும் விவசாய இயந்திரங்கள் குறித்த மதிப்பீடுகளையும் பகிர்ந்துகொள்கிறார். இதற்கு 2.3 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கவும் பதிவேற்றம் செய்யவும் உதவும் யூட்யூப் தளம் இத்தனை ஆண்டுகளில் பொழுதுபோக்கு, கல்வி என பல்வேறு பிரிவுகளில் விரிவடைந்துள்ளது.
உள்ளடக்கம் வழங்குபவர்கள் மற்றும் அதன் பயனர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்திசெய்யப்படும் ஒரே தளமாக யூட்யூப் உருவாகியுள்ளது. பஞ்சாபில் வசிக்கும் தர்ஷன் சிங் ’ஃபார்மிங் லீடர்ஸ்’ 'Farming Leaders' என்கிற தனது யூட்யூப் சானல் மூலம் பல்வேறு விவசாய நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விவரிக்கிறார்.
தர்ஷன் சிங்கின் இந்த சானலில் 2.3 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். மொத்தமாக 17,05,99,145 முறை பார்வையிடப்பட்டுள்ளது. ஆடு வளர்ப்பு, நெல் விவசாயம் போன்றவை குறித்து தர்ஷன் சிங் தனது சானல் மூலம் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார். ட்ராக்டர்கள் போன்ற விவசாய இயந்திரங்கள் குறித்த மதிப்பீடுகளையும் வழங்குகிறார்.
இவர் லாஜிக்கல் இண்டியன் உடனான உரையாடலில் குறிப்பிடும்போது,
“நான் 2017ம் ஆண்டு பால் பண்ணை தொடங்கியபோது எனக்கு போதுமான புரிதல் இல்லாத காரணத்தால் பல்வேறு தடங்கல்களை எதிர்கொண்டேன். இணையத்தில் இதற்கான தீர்வுகளை தேடியுள்ளேன். ஆனால் தெளிவான பதில் ஏதும் கிடைக்கவில்லை,” என்றார்.
தர்ஷன் சிங் இதில் ஒரு வாய்ப்பு இருப்பதை கவனித்தார். சக விவசாயிகளுக்கு வழிகாட்டத் தீர்மானித்தார்.
”ஆரம்பத்தில் மொபைலில் வீடியோக்களை படம்பிடித்து அவ்வப்போது பதிவேற்றம் செய்து வந்தேன். பால் பண்ணை மற்றும் விவசாயம் சார்ந்த வீடியோக்களை படம்பிடித்து வந்தேன். எனினும் ஆறு மாதங்களில் என்னுடைய வீடியோக்களை பார்வையிட்டவர்கள் மற்றும் விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தபோது என்னுடைய வீடியோக்கள் விவசாய சகோதரர்களுக்கு உதவியாக இருப்பதை உணர்ந்தேன்,” என தெரிவித்ததாக லாஜிக்கல் இண்டியன் குறிப்பிடுகிறது.
முதல் ஆறு மாதங்களில் கிடைத்த வரவேற்பு அவரது வீடியோக்களை உருவாக்க கேமரா, மைக்ரோபோன், லேப்டாப் போன்ற கூடுதல் சாதனங்கள் வாங்க ஊக்குவித்தது.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தர்ஷன் சிங் அரசியல் அறிவியல் பயின்றுள்ளார். பட்டப்படிப்பிற்கு பிறகு விவசாயத்தை தொழில்முறையாக மேற்கொண்டு தனது 12 ஏக்கர் பண்ணை நிலத்தில் விவசாயத்தைத் தொடங்கினார். இறுதியாக பாரம்பரிய விவசாய முறையில் இருந்து ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் ஆர்கானிக் விவசாய முறைக்கு மாறினார். பால் பண்ணையிலும் ஈடுபட்டார். பிபிசி உடனான உரையாடலில் தர்ஷன் சிங் கூறும்போது,
“பஞ்சாப் அல்லது ஹரியானாவில் எந்த ஒரு பகுதிக்கு நான் சென்றாலும் விவசாயிகள் என்னை அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நான் உள்ளடக்கத்தை உருவாக்குகிறேன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்,” என்றார்.
தற்போது தர்ஷன் சிங் உருவாக்கிய வீடியோக்களுக்காக விவசாயம் சார்ந்து செயல்படும் நிறுவனங்கள் அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்கின்றன. அவரது வீடியோக்கள் அவருக்கு மாதம் 4,000 டாலர் வரை ஈட்டிக்கொடுக்கிறது.
அவரது விளக்கங்களைக் கேட்ட பார்வையாளர்களில் ஒருவரான குர்த்யான் சிங் பிபிசி உடனான உரையாடலில் தெரிவிக்கும்போது,
“கால்நடைகள் தற்போது ஆரோக்கியமாக உள்ளது. தர்ஷனின் வீடியோக்கள் மூலம் எங்களால் குறைந்த செலவில் பணிகளை மேற்கொள்ள முடிகிறது,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA