65 சுங்கச் சாவடிகளில் ’FasTag’ நெறிமுறைகள் தற்காலிகத் தளர்வு!
தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேண்டுகோளை ஏற்று, அதிக ரொக்க சுங்கச் சாவடிகளில் தற்காலிகமாக ஃபாஸ்ட் டேக் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சீரான போக்குவரத்தை உறுதி செய்ய, அதிக ரொக்க பரிவர்த்தனை கொண்ட 65 சுங்கச்சாவடிகளில், 25 சதவீத ’ஃபாஸ்ட் டேக்’ (FASTag) லேன்களை, 30 நாட்களுக்கு ஹைபிரிட் லேன்களாக மாற்றும் வகையில் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
30 நாட்களுக்கு செல்லக்கூடிய இந்த தற்காலிக நடவடிக்கை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அமல் செய்யப்படுவதாக சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனைத்து டோல் மையங்களிலும், ஃபாஸ்ட் டேக் அடிப்படையிலான மின்னணு கட்டண வசூலிப்பு முறையை டிசம்பர் 15ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, டோல் மையங்களின் 75 சதவீத லேன்கள் ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டிற்கு உரியவையாக இருக்க வேண்டும். 25 சதவீத லேன்கள் மட்டுமே ரொக்க பரிவர்த்தனைக்கு உரியவையாக இருக்கும்.
தற்போது ஹைபிரிட் லேன்கள் அமைய உள்ள 65 மையங்கள், உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், சண்டிகர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ளன.
இந்த மையங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, ஃபாஸ்ட் டேக் லேன்களில், அதிகபட்சமாக 25 சதவீத லேன்கள் தற்காலிகமான ஹைபிரிட் லேன்களாக மாற்றப்படும். இது, தொடர்புடைய மையங்களில், சூழலுக்கு ஏற்ப ஆர்.ஓ அளவிலான அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் என்று நெடுஞ்சாலை ஆணைய தலைவர் எஸ்.எஸ்.சாந்துவுக்கு சாலை போக்குவரத்து அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”குறைந்த பட்ச எண்ணிக்கையிலான ஃபாஸ்ட் டேக் லேன் தற்காலிகமான ஹைபிரிட் லேன்களாக மாற்றப்பட வேண்டும் என்றும், ஃபாஸ்ட் டேக் வசதி கொண்ட வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த 65 ஃபாஸ்ட் டேக் கட்டண மையங்களில், 75 சதவீத லேன்கள் ஃபாஸ்ட் டேக் லேன்களாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"குடிமக்களுக்கு எந்தவித அசெளகர்யமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய, 65 பாஸ்ட் டேக் கட்டண மையங்களில் 30 நாட்களுக்கான தற்காலிக நடவடிக்கயாக மட்டுமே இது அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திற்குள் கட்டண லேன்கள் மூலம் சீரான போக்குவரத்து ஏற்பட மட்டும், அனைத்து லேன்களையும் பாஸ்ட் டேக் லேன்களாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட் டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, கடந்த வாரம் அதிக பட்சமாக ஒரு நாளில் ரூ.86.2 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதத்தில் அதிக தினசரி வசூல் ரூ.50 கோடி ஃபாஸ்ட் டேக் மின்னணு பரிவர்த்தனை மூலம் பெறப்பட்டுள்ளது. 2019 நவம்பரில் இது 23 கோடியாக இருந்தது.
2019 ஜூலையில் எட்டு லட்சமாக இருந்த ஃபாஸ்ட் டேக் மூலமான தின வசூல் 2020 ஜனவரியில் 30 லட்சமாக உயர்ந்துள்ளது. ஜெய்பூர் பகுதியில் உள்ள ஜோத்பூர் சுங்கச்சாவடி மையம், 91 சதவீத கட்டணத்தை ஃபாஸ்ட் டேக் மூலம் வசூலித்து மற்ற மையங்களை எல்லாம் விட முன்னணியில் உள்ளதாகவும் நெடுஞ்சாலை ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
போபால் மற்றும் காந்தி நகரில் உள்ள டோல் மையங்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் வரை, ஒரு கோடிக்கு மேல் ஃபாஸ்ட் டேக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள 527 தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்ட் டேக் முறை அமல் செய்யப்பட்டுள்ளது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்