எஸ்.பி. மகளுக்கு சல்யூட் அடித்த காவல்துறை துணை ஆணையனரான தந்தை!
ஒரே குடும்பத்தில் போலீஸ், டாக்டர், டீச்சர் என ஒரே துறையைச் சேர்ந்த பலர் இருப்பது நாம் கேள்விப்பட்ட ஒன்றுதான். ஆனால், மகளே தந்தைக்கு மேலதிகாரியாக அமைவது அரிதானது. அப்படிப்பட்ட சூழல் அமைந்து, தன் மகளுக்கு மேலதிகாரி என்ற முறையில் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது.
கலெக்டராகவே இருந்தாலும் சொந்த மாமனார் முன் அமர்ந்து கொண்டு பேசக்கூடாது, கீழே விழுந்த பொருளை எடுப்பது போல் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என நம் சினிமாக்களில் எத்தனையோ காட்சிகள் பார்த்திருப்போம். ஆனால், நிஜம் அப்படியே இருப்பதில்லை.
என்ன உறவாக இருந்தாலும், பதவிக்கும், படிப்புக்கும் உரிய மரியாதையை தர வேண்டும் என்பதை அழுத்தமாக தெரிவிக்கும் வண்ணம் ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மல்காஜ்கிரி என்ற பகுதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரா சர்மா. சப் - இன்ஸ்பெக்டராக போலீஸ் பணியில் சேர்ந்து, தனது 30 ஆண்டு கால உழைப்பில் ஐபிஎஸ் ஆக பதவி உயர்வு பெற்றவர். தற்போது துணை கமிஷனராக இருக்கும் இவர், இந்தாண்டு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
உமா மகேஸ்வரா சர்மாவுக்கு சிந்து சர்மா என்ற மகள் இருக்கிறார். இவர் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பதவியில் அமர்ந்தார். தற்போது இவர் தெலுங்கானாவில் ஜக்தியால் மாவட்ட எஸ்.பியாக பணி புரிந்து வருகிறார்.
தந்தை பணியாற்றும் துறையிலேயே மகளும் உயர் பதவியை அடைந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. வீட்டில் அப்பா, மகள் என உறவு கொண்டாடினாலும், வேலையென வந்து விட்டால் உமாமகேஸ்வரா சர்மாவும், சிந்து சர்மாவும் மிகவும் கடமை உணர்ச்சி மிக்கவர்கள்.
இருவரும் வெவ்வேறு பகுதியில் போலீசாக பணி புரிந்ததால், நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்தாண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்ட விழா ஒன்றில் இருவரும் சேர்ந்து பணிபுரிய வேண்டிய சூழல். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பொதுக்கூட்டமான அதற்கு பாதுகாப்பு பணிக்காக இருவருமே சென்றிருந்தனர்.
ஒரு கட்டத்தில் சிந்து சர்மாவை நேரில் சந்திக்க வேண்டிய நிலை உமா மகேஸ்வரா சர்மாவுக்கு ஏற்பட்டது. சற்றும் தாமதிக்காமல், தன் மகளாகவே இருந்தாலும், பதவியில் தன்னைவிட உயர் அதிகாரி என சீருடையில் இருந்த சிந்துவிற்கு கம்பீரமாக சல்யூட் வைத்தார் உமாமகேஸ்வரா சர்மா.
தன்னைவிட உயர்ந்த பதவியில் இருக்கும் மகளைப் பார்த்து நெகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் உமாமகேஸ்வரராவ் சல்யூட் அடித்தது, உணர்வுமிகு தருணமாக அமைந்தது. இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டு போயினர்.
இது குறித்து உமா மகேஸ்வரா சர்மா கூறுகையில்,
'பணியில் இருக்கு போது நாங்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தது இதுவே முதல் முறை. மகளுடன் சேர்ந்து பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். அவர் எனக்கு உயர் அதிகாரி. எனவே, நேரில் பார்த்த போது சல்யூட் அடித்தேன். எனினும், வீட்டில் தந்தை, மகள் போலவே இருப்போம்,” என்கிறார்.
இந்த சம்பவம் குறித்து சிந்துவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“பொது கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு பணிக்காக வந்தேன். தந்தையுடன் பணியாற்றியதால் மிகவும் சந்தோஷப்பட்டேன். இது மிகவும் நல்ல தருணம்,” என அவர் கூறியுள்ளார்.
நான் அப்பா, நான் மகள் என்ற உறவு முறைகளை மீறி, பணியில் இருக்கும் போது சிந்து தன் உயரதிகாரி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு, அவரது பதவிக்குத் தர வேண்டிய மரியாதையை தவறாமல் தந்த உமாமகேஸ்வராவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அதேபோல், தன் அப்பா தனக்கு எப்படி சல்யூட் வைப்பது எனக் கருதாமல், பாசத்தை தள்ளி வைத்து விட்டு, சீருடையில் தன் கீழ் பணி புரியும் மற்றவர்களைப் போல் அவரும் ஒரு அதிகாரியே என உமா மகேஸ்வரா சர்மாவின் சல்யூட்டை தயக்கமில்லாமல் ஏற்றுக் கொண்ட சிந்து சர்மாவிற்கும் ஒரு சல்யூட்.