‘தந்தையர் தினம்’ –பைக் வாங்கி ஓட்ட உந்துதலளித்த ‘அப்பாக்கள்’ - நெகிழ்ச்சியான சில அனுபவப் பகிர்வுகள்!
மோட்டார் சைக்கிள் ஓட்ட அப்பாக்கள் உந்துதலாக இருந்தது குறித்தும் அவர்களுடன் பயணித்த அனுபவம் குறித்தும் சென்னைவாசிகள் சிலர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
எந்த ஒரு குழந்தைக்கும் முதல் ஹீரோ 'அப்பா’. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு அப்பா என்றால் பயம் இருக்கும். பெரும்பாலான அப்பாக்கள் கண்டிப்பானவர்களாக இருப்பார்கள். இதனால் குழந்தைகள் அப்பாவிடம் எதையும் நேரடியாகக் கேட்கமாட்டார்கள். பல சந்தர்ப்பங்களில் அம்மா மூலமாகவே அப்பாவிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால் குழந்தைகளையும் அப்பாவையும் இணைக்கும் பாலமாக அம்மாக்களே இருந்து வந்தனர்.
'தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ என்பார்கள். ஆனால் இன்று குழந்தைகள் அப்பாவுடன் தோழமையுடன் பழகுவதற்கு தோளை மிஞ்சி வளரவேண்டிய அவசியமில்லை. இன்று குழந்தைகளுக்கும் அப்பாக்களுக்கும் இடையே இருந்த இடைவெளி மறைந்துவிட்டது.
பொதுவாகவே குழந்தைகளுக்கு பெற்றோர்தான் ரோல்மாடல். அதிலும் குறிப்பாக வாகனம் ஓட்டுவதற்கு அப்பாக்களே ரோல்மாடலகவும் உந்துதலாகவும் இருப்பார்கள்.
மோட்டார் வண்டிகளுக்கு பார்கிங் ஸ்பேஸ் குறைவு என்றாலும் நம் மனதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துவிட்டது என்னவோ உண்மைதான்!
ஜூன் 20-ம் தேதி 'தந்தையர் தினம்’ கொண்டாடப்படும் நிலையில் சென்னைவாசிகள் சிலர் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்கு அப்பா உந்துதலாக இருந்த தங்கள் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டனர்.
ராயல் என்ஃபீல்ட் பைக் மூலம் இவர்களது அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.
சிலருக்கு மோட்டார் சைக்கிள் என்பது சுதந்திரத்தைக் குறிக்கிறது. சிலருக்கு வாகனம் ஓட்டி செல்லும் பயண அனுபவங்கள் என்றென்றும் பசுமையாக அவர்கள் மனதில் இடம்பெறுவதுண்டு. சிலர் வாகனத்திற்கு செல்லப்பெயர் வைத்து அழைக்கிறார்கள். சிலருக்கு அதுவே ஒரு அடையாளமாக மாறிவிடுகிறது. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள்.
அவர்களது அனுபவங்கள் இதோ:
ஜோ அபிலாஷ்
ஜோ அபிலாஷுக்கு பைக் பயணத்தின் மீது தீராத காதல். இவர் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் வாகனத்தில் 1.5 லட்சம் கி.மீட்டர் வரை பயணம் செய்துள்ளார்.
”மோட்டார் சைக்கிள் பயணத்தில் எனக்கு ஆர்வம் ஏற்படுவதற்கு என் அப்பாதான் காரணம். அவர் அமைதியான சுபாவம் கொண்டவர். நேர்மையானவர், கடின உழைப்பாளி. 1980-களில் புல்லட் வாங்கவேண்டும் என்பது இவரது கனவாக இருந்துள்ளது. ஆனால் வசதியில்லை. அவரது ஆசையை எப்படியாவது பூர்த்திசெய்யவேண்டும் என்று விரும்பினேன். அவருக்குப் பிடித்த ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக் வாங்கினேன். அவரது கண்களில் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கியதைப் பார்க்கமுடிந்தது. உடனே அதை ‘ஹார்ஸ்’ என்று கூப்பிட ஆரம்பித்தார்,” என்கிறார் ஜோ அபிலாஷ்.
“அப்பாவின் ஆர்வத்தைக் கண்டு ’மோட்டார் சைக்கிளில் அப்படி என்ன இருக்கிறது?’ என்று பலர் கேட்டதுண்டு. அவர்களுக்கு அப்பா சொல்லும் ஒரே பதில்,
‘சுதந்திரம்’. ‘உன் சந்தோஷத்தை விற்று பணம் ஈட்டவேண்டிய அவசியமில்லை. நினைவுகள் முக்கியம். உன்னால் முடிந்த அளவிற்கு உலகைச் சுற்றி வா. அந்த அனுபவங்களைப் பாதுகாத்து நினைவில் கொள்,’ என்பார்,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
சக்தி
மோட்டார்சைக்கிள் ஆண்களுக்கானது மட்டுமா என்ன? நாங்களும் ஓட்டுவோம் என்று பல பெண்கள் இன்று கியர் வாகனங்களை ஓட்டுவதைப் பார்க்கமுடிகிறது. அந்த வகையில் பைக் ஓட்டுவதில் ஆர்வமுள்ள சக்தி பாண்டிச்சேரி, திருச்சி, பெங்களூரு என 3,000 கி.மீட்டர் வரை பயணம் செய்துள்ளார்.
“நான் கியர் வாகனங்களை ஓட்ட என் அப்பாதான் ஊக்கமளித்தார். நான் சுதந்திரமாக வலம் வருவதற்கு முழுக்காரணம் என் அப்பா. அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் எனக்கு எல்லா விஷயங்களிலும் முழு ஆதரவு என் அப்பாதான். ராயல் என்ஃபீல்ட் வாங்கவேண்டும் என்பது அவரது கனவு. அவருடன் சென்று அதை வாங்கிய தருணம் விலைமதிப்பற்றது. அவரது மகளாக இருப்பதை நினைத்துப் பெருமைகொள்கிறேன்,” என்கிறார்.
“ராயல் என்ஃபீல்ட் வாங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால் உடனே லாக்டவுன் வந்துவிட்டதால் அதிக தூரம் பயணம் செய்யமுடியவில்லை. ஒரு பெண்ணாக நான் ராயல் என்ஃபீல்ட் ஓட்டுவதைப் பார்த்து பலர் புருவங்களை உயர்த்துவார்கள். பெருமையாக உணர்கிறேன். என்னுடைய ராயல் என்ஃபீல்ட் வாகனம் என்னுடைய ’டார்லிங்’. நான் அதை அப்படித்தான் கூப்பிடுவேன். என் அப்பாவை பாண்டிச்சேரி வரை கூட்டிச் சென்றேன். எனக்கு எல்லாமே என் அப்பாதான். ‘அப்பா’ என்ற வார்த்தையே மேஜிக்தான்,” என்று புன்னகையுடன் பகிர்ந்துகொண்டார்.
அரவிந்த்
அர்விந்த் 28 ஆயிரம் கி.மீட்டர் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
”என் அப்பா (டிவிஎஸ் சாம்ப்) மொப்பெட் வாங்கியபோது எனக்கு 8 வயதிருக்கும். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது. எங்கள் வீட்டிற்கு அருகில் ஷோரூம் எதுவும் இல்லை. மொபெட் வாங்க 30 கி.மீட்டர் வரை சென்றார். என் அப்பா என்னை அவரது மொபெட்டில் உட்கார வைத்து கூட்டிச் சென்ற முதல் பயணம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது,” என்றார்.
“என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் ராயல் என்ஃபீல்ட் வாங்க விரும்பினேன். ஒருமுறை அப்பாவை ஷோரூமிற்குக் கூட்டிச் சென்றேன். கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் பார்த்தேன். ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்பதுபோல் பார்த்ததும் பிடித்துவிட்டது. நான் பெங்களூருவில் வேலை செய்ததால் அங்கு சென்றதும் அந்த மாடலை புக் செய்தேன்," என்றார்.
"டெலிவர் எடுத்ததும் குடும்பத்திற்குக் காட்ட கிட்டத்தட்ட 150 கி.மீட்டர் வரை சென்றேன். என் அப்பா என்னையும் வாகனத்தையும் கண் இமைக்காமல் பார்த்தார். வாயடைத்துப் போனார். என்னையும் வண்டியையும் பார்த்துப் புன்னகைத்தார். வார்த்தைகளால் சொல்ல முடியாததை அந்த ஒற்றைப் புன்னகை உணர்த்திவிட்டது. ஹெல்மெட் கேமிரா கொண்டு அவரது உணர்வுகளைப் படம் பிடித்தேன். மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அது. என் அப்பாவை ரைட் அழைத்து சென்றேன். நான் மோட்டார்சைக்கிள் ஓட்ட அவர்தான் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தார்,” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் அரவிந்த்.
“என் அப்பா அம்மா விமானத்தில் பயணம் செய்ததில்லை. சீரடி செல்லவேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் ஆசை. கூடிய விரைவில் ஃப்ளைட் அனுபவத்தை ஒரு மகனாக அவர்களுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறேன். சீரடி அழைத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறேன்,” என்கிறார்.
ரோஷன் பாஸ்டியன்
”நானும் என் சகோதரனும் என் அப்பாவிடம் பைக் வேண்டும் என்று கேட்டது இன்றும் நினைவிருக்கிறது. நாங்கள் கேட்டதுதான் தாமதம் அப்பா ராயல் என்ஃபீல்ட் வாங்கிக் கொடுத்துவிட்டார். நான் அப்போது மிகவும் ஒல்லியாக இருந்தேன். அதிக எடைகொண்ட வண்டியைக் கையாள்வதற்காவது தெம்பு வேண்டும், நன்றாக சாப்பிடு என்பார் அப்பா.
”வண்டி வீட்டிற்கு வந்ததும் என்னையும் என் சகோதரனையும் காட்டிலும் அதிகம் மகிழ்ச்சியடைந்தது அப்பாதான். 11 ஆண்டுகளுக்குப் பிறகு பைக் வாங்க முடிவெடுத்து ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் வாங்கினேன். சாகசங்களை விரும்பும் தன் மகனுக்கு என்ன தேவை என்பது என் அப்பாவிற்கு நன்றாகவே தெரியும்,” என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார் ரோஷன்.
HAPPY FATHER'S DAY- நீங்களும் உங்கள் அப்பாவுடனான நினைவுகளை கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்...