தந்தைகள் மகள்களுக்கு தலை வாரி அலங்கரித்த நிகழ்வு: புது அனுபவம் வழங்கிய the6.in மற்றும் நேச்சுரல்ஸ்!
the6.in எனும் ஆச்சரியங்களை பரிசளிக்கும் நிறுவனம் நம்மில் பலருக்கு பரிட்சியம் ஆனது தான். பிறந்தநாள், திருமணம், என பல முக்கியத் தருணங்களில் நமக்கு நெருக்கமானவர்களை ஆச்சரியப்படுத்த இந்நிறுவனம் உதவி செய்து வருகிறது. இப்போது அதையும் தாண்டி நெகிழ்ச்சி அடையக் கூடிய ஒரு நிகழ்வை அரங்கேற்றி உள்ளது இந்நிறுவனம்.
the6.in மற்றும் நேச்சுரல்ஸ் சலூன் சேர்ந்து தந்தைகள் தங்களின் மகள்களின் கூந்தலை சீவி சிங்காரிக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. மகள்களின் தலை முடியை சீவி, ஜடைப் போட்டு ஜோடிப்பது உலகளவில் அம்மாக்களின் கடமையாகவே பெரும்பாலும் இருந்து வருகிறது. அதற்கு மாறாக தந்தைகளுக்கு இந்த அனுபவத்தை அளிக்கவே இந்த முயற்சி.
அட கேட்கவே புதுமையா இருக்குல? இதற்கான காரணத்தை விளக்குகிறார் the6.in நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேல்,
“இது ஒரு அனுபவத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முயற்சி தான்; தற்போதைய மாடர்ன் வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள் சுத்திக்கொண்டே இருக்கிறது. என் மகளுக்கு நான் ஹேர்ஸ்டைல் செய்ய ஆசை அதுவே இம்முயற்சிக்கு காரணம்,” என்கிறார்.
தன் மகளுக்கு தலை சீவி சிங்காரிக்க சக்திவேல் ஆசைப் பட்டிருக்கலாம், ஆனால் மற்ற தந்தைகளுக்கும் அந்த அனுபவத்தை தர நினைத்து நேச்சுரல்ஸ் சலூனை அணுகி இது போன்ற ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என தெரிவிக்க, நேச்சுரல்ஸ் நிறுவனர் சிகே குமரவேல் இம்முயற்சியில் இணைய முடிவெடுத்தார்.
தனது நெருங்கிய வட்டாரத்தில் இம்முயற்சியை பற்றி சக்திவேல் தெரிவிக்க, வந்ததென்னவோ மலை போல் ஆதரவு. 50க்கும் மேற்பட்ட தந்தைகள் தங்கள் மகள்களுடன் கலந்துக்கொள்ள தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால் இதுவே the6.inன் முதல் முயற்சி என்பதாலும் இவசமாக செய்வதாலும், இடம் பற்றாக்குறை இருந்ததாலும் தனது பதிவுகளை 10 ஆக குறைத்துக்கொண்டார்.
பதிவு செய்ததில் 7 தந்தைகள் தங்கள் மகள்களுடன் வந்தனர், ஒவ்வொருவருக்கும் தனி ஹேர் ப்ரோபஷனலை நியமித்து ஹேர்ஸ்டைலிங் செய்ய கற்றுக்கொடுக்கப்பட்டது. தலைமுடியை ஷாம்பூ போட்டு அலசுவதில் துவங்கி இறுதியில் அலங்காரம் செய்யும் வரை அனைத்துமே தந்தைமார்களே செய்தனர்.
“ஒரு 25 வயது பெண் தன் தந்தையை அழைத்து வருவதாக தெரிவித்தார், சில காரணங்களால் வர முடியவில்லை, மற்ற குழந்தைகள் அனைவருமே 10,11 வயதிற்குள் தான் இருந்தனர்.”
இதே போல் மேலும் சற்று பெரிய அளவில் தந்தை-மகள்களை வரவழைத்து, முடி அலங்காரம் நிகழ்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் சக்திவேல்.
இந்த வாரம் இப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை நடத்திய இந்நிறுவனம் வரும் மாதங்களில் வெவ்வேறு முயற்சிகளை எடுத்து வர உள்ளது, அதாவது அடுத்து ’தாத்தா பாட்டி பேரக் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி’. 10க்கும் மேற்பட்ட குடும்பங்களை அழைத்து பாட்டி கதை சொல்வதுதான் இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் என விளக்குகிறார் சக்திவேல்.
“சிறு வயதில் நம் பாட்டி நமக்கு கதை சொல்லி நாம் வளர்ந்தோம், அனால் இப்பொழுது வளரும் குழந்தைகளுக்கு அந்த அனுபவம் உள்ளதா என்பதுகூட தெரியவில்லை. அதை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில் தான் இதை செய்கிறோம்,” என்கிறார்.
மாதாமாதம் இது போன்ற நிகழ்சிகளை தங்கள் நிறுவனம் நடத்தும் என்றும் தெரிவிக்கிறார். இது போன்ற நிகழ்சிகளுக்கு கட்டணம் வசூலிப்பது இல்லை, கட்டணம் வசூலித்தால் அதற்கான நோக்கமே தடம்மாறும் என்கிறார் சர்ப்ரைஸ் சக்திவேல்.
இவர்களின் புதுவித அனுபவ நிகழ்வுகள் பற்றி தெரிந்து கொள்ள: the6.in