இந்தியாவின் முதல் வரவேற்பாளர் மற்றும் எச் ஆர் பெண் ரோபோட் மித்ரி!
தொழில்நுட்ப வளர்ச்சியால் சங்கரின் 2.0 படத்தில் பெண் உதவியாளராக ரோபோட் இருக்கும்பட்சத்தில் உண்மையில் ஏன் இருக்கக் கூடாது என ஓர் பெண் ரோபோட்டை உருவாக்கியுள்ளது பெங்களூரைச் சேர்ந்த ஓர் ஸ்டார்ட்-அப்.
மித்ரி, என்கிற இந்த ரோபோட் இந்தியாவின் முதல் பெண் வரவேற்பாளர் மற்றும் மனித வள துறை ரோபோட் என்கின்றனர் இத்தயாரிப்பாளர்கள். பெங்களூரைச் சேர்ந்த இன்வென்டோ நிறுவனம் இந்த ரோபோட்டை தயாரித்துள்ளது. பெண் ரோபோட் என்றாலும், பார்ப்பதற்கு மனிதனை போல் காட்சியளிக்காமல் டோம்-வடிவில் ஆண்டெனா-பொருத்தப்பட்ட தலை, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உடல் மற்றும் நீல எல்இடி கண்கள் என இயந்திர ரோபோட் போலவே காட்சியளிக்கிறது இந்த மித்ரி.
பார்ப்பதற்கு மட்டுமே இயந்திரம் போல் இருக்கும் இந்த மித்ரி ரோபோட்டுடன் பேசினால் ஒரு நிஜ மனிதனுடன் பேசும் பிம்பத்தையே இது அளிக்கிறது. நம்மை போல் தலையையும் கண்களையும் அசைத்து தன்னைச் சுற்றி இருப்பதை கவனிக்கிறது. மேலும் ஒருவரின் தகவலை அறிமுகப்படுத்திவிட்டால் அவர்களின் பெயர் முகம் வயது மற்றும் அவரைப்பற்றி கூறும் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துக்கொள்கிறது. அத்தகவல்களுடன் பொருந்தும் நபரை பார்த்தால் அவரை உடனே மித்ரியால் கண்டறிய முடிகிறது; அதோடு அவர்களுடன் கையும் குலுக்குகிறது.
மித்ரியை முழுமையாக பயன்படுத்தியுள்ளது பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு ஸ்டார்ட்-அப். கடந்த வாரம், ஸ்மார்ட்வொர்க்ஸ் நிறுவனம், பெங்களூரில் நடைபெற்ற தங்களது டெக் சென்டர் திறப்புவிழாவின் போது மித்ரி ரோபோட்டை தொகுப்பாளராக நியமித்திருந்தது. விழாவின்போது வரவேற்புரை அழைத்து விருந்தினர்களை வரவேற்றதோடு அதன் பின் விருந்தினர்களோடு உரையாடலில் பங்கேற்றது.
ஸ்மார்ட்வொர்க்ஸ் மற்றும் இன்வென்டோ ரோபாட்டிக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கைக்கோர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஸ்மார்ட்வொர்க்ஸ் மையங்களில் மித்ரி ரோபோட்டை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.
இன்வென்டோ நிறுவனம், ஸ்மார்ட்வொர்க்ஸின் உள் உதவியாளர் பணியாற்ற மித்ரியை வடிவமைத்துள்ளது. அதாவது, மித்ரி வேலையாட்கள் punch-in செய்யவும் (உள்ளே கட்டமைக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தி முகம் அடையாளம் மூலம்), திசைகள் மற்றும் வழிகாட்டுதல், பொதுவான கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் பார்வையாளரின் பதிவுகளை நிர்வகிப்பது போன்ற வேலைகளை செய்ய உதவும்.
“மித்ரியை அலுவலக வரவேற்பில் வைத்திருப்பது பார்வையாளர்களை ஈர்ப்பதோடு தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக அலுவலகத்தில் பயன்படுத்துகின்றோம் என்கிற திருப்தியை தருகிறது,” என்கிறார் ஸ்மார்ட்வொர்க்ஸ் நிறுவனர் சாரதா.
இன்வென்டோ ரோபோடிக்ஸ் நிறுவனம்
இரண்டு வருடத்திற்கு முன்பு அமெரிக்க வாழ்க்கை மற்றும் ஐடி வாழ்வை துறந்து பெங்களூரில் தன் மனைவியுடன் இணைந்து இந்நிறுவனத்தை துவங்கினார் பாலாஜி விஸ்வநாதன்.
கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த சர்வதேச நிறுவனர்கள் சந்திப்பில் முழுமையாக இந்தியாவில் தயார்செய்த ’மேக் இன் இந்தியா’ ரோபோட்டை அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். மித்ரா ஆண் ரோபோட்டை இவங்கா டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் முன் அறிமுகப்படுத்தி தனது சந்தையை துவங்கியது இந்நிறுவனம்.
இதனைத் தொடர்ந்து இன்று மித்ரியை தயார் செய்துள்ளது, இது குறித்து பேசிய நிறுவனர்,
“வரவேற்பாளர் மற்றும் எச்ஆர் போல் இயங்கவே மித்ரியை வடிவமைத்த்துள்ளோம். தற்போது ஆங்கிலம் மட்டும் பேசும் மித்ரி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மொழிகளை இணைத்துக்கொள்ளலாம்,” என்கிறார்.
மின்னல் வேகத்தில் செயல்படும் இந்த ரோபோட் எல்லா நிறுவனங்களிலும் இருக்க வேண்டிய ஒன்று என்கிறது இந்நிறுவனம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை முறையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பணிப்புரிய இந்த ரோபோட்டுக்கள் வந்தனர். இப்பொழுது நிறுவனங்களில் பணிப்புரிய தயாராக உள்ளது.
மித்ரா மற்றும் மித்ரி ரோபோட் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்டம்...