கொரோனாவுக்கு எதிரான போர்: தமிழக அரசின் ‘War room’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (UCC) எனப்படும் வார் ரூம் ( war room) தொடங்கியுள்ளது அரசு. ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட இந்தக் குழுவானது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும்
கொரோனா எனும் அரக்கனுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் புதிய கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை உலகளவில் சுமார் 16 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 லட்சம் பேரின் உயிரைக் குடித்துள்ளது கொரோனா.
கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தனது உருமாற்றத்தால் மருத்துவத்துறைக்கு இன்னும் சவாலான நோயாகவே கொரோனா இருந்து வருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் ரொம்பவும் மோசமாகவே உள்ளது.
மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கடந்த முறையைவிட இம்முறை அதிக மக்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் மருத்துவமனைகள் இடப்பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றனர். எனவே குறைவான பாதிப்புள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அப்படியாக வீட்டில் இருந்து சிகிச்சைப் பெறுபவர்கள் அல்லது புதிதாக தொற்றுக்கு ஆளாகி மருத்துவ உதவி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக அரசும், தன்னார்வலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒன்று தான் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (UCC) எனப்படும் 'வார் ரூம்' (War room). தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு இதனைத் தொடங்கியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வுக் குழும அலுவலகத்தில் இந்த 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன் மற்றும் அழகுமீனா என மொத்தம் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் தாரேஷ் அகமது ஐஏஎஸ் கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆக்சிஜன் தேவை கண்காணிப்பு மற்றும் அவசர உதவிக்காக நந்தகுமார் ஐஏஎஸ், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை நிர்வகிப்பதற்கு எஸ்.உமா ஐஏஎஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கள ஆய்வு மேற்பார்வையாளராக எஸ்.வினீத் ஐஏஎஸ், சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவக் கல்லூரிகள், கோவிட் மருத்துவமனைகளுக்காக கே.பி.கார்த்திகேயன் ஐஏஎஸ், கட்டளை மையத்தின் தரம் மற்றும் செயல்களை கண்காணிப்பதற்கு டி.ஆர்.ஓ அழகுமீனா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவானது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சுகாதாரச் சேவை மையத்துடன் இணைந்து செயல்படும் சிறப்பு மையம் இது என்பதால், 104 என்ற எண் மூலமே கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தினை மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் அரசு மருத்துவமனை படுக்கை, ஆக்சிஜன் படுக்கை , ரெம்டெசிவர் மருந்து எங்கு கிடைக்கும், தனியார் மருத்துவமனை படுக்கை, எங்கு எவ்வளவு இடம் உள்ளது எனவும் 108 ஆம்புலன்ஸ் எங்கு உள்ளது என்ற தகவல்களை மக்கள் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்
சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை இது கண்காணிக்கும். படுக்கை வசதிகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளிலும் இம்மையம் ஈடுபடும்.
ஏற்கனவே, கொரோனாவால் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வரும் டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வார் ரூம்கள் திறக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் வார் ரூம் தொடங்கி இருப்பது ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு என சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.
போன் மூலமாகவே எந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருக்கிறது, எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதிகள் இருக்கிறது என்பதை இந்த குழு மூலமாகவே நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ தெரிந்து கொள்ள முடியும். இதனால் நோயாளிகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது. தேவையில்லாமல் மருத்துவமனைகளில் கூட்டம் சேர்வதும் தவிர்க்கப்படும்.
“இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல," என தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல, மக்கள் மனது வைத்து முறையாக மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்தால், கொரோனாவிற்கு எதிரான போரில் மக்கள் நிச்சயம் வென்று விட முடியும். அதற்கு இந்த வார் ரூம்கள் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.