தமிழகத்தில் விரைவில் ’நிதி தொழில்நுட்ப நகரம்’ - முதல்வர் அறிவிப்பு!
தமிழக அரசின் 10 ஆண்டு திட்டமான ’நிதி தொழில்நுட்ப நகரம்’ அமைப்பதற்கான இடம் எங்கே தெர்வு செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா?
தமிழக அரசின் பத்தாண்டு திட்டமான வர்த்தகத் தொழில்நுட்ப நகரம் அமைக்க சென்னையின் பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டது. வர்த்தக நகரம் அமைக்கக் குறைந்த பட்சம் 250 ஏக்கர் நிலமாவது தேவைப்படும் என்று நிதித்துறை அதிகாரிகள் கருதினர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்த நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில் இருக்கும் நிலத்தில் இதனை அமைக்கலாமா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த இடம் மத்திய அரசின் பொதுத் துறையான ஐடிபிஎல் வசம் உள்ளது.
மற்றொரு இடமாக காட்டுப்பாக்கத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முதுநிலை விலங்கியல் ஆராய்ச்சி மையம் (PGRIAS). இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த மையம் அமைந்துள்ள 246 ஹெக்டேர் நிலத்தை பார்வையிட்டு சென்றிருக்கின்றனர்.
1957ம் ஆண்டு ஆடுகள் பண்ணையாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மையமானது 1986ம் ஆண்டு முதல் கால்நடை பல்கலைக்கழகத்தின் கால்நடைக்கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதன் பின்னர் இந்த மையம் உயிர் விலங்குகள் ஆராய்ச்சி நிலையமாக இருந்தது. 1976ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருந்தது 1989 வரை தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டது. 2011ம் ஆண்டு உயிர் விலங்குகள் ஆராய்ச்சி நிலையமானது முதுநிலை விலங்கியல் ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் சென்னையின் ஐடி நகரம் என்றால் தரமணி, ஓஎம்ஆர் சாலை என்று அடையாளப்படுத்துவது போல வர்த்தகத் தொழில்நுட்ப நகரமாக காட்டுப்பாக்கம் அமையப் போவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை போரூரை அடுத்த காட்டுப்பாக்கத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் வர்த்தகத் தொழில்நுட்ப நகரம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வர்த்தகத் தொழில்நுட்ப நகரம் செயல்படத் தொடங்கிய பின்னர் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களான வங்கித்துறை, காப்பீடு, ஸ்டார்ட் அப்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய சர்வதேச தரத்திலான அலுவலகங்களுக்கான இடங்களை ஏற்படுத்துவதே வர்த்தகத் தொழில்நுட்ப நகரத்தின் முக்கிய நோக்கம் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“குஜராத்தில் இருக்கும் GIFT நகரம் போல இந்த இடத்தில் அமையும் அலுவலங்களுக்கு சிறப்பு வரிச்சலுகை அறிவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போல சர்வதேச வங்கிகள் மற்றும் பங்குச்சந்தைகள் தங்களது அலுவலங்களை வரி இல்லா நிறுவனங்களாக அமைத்துக் கொள்ள முடியும்,” என்று கருதுகின்றனர்.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி