தில்லி தீ விபத்தில் 11 பேர் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!
தில்லி கட்டிட தீ விபத்தின் போது தனக்கு ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் தீரத்துடன் செயல்பட்டு 11 பேர் உயிரை காய்பாற்றிய தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா.
அண்மையில், தில்லியின் அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு துறையைச் சேர்ந்த 150 வீரர்கள், ஐந்து மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
தீயணைப்பு வீரர்களில் ஒருவரான ராஜேஷ் சுக்லா, தனது உயிரை பணையம் வைத்து கட்டிடத்திற்குள் சென்று 11 பேரைக் காப்பாற்றினார். இப்படி மீட்கப்பட்டவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
"இதுவரை 7,000 தீயணைப்பு உதவி கோரிக்கை நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கிறேன். அண்மையில் கரோல் பாகில் ஹோட்டல் அர்பித் பாலஸ் தீவிபத்து மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தீ விபத்து மீட்புப் பணிகளில் பங்கேற்றுள்ளேன். உயிரிழப்பை பொருத்தவரை இது மோசமான தீ விபத்து,” என்று ராஜேஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது.
அதிகாலை 5.22 மணி அளவில் கட்டிடம் தீ பிடித்துக்கொண்டு, கருப்புப் புகை சூழந்து கொண்டது. இதை மீறி, ராஜேஷ் 12 முறை கட்டிடத்திற்குள் சென்று உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டு வந்தார். இந்த செயல்பாட்டின் போது அவர் காயம் அடைந்ததோடு, அடர் புகையால் தலைவலி பாதிப்புக்குள்ளானார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த ராஜேஷ், தில்லி தீயணைப்புத்துறையில் உதவி மண்டல அதிகாரியாக இருக்கிறார். 2004 முதல் இத்துறையில் பணியாற்றி வருகிறார். தீவிபத்திற்குள்ளான கட்டிடத்தில் இருந்து 63 பேர் மீட்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லாவின் தீரச்செயல் தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினால் பாராட்டப்பட்டுள்ளது.
“ராஜேஷ் சுக்லா தான் உண்மையான ஹீரோ. அந்த இடத்திற்கு முதலில் வருகை தந்த தீயணைப்பு வீரான சுக்லா, 11 பேர் உயிரை காப்பாற்றியுள்ளார். தனக்கு ஏற்பட்ட காயங்களை மீறி செயல்பட்ட அவரது வீரத்திற்கு தலை வணங்குகிறேன்,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கட்டுரை: Think Change India