பஞ்சாபின் முதல் பட்டியலின முதல்வர்: யார் இந்த சரண்ஜித் சிங் சன்னி?
மாணவர் தலைவர் டூ முதல்வராக பதவியேற்கும் சரண்ஜித்!
வழக்கறிஞர், மேலாண்மை பட்டதாரி, வாழ்நாள் மாணவர் மற்றும் பட்டியலின மக்களின் மீட்பர், தன்னைத்தானே உருவாக்கிய அரசியல்வாதி இப்படி பல அடையாளங்களைக் கொண்டவர் பஞ்சாபின் புதிய முதல்வர்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ய புதிய முதல்வர் தேர்வுக்கான கூட்டம் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப்பின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரண்ஜித் சிங் சன்னி. 58 வயதாகும் இவர், இன்னும் சற்று நேரத்தில் முதல்வராக பதவியேற்க இருக்கிறார். அவர் யார் என்பது குறித்து பார்ப்போம்!
யார் இந்த சரண்ஜித் சிங் சன்னி?
பள்ளிப் படிக்கும் போதே அரசியலில் காலடி எடுத்துவைத்தவர் இந்த சரண்ஜித் சிங். காரார் பகுதியில் உள்ள கலாசா சீனியர் செகன்டரி பள்ளியில் மெட்ரிகுலேஷன் படித்துக் கொண்டிருந்தபோதே அரசியலில் நுழைந்துவிட்டார். அப்போதே மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சண்டிகர் ஸ்ரீ குரு கோபிந்த் சிங் கல்லூரியில் பட்டப்படிப்புக்காக இணைந்தபோதும் மாணவர் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்ட சரண்ஜித் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சரண்ஜித்துக்கு கல்வியாளர்கள் மீது விருப்பம் அதிகம். அதன் காரணமாகவே என்னவோ, எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார்.
இரண்டு முதுகலைப் பட்டங்களுடன் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகவும் உள்ளார். கவுன்சிலராக இருந்தபோதுதான் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். அவர் முதலில் சாம்கார் சாஹிப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார்.
2016 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றியபோதுதான் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அரசியல் அறிவியல் துறையில் பிஎச்டி சேர விரும்பிய நிலையில் தான் தற்போது முதல்வர் பதவி அவரைத் தேடிவந்துள்ளது.
சரண்ஜித் கல்வி மீது இவ்வளவு விருப்பம் கொண்டிருக்க மலேசியாவில் சிறிது காலம் பணிபுரிந்த அவரின் தந்தை ஹர்சா சிங்கே காரணம். அவரின் தந்தை குழந்தைகளுக்கு நல்ல கல்வியை உறுதி செய்வதற்காக குடும்பத்தை பூர்வீக கிராமத்தில் இருந்து காரர் நகர் பகுதிக்கு குடிபெயர்த்தி இருக்கிறார். இந்த செயல் சரண்ஜித் மனதில் ஆழமாக பதிய கல்வியில் சிறந்து விளங்கி இருக்கிறார்.
சரண்ஜித் மனைவி கமல்ஜீத் ஒரு மருத்துவர், தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகன் நவ்ஜீத் சிங், தந்தையைப் போலவே சட்டம் பயின்று வருகிறார்.
அரசியலில் மக்களோடு இணைந்திருப்பதே சரண்ஜித்தின் பெரிய பலம். அவர் நம்புவதும் இதை தான். பட்டியலின சமூகமான ராமதாசியா சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு எதிராக கலகம் செய்யத் தொடங்குவதற்கு முன்பே, பஞ்சாபின் அமைச்சரவையில் தலித்துகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க விரும்பினார்.
தலித் மக்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல்கொடுக்கும் சரண்ஜித், இந்த கோரிக்கைக்காக அமரீந்தர் சிங்கை எதிர்க்கத் தொடங்கினார். இந்த கலகத்துக்கு மத்தியிலும், எஸ்சி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு அமரீந்தர் சிங்கை பாராட்டிய நிகழ்வே அவர், தலித் மக்களுக்கு போராடுவதற்கு ஒரு சான்று.
அமரீந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்த சரண்ஜித், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்கிற்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவருடன் இணைந்து அமரீந்தர் சிங்கை வலுவாக எதிர்த்து வந்த நிலையில் தான் தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் வரலாற்றில் முதல் பட்டியிலன முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் ஆட்சிக்காலம் மிகக்குறைவாக இருக்கின்றன. விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் எப்படி ஆட்சி செய்யப்போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.