முதன்முறை எம்.பி. ஆன மகிழ்ச்சி: நாடாளுமன்றம் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் நடிகைகள்!
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக எம்.பி. ஆகியுள்ள பிரபல வங்காள நடிகைகளான மிமி சக்ரபோர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜகான் ஆகியோர், நாடாளுமன்றத்திற்கு முன்பு தங்களது அடையாள அட்டையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.
இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் பல கட்டங்களாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீண்டும் மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்கிறது.
இந்தத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்கினர் பிரபல வங்காள நடிகைகளான மிமி சக்ரபோர்த்தியும், நுஸ்ரத் ஜகானும். ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டார் 30 வயது நடிகையான மிமி சக்ரவர்த்தி. அத்தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதே போல், பசிராத் தொகுதியில் போட்டியிட்ட 29 வயது நடிகை நுஸ்ரத் ஜகான் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த முறை இங்கு 1.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமூல் வெற்றி பெற்றிருந்தது நினைவுக் கூரத்தக்கது. தற்போது அந்த வாக்கு வித்தியாசத்தில் மேலும் அதிரடி காட்டி அமோக வெற்றி பெற்றார் நுஸ்ரத்.
இந்நிலையில், முதன்முறையாக எம்.பி. ஆகியுள்ள இந்த நடிகைகள் இருவரும், நேற்று நாடாளுமன்றம் சென்றிருந்தனர். மாடர்ன் உடையில் சென்றிருந்த அவர்கள், தங்களது அடையாள அட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்புகைப்படங்களை அவர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றி உள்ளனர். அதில், இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும், தங்களை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கும் தங்களது நன்றிகளை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிமி மற்றும் நுஸ்ரத்தின் இந்த நாடாளுமன்றப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. நவநாகரீக உடையில் ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் அணிந்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ள போதும், இந்தப் புதிய மாற்றத்தை பலர் வரவேற்றுள்ளனர். நாடாளுமன்றத்திற்கு இளம் பெண்கள் எம்.பி.யாக சென்றிருப்பதற்கு பலர் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் படத்துக்கு கமெண்ட் அடித்து ட்வீட் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும்படி ட்வீட்டிய காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளார் மற்றும் நடிகை குஷ்பு சுந்தர்,
“இந்த படம் பார்க்க நன்றாகத்தானே உள்ளது. ஏன் பாராளுமன்றத்தில் நுழைபவர்கள், காட்டன் அல்லது லினென் புடவைகள் கட்டிக்கொண்டு தான் போகவேண்டும் என்ற விதியா இருக்கிறது...” என்று கேட்டுள்ளார்.
புதிய வரலாறு:
2019 பொதுத் தேர்தலில் 724 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் 78 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக (எம்.பி.), வெற்றி பெற்றுள்ளனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பெண்கள் எம்.பிக்கள் ஆகியுள்ளனர்.
இதையும் படிங்க: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
இந்தப் பெண்களில் 47 பேர், அதாவது 60%க்கும் அதிகமானோர் என திரிவேதி அரசியல் தரவு மையம் (TCPD) இணை இயக்குநர் கில்லஸ் வெர்னியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் வெற்றி மூலம், எட்டு முறை வெற்றி பெற்றவர் என்ற சிறப்பு மேனகா காந்திக்கு கிடைத்துள்ளது.
ஒடிசாவில் பிஜூஜனதாதளம் கட்சி சார்பாக, கெயன்ஹர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.டெக் பட்டதாரியான சந்திராணி முர்மு தான், இம்முறை இளம்பெண் எம்.பி. ஆவார். இவருக்கு தற்போது 25 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைக்கு இம்முறை அதிக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 2019 ஆம் ஆண்டில் ஒரு பெண் வேட்பாளரை கூட தேர்ந்தெடுக்கவில்லை என்பது கசப்பான உண்மை.