'திறமை கூடவே வறுமையும் இருக்கிறது' - சர்வதேச வாள்வீச்சு போட்டிக்கு நிதியுதவி கோரும் மாற்றுத் திறனாளிப் பெண்!
மாநில மற்றும் தேசிய அளவில் பல பதக்கங்களை குவித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிராந்தி தாமஸ் சர்வதேச சக்கர நாற்காலி வாள்வீசும் போட்டிக்குத் தேர்வாகியும் கட்டணம் மற்றும் பயணச் செலவை செய்ய முடியாமல் தெரிந்தவர்கள் மூலமும் சமூக ஊடகத்திலும் நிதி திரட்டி தனது கனவை நினைவாக்கப் போராடி வருகிறார்.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் பெரியவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சிராந்தி தாமஸ். எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் இவரைப் பற்றி நாம் ஏன் அறிய வேண்டும் என்று நினைக்கலாம்.
நூறு கோடி மக்களில் நான் சிராந்தி தாமஸ் சக்கர நாற்காலி வாள்வீசும் வீராங்கனை என்று பெருமையோடு சொல்லும் திறமையை தன்னகத்தே வளர்த்துக் கொண்டிருக்கிறார் இவர்.
சுழலும் பூமிக்கு இணையாக ஓடுவதற்கு கால்கள் இல்லாவிட்டாலும் சக்கர நாற்காலியை கைகளால் அதிக விசையுடன் இயக்கும் வலிமை படைத்தவர் சிராந்தி. வலிகள், வேதனைகள், சமூக கேலிப்பேச்சுகள் என அனைத்தையும் கடந்து இது தான் நான் என்று முத்திரைப் பதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் அவரிடம் உரையாடினோம்.
“என் பெயர் சிராந்தி தாமஸ், அப்பா மீனவர். இரண்டு அக்கா, அண்ணன், 2 தங்கைகள் என எங்களுடைய குடும்பம் பெரியது. சின்ன வயதில் கூட நான் நடந்ததாக எனக்கு நினைவில்லை. 10 மாதக் குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே தவழ்ந்து செல்வது தான் எனக்கு இயற்கை கொடுத்திருக்கும் வாய்ப்பாகிப் போனது.
”10 வயது வரை எங்கள் ஊரில் இருந்த பள்ளியிலேயே படித்தேன், நான் மாற்றுத் திறனாளியாக இருப்பதால் யாரிடமும் பேச மாட்டேன், சக மாணவர்கள் கேலி செய்வார்கள் என்ற பாதுகாப்பின்மை உணர்வுடனே இருப்பேன். 5ம் வகுப்பிற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் பள்ளி செல்லவே இல்லை, மற்றவர்கள் பள்ளி செல்வதைப் பார்த்து பல நாட்கள் கண்ணீர் விட்டிருக்கிறேன்.”
பின்னர், நாங்குநேரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் வசதியை அப்பா ஏற்பாடு செய்து கொடுத்தார். மாணவர்கள் விடுதிக்குச் செல்வதென்றாலே கவலைப்படுவார்கள், ஆனால் நான் மகிழ்ச்சியாகச் சென்றேன். முதன்முறையாக அப்போது தான் நான் வெளி உலகை பார்க்கிறேன். என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு உறுதியுடனும் வலிமையுடனும் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன்.
ஆசிரியர்களின் ஊக்கம் சக மாணவர்களின் நடவடிக்கைகள் எனக்குள் மாற்றத்தை கொண்டு வந்தது நானும் மற்றவர்களைப் போல பேசத் தொடங்கினேன், சகஜமாகத் தொடங்கினேன்.
“என்னைப் போன்ற மாற்றுத்திறன் உடையவர்களுக்கு நம்பிக்கை வருவதற்கான உதாரணமாக நான் மாற வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டேன். எனக்கான அடையாளம் என்ன என்ற தேடல் இருந்தது, ஊர் போற்றும் பிள்ளையாக பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சாதித்து பெயர் பிரபலமாக வேண்டும், பெற்றோருக்குப் பின்னர் நான் யார் துணையும் இன்றி இருப்பேன் என்ற நம்பிக்கையை அம்மா, அப்பாவிற்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.”
சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதியுடன் கூடிய பள்ளியில் தங்கியே நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிப்பருவத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே குண்டு எறிதல், வால்வீச்சு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றேன். 2011ம் ஆண்டில் சக்கர நாற்காலி வாள்வீசும் போட்டி என்று ஒன்று இருப்பது நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்த நிலையில், அதன் மீது ஆர்வம் வந்தது.
தவழ்ந்து தான் செல்வேன் கால்களின் சக்தியும் சேர்த்து கைகள் அத்தனை வேகமாக இயங்கும். வாள்வீசும் போட்டியில் முதன்முறை பங்கேற்ற போதே தங்கப்பதக்கம் வென்றது மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவதன் அடிப்படையிலேயே சர்வதேச அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதனால் முதல் முறையிலேயே பதக்கம் வென்ற நிலையில் அப்போதே சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் வெளி உலகம் அதிக அறிமுகம் இல்லை என்பதோடு நிதி திரட்டுவதற்கான வாய்ப்பும் இல்லாததால் அப்போது அந்த வாய்ப்பை தவறவிட்டேன்.
தொடர்ந்து 2013லும் ஒரு முறை சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போதும் என்னால் அதில் பங்கேற்பதற்கு செல்ல முடியாததால், மனம் நொந்துவிட்டது. நான் எவ்வளவு முயற்சித்து போட்டியில் வென்றாலும் பொருளாதார சூழல் மற்றும் பக்கபலமாக யாரும் இல்லாத காரணத்தால் என்னால் அடுத்த நிலைக்குச் செல்ல முடியவில்லை.
இதனிடையே, குடும்பச் சூழலும் மிகவும் வறுமையில் சிக்கியது, உடன்பிறந்தவர்கள் திருமணம், வயது முதிர்வால் அப்பாவால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லமுடியவில்லை. என்னால் முடிந்த வருமானத்தை குடும்பத்திற்கு சம்பாதித்துத் தர வேண்டும் என்பதால் விளையாட்டை விட்டு நான் படித்த பள்ளியிலேயே பணியாற்றினேன்.
மிகவும் குறைந்த வருமானமே கிடைத்தது, வறுமையால் எனக்கான அடையாளத்தைத் தொலைத்துவிட்டேன் என்ற வலி எனக்குள் இருந்து வந்தது. போராட்டம் நிறைந்த வாழ்வில் முயற்சித்து வென்று காட்ட வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
அதனால் 6 வருட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் 2019ம் ஆண்டில் வால்வீசும் போட்டியில் பங்கேற்றேன். ஒற்றையர் பிரிவு, குழுப் பிரிவு என நான் பங்கேற்ற 4 போட்டிகளிலும் பதக்கங்களை வென்றேன். இந்த முறை பிடித்த வாலை வெற்றிவாகைக்குப் பின்னர் தான் கீழே இறக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.
சென்னையில் இருந்தால் மட்டுமே தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியும் பயிற்சிகள் எடுத்துக் கொள்ள முடியும் என்று சென்னையில் பெண்கள் விடுதியில் தங்கி பணியாற்றத் தொடங்கினேன். 2019ம் ஆண்டு இறுதியில் வால்வீசும் போட்டியில் வெற்றி பெற்ற கையோடு கொரோனா பெருந்தொற்றால் அனைத்துமே முடங்கிப் போனது.
எனினும், கடந்த மாதம் ஒடிசாவில் தேசிய அளவிலான போட்டிகள் நடப்பதாக தெரிய வந்தது. அங்கு செல்வதானால் என்னுடைய சொந்த செலவில் தான் செல்ல வேண்டும், வேலைக்கு விடுப்பு எடுக்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளர் என்பதால் எத்தனை நாட்கள் வேலைக்குச் செல்லவில்லையோ அத்தனை நாட்களுக்கு சம்பளம் கிடையாது.
போட்டிக்குச் சென்று வர 7 நாட்கள் என்றால் என் சம்பளத்தில் கால் பங்கை இழக்க நேரிடும் என்ற சூழலிலும் விளையாட்டின் மீதான ஆர்வத்தால் ஒடிசா சென்று போட்டிகளில் பங்கேற்றேன். பயிற்சிகள் இல்லாமலேயே அந்தப் போட்டியில் 2 வெண்கலப்பதக்கங்களை வென்றேன். இதனையடுத்து தாய்லாந்தில் நடக்க இருக்கும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு மூன்றாவது முறையாக எனக்குக் கிடைத்திருக்கிறது.
குறுகிய காலத்தில் அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக கட்டணம் கட்டச் சொல்வதனால் செய்வது தெரியாது திகைத்து இருக்கிறேன். வயது 36 ஆகிவிட்டது இந்த முறையும் வாய்ப்பை தவறவிட்டால் இனியும் வாய்ப்பு கிடைக்குமா என்ற அச்சம் ஒருபுறம், என்னுடன் சேர்த்து இன்னொருவரையும் உதவிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால் மொத்தம் ரூ.3 லட்சம் செலவாகும் அந்த நிதியை எப்படி திரட்டுவது என்ற குழப்பம் மறுபுறம்.
இருப்பினும் என்னுடைய வழிகாட்டி ஒருவரின் மூலம் சமூக நிதி திரட்டு அமைப்பான MILAAP மூலம் நிதியை திரட்டும் வழியை காட்டினார். இப்போது வரை சுமார் ரூ.80 ஆயிரம் மட்டுமே நிதி கிடைத்திருக்கிறது, 23ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.
போட்டிகளில் பங்கேற்கும் போது முதல் முறை நாம் செலவு செய்ய வேண்டும், சர்வதேசப் போட்டிக்கான பட்டியலில் பெயர் இடம்பெற்ற பின்னரே அரசின் உதவிகள் கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அரசிடம் எப்படி உதவி கோருவது என்று தெரியவில்லை, அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கான பின்புலம் எதுவும் இல்லை. ஊருக்குச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கலாம் என்றாலும் கால அவகாசம் மிகக்குறைவாக இருக்கிறது, எத்தனையோ சவால்கள் இருந்தாலும் இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலுடன் தொடர்ந்து கட்டணம் செலுத்தி பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறேன்.
சொந்தமாக வால்வீசும் கருவி கூட இல்லை கருவியை கடன் வாங்கி தான் இப்போது வரை போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். திறமை இருக்கிறது கூடவே வறுமையும் இருக்கிறது, இந்தப் போட்டியில் பங்கேற்றால் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் அரசின் உதவி மற்றும் பணி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு போராடிக்கொண்டிருக்கும் சிராந்திக்கு நீங்களும் உங்களால் முடிந்த சிறு தொகையை உதவியாக செய்யலாம்.
சிராந்திக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்: Milaap