லட்சாதிபதி மன நிலை வேண்டுமா? செல்வந்தர்களின் 5 ரகசியங்களை பின்பற்றுங்கள்!
நம்மில் பலருக்கும் லட்சாதிபதியாகும் ஆசை இருக்கலாம். ஆனால் இந்த இலக்கு எட்ட முடியாததாகவே தோன்றலாம். லட்சாதிபதியாக நீங்கள் கோடீஸ்வர வாரிசாக இருக்க வேண்டும் என்றில்லை. உங்களிடம் சரியான குணநலன்கள் இருந்தால், நீங்களும் லட்சாதிபதியாகலாம். அதற்கான குணநலன்களை அறிந்து கொள்வது நல்லது.
லட்சாதிபதிகளிடம் இருக்கும், நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஐந்து பழக்க வழக்கங்கள் இவை:
1. சிக்கனம்
எல்லா லட்சாதிபதிகளும் சிக்கனவாதிகள் இல்லை. எனினும், சுயமாக சம்பாதித்து லட்சாதிபதியானவர்கள் ஏதேனும் ஒரு வகை சிக்கனத்தை கடைப்பிடிக்கின்றனர். வாரென் பப்பேட் போன்ற கோடீஸ்வரர்கள் கூட, சிக்கன பழக்கம் கொண்டுள்ளனர். இதன் பொருள் எப்போதும் மலிவு விலை பொருட்களை வாங்குவது அல்ல. இது சிறந்த மதிப்பை பெறுவதாகும். உங்களுக்கு தேவையில்லாத பொருட்கள் மீது செலவு செய்யாமல் இருப்பதும் தான். சிக்கனத்தை கடைப்பிடிப்பது உங்கள் எதிர்காலத்திற்கான பணத்தை சேமிக்க உதவும்.
2. புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவுகள்.
பெரும்பாலான லட்சாதிபதிகள் பணத்தை ஈட்ட பணம் தேவை என உணர்ந்திருக்கின்றனர். அவர்கள் கூட்டு வட்டியின் அருமையை உணர்ந்திருக்கின்றனர். எப்படி புத்திசாலித்தனமான முதலீடுகளை மேற்கொள்வது என ஆய்வு செய்கின்றனர். எதிர்காலத்தில் மருத்துவத்திற்கு அதிக செலவு செய்யாத வகையில் தங்கள் உடல் நலனை பாதுகாப்பது, நல்ல கல்வியில் (கல்லூரி படிப்பு என்றில்லை) முதலீடு செய்வது, வர்த்தகத்தை துவக்குவது, வலுவான பங்குகளை கண்டறிவது என அவர்கள் பலனை அளிக்கும் செயல்களை ஆய்வு செய்து அறிகின்றனர். வாய்ப்புகளை பரிசீலித்தப்பின் முதலீடு செய்கின்றனர்.
3. கவனம், ஒழுக்கம் தேவை
நீங்கள் லட்சாதிபதியாக வேண்டும் எனில், அதற்கான ஒழுக்கம் தேவை. ஒரு இலக்கை நிர்ணயிக்கும் போது அதை பின் தொடர்ந்து செல்வதற்கான முனைப்பு தேவை. அதாவது முக்கியம் இல்லாத செயல்களில் உங்கள் கவனம் சிதறக்கூடாது. குறிப்பிட்ட காலத்திற்குள், லட்சாதிபதியாக மாதம் ஒரு தொகையை சேமிக்க நினைத்தால் அதை செய்தாக வேண்டும். நீங்கள் செலவுகளை குறைக்க வேண்டும் அல்லது வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது கஷ்டமானது என்றாலும் லட்சாதிபதிகள் இதிலிருந்து தவறுவதில்லை.
4. நம்பிக்கை
லட்சாதிபதியிடம் பேசும் போது, குறிப்பாக சுயமாக உருவான லட்சாதிபதிகளிடம் பேசும் போது, அவர்களிடம் நம்பிக்கை மிளிர்வதை பார்க்கலாம். தவறுகள் நிகழும் போது அதன் சாதகமான பக்கத்தை பார்த்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச்செல்ல வேண்டும் என்பதை பெரும்பாலான லட்சாதிபதிகள் அறிந்ந்திருக்கின்றனர். மேலும் லட்சாதிபதிகளுக்கு வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதும் தெரிந்துள்ளது. பெரும்பாலான வெற்றிகரமான லட்சாதிபதிகள் வளத்தை உருவாக்குவது மட்டும் வாழ்க்கை அல்ல என உணர்ந்துள்ளனர். சில நேரங்களில் நீங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு இளைப்பாற வேண்டும். ஆனால், நம்பிக்கைக் கீற்றை கண்டறிந்து தொடர்ந்து முயற்சிப்பது தான் லட்சாதிபதிகளின் குணம்.
5. உழைப்பதற்கு அஞ்சேல்
சில நேரங்களில் கை வலிக்க வேலை செய்தாக வேண்டும். வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், இரவு அதிக நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டியிருக்கலாம். லட்சாதிபாதிகள் இதற்குத் தயாராக உள்ளனர். பிடிக்காத வேலை செய்ய வேண்டியிருந்தால் கூட அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளனர். மேலும், தனது நிதிப்பாதைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மற்றவர்கள் மீது பழி போடாமல், தங்களுக்கான வழியை கண்டறிவதிலும் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
செல்வம் சேர்ப்பது எளிதா?
பொருள் ஈட்டுங்கள், சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்யுங்கள், சேமியுங்கள், முதலீடு செய்யுங்கள். இவற்றை தொடர்ந்து செய்யுங்கள். இதுவே லட்சாதிபதிகளின் மனநிலை. இதன் பிறகு எல்லாம் தானாக நடக்கும். இதற்கு ஆண்டு கணக்கில் ஆனாலும் எளிதானது.
இதை விவரிப்பது எளிதானது தான். ஆனால் நடைமுறையில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் ஓரிரவில் பணக்காரராக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு கொஞ்சம் மெனெக்கெட வேண்டும் அல்லவா? ஆக, இன்றே துவங்குங்கள்.
தமிழில்: சைபர்சிம்மன்
(தனிநபர் நிதி வழிகாட்டி வலைப்பதிவான ’Cashmylife’ , ரயான் குய்னா எழுதிய, ’லட்சாதிபதி மனநிலை- மில்லினர்களின் ஐந்து ரகசியங்கள்’ எனும் பதிவை அடிப்படையாக கொண்டது).