ரிப்பேர் ஆன சைக்கிளை ரெக்கைக் கட்டி பறக்க வைக்கும் சென்னை இளைஞர்!
வீட்டுல ரொம்ப நாளா உங்க சைக்கிள் துரு பிடிச்சு கிடக்கா? ப்ரேக் வேலை செய்யாம ஓட்டமுடியலயா? இதோ இவரின் ஆன்லைன் தளத்தில் பதிவிட்டு உடனே சரி செஞ்சு ஜோரா ஓட்டுங்க உங்க சைக்கிள...
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் சாலைகளில் நாம் செல்லும் பொழுது, சைக்கிள் இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. அந்த எண்ணத்திற்கு ஏற்ப நாம் ஒரு சைக்கிளை வாங்கினாலும், நமது நேர வசதிக்கு ஏற்ப அதில் எழும் சிக்கல்களை சரிசெய்வது, வேறு இடத்திற்கு கொண்டு செல்வது ஆகியவை இயலாத காரியமாக இருக்கும்.
இது தான் சென்னையில் ஸ்ரீசரன் ஸ்ரீதரும் சந்தித்த சவால். தனது குழந்தையின் மிதிவண்டி பழுதாகும் பொழுது அதனை சரி செய்வது அவருக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது. ஒவ்வொரு முறையும் சைக்கிளை சரி செய்யும் கடைக்கு தூக்கிச்செல்வதும், அவர்கள் அதனை சரி செய்வதில்லை, சரி செய்ய இயலாது, இங்கு வாங்கி இருந்தால் தான் சரி செய்வோம் போன்ற பதில்களை கூறுவதும் வாடிக்கையாகி இருந்தது.
இதன் மூலம் ஸ்ரீசரன் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ஒரு சைக்கிள் சரிபார்ப்பு நிலையம் துவங்கலாம் என்று நினைத்தார். ஆனால் ஒரு ஆப் ஆகவோ அல்லது வலைத்தளம் மூலமோ மிதிவண்டி சரி செய்யலாம் என்று அவரின் குடும்பத்தினர் யோசனை கூறினர்.
சென்னை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் மூன்று மாதங்கள் எவ்வாறு சைக்கிள்கள் சரி பார்ப்பு நிகழ்கிறது என கள ஆய்வு நடத்தினார் ஸ்ரீசரண். அதன் மூலம் நம்பிக்கையான முடிவுகள் கிடைக்க, உடனடியாக பிப்ரவரி 2017ல் ’ஃபிக்ஸ் மை சைக்கிள்’ ‘Fix My Cycle' நிறுவனத்தைத் துவக்கினார். இது நமது வீட்டிற்கே வந்து சைக்கிளை சரி செய்ய நேரம் ஒதுக்கும் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் ஆகும்.
"ஒருவர் எங்கள் சேவையை பெற எங்கள் வலைத்தளத்திற்கு வந்து ஒரு நேரம் பெற வேண்டியது மட்டுமே. சைக்கிளை பற்றிய விவரங்களை பதிவிட்ட உடன், அவர்கள் வீட்டிற்கேச் சென்று நாங்கள் அதனை சரி செய்துவிட்டு வருவோம்," என்கிறார் ஸ்ரீசரண்.
முழுவதும் வலைத்தளம் மூலம் இயங்கும் இந்த நிறுவனம், சைக்கிளை பிரித்து சேர்ப்பதிலும் துணை புரிகின்றனர்.
எவ்வாறு செயல்படுகிறது :
தற்பொழுது சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் 20 முதல் தர மற்றும் இரண்டாம் தர நகரங்களில் இயங்குகிறது.
"அனைத்து பெரிய நகரங்களிலும், எங்களிடம் சரி செய்யும் பணியாளர்களும், விற்பனையாளர்களும் உள்ளனர். சில நேரங்களில் சேவையை நாங்களே கொடுப்போம், சில நேரங்களில் வேண்டிய ஆட்களை ஒருங்கிணைப்பதும் நடக்கும். ஆனால் இரண்டாம் கட்ட நகரங்களில் முழுவதும் நாங்கள் மிதிவண்டி விற்பனையாளர் மூலமே இயங்குகிறோம்," என்கிறார் ஸ்ரீசரண்.
இந்த வலைத்தளம் மூலம் இயங்குவது மிகவும் எளிது என்று விளக்குகிறார் ஸ்ரீசரண். நகரம், இருக்கும் இடத்தின் பின்கோட் ஆகியவற்றுடன் பெயர், அலைபேசி எண், வண்டியின் மாதிரி மற்றும் மற்ற விவரங்கள் பதிவிட்டவுடன், சைக்கிளை சரி செய்பவர்கள் அவர்கள் இடத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
இப்பொழுது இந்நிறுவனம் ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரீமியம் என்ற இரண்டு வகைகளில் வாடிக்கையாளருக்கு சேவைகள் வழங்கி வருகிறது. இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை ஸ்ரீசரண் விளக்குகிறார்.
"தினமும் அல்லது வாரத்தில் சில முறை என சைக்கிளைப் பயன்படுத்துவோருக்கு ’ஸ்டாண்டர்ட்’ வகை பொருந்தும். இதில் வண்டியின் பிரேக், டயர் ஆகியவற்றை சரி பார்த்தல், சைக்கிளைத் துடைத்து, சுத்தம் செய்தல், துரு இருந்தால் நீக்குதல் ஆகியவை அடங்கும். பிரீமியம் என்றால் வண்டியை முழுவதுமாக பிரித்து, அனைத்து பாகங்களுக்கும் கிரீஸ் தடவி, சரி பார்த்து மீண்டும் இணைத்துத் தருவதாகும்."
இந்த சேவைகளுக்கான கட்டணம் ரூபாய் 699ல் துவங்கி, ரூ.1299 வரை இருக்கும். இது மட்டும் அல்லாது மிதிவண்டியை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல விரும்பும் வாடிக்கையாளருக்கு, அதனை பிரித்து பின்னர் இணைக்கும் சேவையை செய்கின்றனர். ஆன்லைனில் வாங்கி இருந்தாலும், அதனை இவர்கள் இணைத்துத் தருகின்றனர்.
இந்த சேவைக்கு ரூபாய் 899 முதல் 999 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்பொழுது இந்த நிறுவனத்தில் 12 ஊழியர்கள் உள்ளனர். இதில் 6 நகரங்களில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களும் அடக்கம். இவர்கள் பணிக்காக செல்லும் பொழுது, அடிப்படைத் தேவைகளான டியூப்கள், டயர், பிரேக் கட்டைகள் மற்றும் பல பொருட்களை கொண்டு செல்கின்றனர்.
" சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் மிதிவண்டியை பல வருடங்களாக தொடாமல் வைத்திருப்பார்கள். அதனால் அதில் துரு ஏறி இருக்கும். ஆனால் அவர்கள் வீட்டில் வைத்தே வேலையை முடிப்பது ஆகாத காரியம். அந்த நிலையில் அதனை சரி பார்க்க எடுத்துச்செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கூறுவோம். அவர்கள் சரி என்று கூறினால், அதனை எடுத்து வருவோம். எங்கள் நிலையத்தில் வைத்து அதனை சரி செய்து பின்னர் அவர்களிடத்தில் தருவோம்.”
எதிர்கொள்ளும் சவால்கள் :
துவக்கத்தில் அதிகமான சவால்கள் இருந்துள்ளது. அதில் முக்கியமானது நகரத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று பணிபுரிய விரும்பும் சைக்கிள் சரிபார்க்கும் ஆட்கள் கிடைப்பது.
முதலில் கிடைத்த நபர் நிதி அயோக்கில் பயிற்சி பெற்றவர். அவர் தான் நிறுவனத்தில் வண்டிகளை சரிபார்க்கும் பணியினை மேற்கொண்டுள்ளார். ஆனால் அடுத்து அடுத்து வந்தவர்கள் அவ்வாறு இல்லை.
"முதலில் வந்தவர் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே முதலில் பணியில் அமர்த்திய நபரை அனுப்பி மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவ்வாறுதான் எங்கள் பயிற்சிகள் துவங்கியது.”
சென்னையில் இருந்த தொழில்நுட்பப் பணியாளர் மற்ற நகரங்களுக்குச் சென்று அங்குள்ள நபரோடு ஒரு வாரம் தங்கி இருந்து, அடிப்படைகளை கற்றுத் தந்துள்ளார். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயிற்சி நடக்கின்றது.
வாகன உற்பத்தியை பின்னணியாக கொண்ட ஸ்ரீசரண், நிறுவனத்திற்குத் தேவையான வலைத்தளத்தை வடிவமைக்க ஒருவரை பணியில் அமர்த்தியுள்ளார். மேலும் பல்வேறு இடங்கள் உள்ள மக்களை விளம்பரங்கள் மூலம் எவ்வாறு ஈர்ப்பது என்பதையும் கற்றார்.
சந்தை :
2016-17 முதல் 2021-22 வரையில் உள்ள காலத்தில் இந்திய சைக்கிள் சந்தையானது 8% மேலாக சிஏஜிஆரை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிதிவண்டிகளை விற்பனை செய்யும் Choose my cycle, Cyclewale போன்ற நிறுவனங்கள் இருந்தாலும், தன்னுடைய நிறுவனம் மிதிவண்டிகளை சரி பார்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறுகிறார்.
சொந்த முதலீடு கொண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக லாபம் பார்க்கத் துவங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் முதல் தர நகரங்கள் 50ல் தங்கள் சந்தையை விரிவுப்படுத்தும் முனைப்பில் உள்ளனர் ஃபிக்ஸ் மை சைக்கிள்.
வலைதள முகவரி: Fix My Cycle
தமிழில் : கெளதம் தவமணி