ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளி 10வது இடத்தில் முகேஷ் அம்பானி: உலக பில்லியனர்கள் யார்? யார்?
இந்த பட்டியலில் இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் செல்வந்தர் முகேஷ் அம்பானி உலக பில்லியனர்களின் பட்டியலில் 10வது இடம் பிடித்து உள்ளார்.
35வது ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.
அமேசான் பங்குகளை உயர்த்தியதன் விளைவாக பெசோஸ் நிகர மதிப்பு 177 பில்லியன் டாலர், இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 64 பில்லியன் டாலர் அதிகம் என ஃபோர்ப்ஸ் கூறி இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் உள்ளார். மஸ்க்கின் சொத்து மதிப்பு 151 பில்லியன் டாலராக உயர்ந்ததால் இந்த இடத்தை எட்டியுள்ளார். இது ஒரு வருடத்திற்கு முன்பு 126.4 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் டெஸ்லா பங்குகளில் 705 சதவீதம் உயர்வுதான் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த பட்டியலில் இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் செல்வந்தர் முகேஷ் அம்பானி உலக பில்லியனர்களின் பட்டியலில் 10வது இடம் பிடித்து உள்ளார்.
84.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடன் ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற உச்சத்திற்கு உயர்ந்துள்ளார் முகேஷ். ஒருவருடம் முன்பு, சீனாவின் அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஆசிய பணக்காரராக இருந்த நிலையில் அவரை வீழ்த்தி தற்போது அம்பானி அந்த இடத்திற்கு வந்துள்ளார். ஜாக் மா தற்போது 26வது இடத்திற்கு சரிந்துள்ளார். கடந்த ஆண்டு இவர் 17வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, உலகளாவிய பில்லியனர்களின் பட்டியலில் 50.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 24வது இடத்தில் உள்ளார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான பூனாவாலா குழுமத்தின் தலைவரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் பூனாவாலா, ஃபோர்ப்ஸ் உலகின் பில்லியனர்களின் பட்டியலில் 169 வது இடத்தில் உள்ளார். இவரின் நிகர மதிப்பு 12.7 பில்லியன் டாலர். இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் பூனாவாலா ஏழாவது இடத்தில் உள்ளார்.
எச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் சிவ் நாடார், இந்தியாவின் மூன்றாவது பணக்காரராகவும், உலகளவில் 71வது இடத்திலும் உள்ளார் மற்றும் அவரின் நிகர மதிப்பு 23.5 பில்லியன் டாலர்.
உலகின் மற்ற நாடுகளையும் விட அமெரிக்காவில் அதிக பில்லியனர்கள் உள்ளனர். அங்கு 724 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு இது 614 ஆக இருந்தது. இதற்கடுத்த இடத்தில் சீனா 698 பில்லியனர்களுடன் உள்ளது. இது கடந்த ஆண்டு 456 ஆக இருந்தது.
சீனாவில் கிடைத்த லாபத்தின் விளைவாக, பெய்ஜிங் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ளது, இது நியூயார்க் நகரத்தை முந்தியுள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உள்ளது. 140 பில்லியனர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி 136, ரஷ்யா 117 உடன் உள்ளனர். ஃபோர்ப்ஸ், ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 1,149 பில்லியனர்கள் 4.7 டிரில்லியன் டாலர் மதிப்புடையவர்கள் என்றும், அமெரிக்க பில்லியனர்கள் மொத்தம் 4.4 டிரில்லியன் டாலர் மதிப்புடையவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய பட்டியலில், 106 பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள்.
அதிலும், ஜெர்மனியைச் சேர்ந்த 18 வயதான கெவின் டேவிட் லெஹ்மன் என்பவர் இளம் வயது பில்லியனர் ஆக இருக்கிறார். அவரது தந்தை குந்தர் லெஹ்மன் மருந்துக் கடை சங்கிலி நிறுவனமான டி.எம்-ட்ரோஜெரி எம்.கே.டியில் உள்ள பங்குகளை கெவினுக்கு மாற்றியதால் இந்த நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார். அவரது மதிப்பு 3.3 பில்லியன் டாலர்கள் மற்றும் பட்டியலில் 925 வது இடத்தில் உள்ளார்.
அதே நேரத்தில் மிக அதிக வயது கொண்ட கோடீஸ்வரராக அமெரிக்க காப்பீட்டு நிறுவன அதிபர் ஜார்ஜ் ஜோசப் இடம்பெற்றுள்ளார். இவரின் வயது 99. உலகின் செல்வந்தர்களின் ஃபோர்ப்ஸின் 35வது ஆண்டு பட்டியலில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்னர் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
இந்த வருடம் பில்லியனர்களின் எண்ணிக்கை 2,755. இந்த வருடம் மட்டும் இந்த பட்டியலில் அதிகபட்சமாக 493 பில்லியனர்கள் புதிதாக வந்துள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மொத்தம் 13.1 டிரில்லியன் டாலர் மதிப்புடையது.
இதற்கிடையே, 150 பில்லியன் டாலர் நிகர மதிப்புள்ள உலகின் மூன்றாவது பணக்காரர் லூயிஸ் விட்டன் மற்றும் செபோரா உள்ளனர். அதைத் தொடர்ந்து பில் கேட்ஸ் (124 பில்லியன் டாலர்), ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (97 பில்லியன் டாலர்) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
இந்தியாவின் முதல் 10 பில்லியனர்களில் டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோட்டக், ஆர்சலர் மிட்டல் லட்சுமி மிட்டல், ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திலீப் ஷாங்க்வி மற்றும் ஃபவுண்டர் எண்டர்பிரைஸ் ஆகியோர் அடங்குவர்.
தமிழில் தொகுப்பு: மலையரசு