விமான விபத்தில் உயிர்பிழைத்து 4 நிறுவனங்களை உருவாக்கிய முன்னாள் போர் விமானி!
பிரதாப் பி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே 17 வயதில் பைலட் உரிமம் பெற்றுவிட்டார். ஆனால் இனி இவரால் ஜெட் விமானம் இயக்க இயலாது. இவரது விமானம் விபத்துக்குள்ளாகி உயிர்பிழைத்தார். ஆனால் இவரால் தொடர்ந்து விமானம் ஓட்ட இயலாத நிலை ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டு இவர் விண்ணில் பறப்பதில் இருந்து விலகினாலும் விண்ணைத் தொடவேண்டும் என்கிற கனவு மட்டும் தொடர்ந்து இருந்து வந்தது.
தற்போது PotholeRaja என்கிற சமூக நிறுவனம் உட்பட நான்கு நிறுவனங்களின் நிறுவனரான உள்ளார். தங்களது பகுதியின் சாலைகளில் இருக்கும் பள்ளங்களை சீரமைக்க விரும்புபவர்களுக்கு எளிதான தீர்வை வழங்குகிறது PotholeRaja நிறுவனம்.
”வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் முக்கிய தீர்மானம் எடுக்கும் நேரம் வரும்போது என்னால் இதைச் செய்ய இயலுமா, சாதிக்கமுடியுமா என்கிற கேள்விகளை எழுப்பிக்கொள்வேன்,” என்று தடைகளைத் தகர்த்தெறிந்து சாதிப்பதற்கான ஊக்கமளித்துக்கொண்டது குறித்து தெரிவித்தார்.
பிரதாப் கல்லூரியில் முதலாமாண்டு படித்தபோது டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகா சார்பில் பங்கேற்றார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடமிருந்து சிறந்த பயிற்சி மாணவர் விருதினைப் பெற்றார்.
”அவர் என்னிடம் ‘நீ இன்னும் அதிகம் சாதிக்கவேண்டும்’ என்று கூறினார்,” என்றார் பிரதாப்.
இதுவே அவர் யூகே செல்ல வழிவகுத்தது. அங்குதான் அவர் பைலட் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நீண்டகால நோக்கம் இருந்தது. அவர் தனக்குத் தானே வகுத்துக்கொண்ட மைல்கற்களை எட்ட அது உதவியாக இருந்தது.
“என்னால் 15-20 ஆண்டுகள் கடந்து காட்சிப்படுத்திப் பார்க்கமுடியும். அதுவே என் வாழ்வில் நான் சந்திக்க நேரும் அன்றாட தடைகளை எளிதாக எதிர்கொள்ள உதவுகிறது. வேகத்தடையை கடக்கவேண்டும் என்பதே என்னுடைய முதல் நோக்கமாக இருந்தது. இதை போர் ஜெட் விமானத்தில் செய்தேன்,” என்றார்.
ஏர் சீஃப் மார்ஷல் ஆகவேண்டும் என்பது பிரதாப்பின் அடுத்த இலக்காக இருந்தது. ஆனால் விபத்திற்குப் பிறகு அந்தக் கனவும் தொலைந்துபோனது. கார்ப்பரேட் பணியில் இணைந்துகொண்ட பிறகு அந்தப் பிரிவில் ஏர் சீஃப் மார்ஷலுக்கு இணையான இடத்தை ஆராய்ந்தார். “CXO பதவியை இலக்காகக் கொண்டுத் தேவையான முக்கிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சித்தேன்,” என்றார். பிரதாப் முன்பு HP நிறுவனத்தில் க்ளோபல் விபி-யாக இருந்தார். அந்தப் பதவி வகித்த இளம் நபர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியை எட்டுவதற்கு இந்த ஆறு அம்சங்கள் முக்கியம் என்கிறார் பிரதாப்:
- ஒரு நபர் யாராக இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள மக்களைத் தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கவேண்டும்.
- எண்களில் தனிச்சிறப்புடையவர்களாக இருக்கவேண்டும்.
- நிதி தொடர்பான செயல்பாடுகளை எளிதாக கையாளத் தெரிந்திருக்கவேண்டும்.
- புதிய சிந்தனைகளைக் கொண்டு விற்பனையை ஊக்குவிக்கவேண்டும்
- உலகளவிலான சிந்தனை அவசியம். ஆனால் உள்ளூரில் இணைந்திருக்கவேண்டும்
- அவர்களுக்குரிய பொருத்தமான சூழலை அமைத்துக்கொள்ளவேண்டும்.
பிரதாப் கடந்த எட்டு ஆண்டுகளாக தொழில்முனைவோராக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தனது திறன் குறித்து கேள்வியெழுப்பி தனக்கான எல்லையையும் சோதித்து வருகிறார்.
ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா