‘5-இல் 4 இந்தியர்கள் தங்கள் ப்ரொஃபஷனை மாற்றிக் கொள்ள விரும்புகின்றனர்’ - ஏன்? ஆய்வு முடிவுகள்!
இந்தியாவில் தொழில்ரீதியான பணியில் இருப்பவர்கள் (புரொஃபஷனை) பணி மாற்றம் குறித்து சிந்திப்பதும், தான் மேற்கொண்டு வரும் பணியை விட முற்றிலும் மாறுபட்ட பணிகளைத் தேர்வு செய்வதோ புதிதல்ல. ஆனால், இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 5-ல் 4 பேர் பணி மாற்றத்திற்கு பரிசீலனை செய்வதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட அன்னிய நேரடி முதலீடு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனும் ஜிடிபி முதல் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டு எனும் ஜிவிஏ வரை பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், இதில் குறிப்பிடத்தக்க ஒன்று, இந்திய மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பதே.
பணி மாற்றும் இந்தியர்கள்
1990-களின் பிற்பகுதியில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் உண்டான புதிய வேலை வாய்ப்புகள் மூலம் ஏற்கெனவே இந்தியாவில் அரசுப் பணிகளில் இருந்தவர்கள், மருத்துவப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் என்று பலதரப்பட்ட பணிகளில் இருந்தவர்கள் ஏதாவது ஒரு தகவல் தொழில்நுட்ப, கணினி மேற்படிப்புகளை, சான்றிதழ் படிப்புகளை படித்து ஐடி துறையில் நுழைந்து பெரிய அளவில் செல்வம் குவித்ததற்கும் உதாரணங்கள் உண்டு.
இங்கு அரசு வேலையில் இருந்து ராஜினாமா செய்து ஐடி துறையில் அமெரிக்கா சென்றவர்களும் உண்டு. ஆகவே, தொழில்முறை பணி மாற்றம் என்பது அப்போது வளர்ச்சி அடைந்து வரும் புதிய துறைகள் மூலம் தூண்டப்பட்டது.
ஆனால், 2022-ம் ஆண்டு இந்திய தொழில்ரீதியான பணியில் இருப்பவர்கள் பணி மாற்றம் குறித்துப் பரிசீலிப்பதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
தொழில்ரீதியான பணியில் இருப்பவர்கள் சரியான ஊதியம், பணிக்கும் ஓய்வு நேரத்துக்குமிடையேயான ஒரு சமச்சீர் நிலை, பணியின் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை இப்போது கருத்தில் கொண்டு பணியை மாற்ற முடிவெடுக்கின்றனர்.
புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 5-ல் 4 பேர் பணி மாற்றத்திற்கு பரிசீலனை செய்து, அதை சாதித்தும் விடுவதாக லிங்க்டு இன் பொருளாதார வரைபடத் தரவின் ஆய்வு கூறுகிறது. அதாவது, டிசம்பர் 2021-ன் கணக்கீட்டின் நிலையை விட 2022 டிசம்பரின்படி இந்தியாவில் வேலை வாய்ப்புகள் 23% குறைந்துள்ளன. அதாவது, நிறுவனங்களுக்கு ஆட்கள் எடுப்பு குறைந்துள்ளது.
அந்த ஆய்வு கூறுவது என்னவெனில்,
- பொருளாதார நிச்சயமின்மை காரணமாக 2023-ம் ஆண்டில் இந்தியர்களில் 80% மக்கள் தாங்கள் பார்த்து வரும் பணியிலிருந்து மாறி வேறொரு பணிக்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
- 18 வயதுக்கு அதிகமான சுமார் 2007 பணியாளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 18-24 வயதுடைய பணியாளர்களில் 88% பேர் பணி மாற்றத்தை விரும்புகின்றனர்.
- மாறாக 45-54 வயதுக்கிடைப்பட்டோர் 64% பேர் பணி மாற்றத்தை விரும்புகின்றனர்.
பணிச்சந்தை சூழ்நிலை சரியில்லாவிட்டாலும் பொருளாதார நிலைமைகள், நிச்சயமின்மைகள் இருந்து வரும் நிலையிலும் இந்திய தொழிலாளர்கள் தங்கள் திறமைகளை நம்பி வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதையே இது காட்டுகிறது.
கொரோனா வைரஸ் தலைவிரித்தாடியபோதும், அதன் பிறகும் இந்திய மக்கள் மனதில் ஓர் உறுதிப்பாடும் தன்னம்பிக்கையும் பிறந்துள்ளன. கொரோனா காலத்தில் வேலையிழந்தோர் பலர் தங்கள் சொந்த முயற்சியில் தங்களுக்கான புதிய பணியையும் தொழிலையும் தேர்வு செய்துள்ளதை நாம் பார்க்கிறோம்.
பணிச்சோர்வு உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு பணி நேரம் ஓய்வு நேரம் ஆகியவற்றுக்கு இடையிலான சமச்சீரான தன்மையை இப்போது எதிர்பார்க்கின்றனர். அதாவது, உடல் நலம், ஆரோக்கியம், உணவு உள்ளிட்ட தினசரி தேவைப்பாடுகளுடன் பணியும் ஓர் அவசியம் என்ற முடிவுக்கு வந்து பணிசெய்வதே வாழ்க்கை என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு பணி நேரத்தில் பணி ஓய்வு நேரத்தில் ஓய்வு, பொழுது போக்கு நேரத்தில் பொழுது போக்கு என்று நேரத்தையும் உடலையும், பணியையும் மேலாண்மை செய்யும் ஒரு மனநிலைக்கு வந்துள்ளனர்.
இதற்கான திறமைகளையும் இவர்கள் வளர்த்துக் கொண்டு வருகின்றனர். புதிதான புலங்களில் பயிற்சி பெறுகின்றனர். எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.
ஆனால், அதற்காக சொந்த நலன்களை விட்டுக் கொடுப்பதாக இல்லை என்ற மனநிலையும் இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்தியாகும்.
மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப நமக்கான திறமைகளைப் பெருக்கிக்கொண்டு சம்பளம், பணியிட சவுகரியம், குடும்பம் உள்ளிட்ட சொந்த நலன்கள் ஆகியவற்றில் எதுவும் பாதிக்கப்படாமல் ஒரு வாழ்க்கையைத் தேர்வு செய்வதை, ஒரு பணியைத் தேர்வு செய்வதை, ஒரு தொழிலைத் தேர்வு செய்வதை புதிய மாற்றம் என்றே கூற வேண்டும்.
ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான 12 அறிகுறிகள்!
Edited by Induja Raghunathan