டெல்லியில் ஏழை மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் தாய்-மகன்!
முகக்கவசம் வாங்க முடியாத நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு சௌரவ் தாஸும் அவரது அம்மாவும் முகக்கவசம் தைத்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முறையான சுகாதாரத்தையும் சமூக இடைவெளியையும் பின்பற்றுவது அவசியமாகிறது. இது அனைவருக்கும் சாத்தியமா என்பது கேள்விக்குறியே. ஏழ்மை நிலையில் இருப்பவர்களால் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது கடினம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நகரில் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சௌரவும் அவரது அம்மாவும் முகக்கவசங்களைத் தைத்து இலவசமாகக் கொடுத்து வருகின்றனர்.
24 வயதானவர் ஒளிப்பதிவாளரான சௌரவ் தாஸ். இவர் தனது அம்மா லட்சுமியுடன் இணைந்து இரண்டு மாதங்களில் 2,200 முகக்கவசங்களை வழங்கியுள்ளார். 'பிக் ஒன், ஸ்டே சேஃப்’ என்கிற முயற்சி மூலம் முகக்கவசங்களை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது சௌரவ் தனக்கும் தன் அம்மாவிற்கும் இரண்டு என்–95 முகக்கவங்கள் வாங்கியுள்ளார். ஒவ்வொன்றும் 300 ரூபாய் என்கிற விலையில் வாங்கினார். இந்த முகக்கவசங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவே வாங்கப்பட்டது. இருப்பினும் சௌரவின் அம்மாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“அந்த முகக்கவசத்தைத் துவைத்து மீண்டும் பயன்படுத்தமுடியாது. ஆனால் அதன் விலை 300 ரூபாயாக இருக்கிறது,” என்று என்டிடிவி-இடம் தெரிவித்தார் 56 வயதான லட்சுமி தாஸ்.
“என்னுடைய மாமா விவசாயி. அவர் பணிபுரியும் சுற்றுப்புறங்களில் தூசு அதிகம் பரவும். என் அம்மா என் மாமாவிற்கும் அவரிடம் பணிபுரிபவர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் முகக்கவசங்கள் தைத்துக் கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக எங்களால் பயணம் செய்து அவர்களுக்கு முகக்கவசம் கொடுக்கமுடியவில்லை. எனவே அவர் முகக்கவசம் தைத்து அவற்றை வாங்க முடியாத நிலையில் உள்ள ஏழை மக்களுக்குக் கொடுக்கத் தீர்மானித்தார்,” என்று சௌரவ் தெரிவித்தார்.
சௌரவ் இந்த முயற்சி மூலம் தொடர்பற்ற முறையில் முகக்கவசங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்தார்.
அவரது அம்மா லட்சுமி தினமும் 25-40 முகக்கவசங்கள் தைக்கிறார். இதற்குத் தேவையான பொருட்களை சௌரவின் மாமா வழங்குகிறார். வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த முகக்கவசங்கள் மறுபயன்பாட்டிற்கு உகந்தவை. இந்த முகக்கவசங்கள் டெல்லியின் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வெண்டிங் இயந்திரத்தில் வைக்கப்படுகின்றன.
மொத்தம் ஐந்து வெண்டிங் பாக்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு பாக்ஸ் சந்தைப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தீப்பிடிப்பு சம்பவத்தால் பல்வேறு வீடுகள் சேதமடைந்த தென் கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ளவர்களுக்காக ஒரு பாக்ஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கேந்திரிய பந்தர் அருகே சித்தரஞ்சன் பார்க் மார்க்கெட் நம்பர்.1 பகுதியில் ஒரு டிஸ்பென்சர் நிறுவியுள்ளார் சௌரவ். இந்த பாக்ஸ் வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு கயிறை இழுத்தால் போதும், முகக்கவசத்தை பெற்றுக்கொள்ளலாம்.
சித்ரஞ்சன் பார்க் பகுதியில் நவீன் சந்திரஷீல் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் ஒரு டிஸ்பென்சர் வைக்கப்பட்டுள்ளது. இவர் லாஜிக்கல் இந்தியன்–இடம் கூறும்போது,
“முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் முகக்கவசம் அணிய மறந்த வாடிக்கையாளர்களை இந்த பாக்ஸில் இருந்து எடுத்துக்கொள்ளச் சொல்கிறேன்,” என்று தெரிவித்தார்.
கட்டுரை: THINK CHANGE INDIA