எல்கேஜி டூ 10ம் வகுப்புக் குழந்தைகளுக்கு இலவச கூடுதல் கல்விப் பயிற்சி மையம்!
இடைநிறுத்தம் செய்யாமல் பள்ளிப்படிப்பை தொடர பள்ளி நேரம் முடிந்த பிறகு இலவசப் பயிற்சி அளிக்கும் மையங்களை தமிழ்நாடு முழுதும் தொடங்கியுள்ளனர் அப்பா-மகள்.
ஏழ்மை நிலை, போதிய பள்ளிகள் இல்லாமை, பள்ளிகளை எளிதில் அணுகமுடியாத சூழல் போன்றவையே இந்தியாவில் குழந்தைகள் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்வதற்கான மூன்று முக்கியக் காரணங்கள். இந்தியா முழுவதும் 62.1 மில்லியன் குழந்தைகள் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்வதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) ஆய்வு தெரிவிக்கிறது. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த எண்ணிக்கை 84 மில்லியனாக இருந்தது.
கிருத்திகாவும் அவரது அப்பா கணேஷ் ராவும் இணைந்து 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ’நுக்கட் பாத்ஷாலா’ 'Nukkad Pathshala' அறிமுகப்படுத்தினர். இந்த லாபநோக்கமற்ற கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு முயற்சியானது கிராமங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்வதைத் தடுக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தில் பள்ளிநேரத்திற்கு பிறகு தரமான கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.
நுக்கட் பாத்ஷாலா இணை நிறுவனரான கிருத்திகா கூறும்போது,
”இந்தியாவில் ஆரம்பப் பள்ளியில் இணையும் ஒவ்வொரு 100 மாணவர்களில் 25 பேர் மட்டுமே கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கின்றனர்,” என்றார்.
கடந்த ஐந்தாண்டுகளில் இவரது முயற்சி சேலம், கோயமுத்தூர், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி என தமிழகம் முழுவதும் 38 மையங்களாக விரிவடைந்துள்ளது. தற்போது ஒன்பது பேர் அடங்கிய குழு 1,500 மாணவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
நுக்கட் பாத்ஷாலா முயற்சி
22 வயதான கிருத்திகா, ஹெச்ஆர் வணிகம் மற்றும் பொருளியல் கல்லூரியில் கணக்கியல் மற்றும் நிதிப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தனது அப்பாவுடன் மும்பை சாலையில் நடந்துகொண்டிருந்த போதுதான் ’நுக்கட் பாடஷாலா’ தொடங்கும் எண்ணம் தோன்றியது.
கிருத்திகாவும் அவரது அப்பாவும் ஒரு சிறிய வீட்டில் இருந்து மாணவர்கள் ஓடுவதைப் பார்த்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அது ஒரு பயிற்சி மையம் என்பதும் அந்தக் குழந்தைகள் அருகிலுள்ள குடிசைப்பகுதியில் இருந்து படிப்பதற்காக வந்து செல்வதும் தெரிந்தது.
கிருத்திகாவிற்கும் அவரது அப்பாவிற்கும் கல்வி கற்கும் இடம் என்பது நல்ல கட்டமைப்பு வசதியுடன்கூடியது என்கிற பிம்பமே மனதில் இருந்தது. ஆனால் இந்த சம்பவம் அதை முற்றிலும் மாற்றியது.
மாணவர்கள் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்வதற்கான காரணங்களை கிருத்திகா விரிவாக ஆராய்ந்தார். நிதிச்சூழல், சமூக மற்றும் கலாச்சாரத் தடை, பாலின ஏற்றத்தாழ்வு, கல்வி அமைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போவது போன்ற எண்ணற்ற காரணங்கள் இருப்பதை உணர்ந்தார்.
”என் அப்பா ’நியூ ஆப்பர்சுனிட்டி’ என்கிற மைக்ரோ நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொலைதூரக் கிராமங்களைச் சென்றடைந்துள்ளது. இதனால் இதில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதையும் அங்குள்ள மாணவர்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்பதையும் உணர்ந்தோம். இதை கருத்தில் கொண்டே 2014-ம் ஆண்டு கோவை நேதாஜி நகர் செண்டரில் எங்களது முதல் ‘நுக்கட் பாத்ஷாலா’ தொடங்கினோம்,” என்று நினைவுகூர்ந்தார்.
குழந்தைகள் பள்ளிப்படிப்பைத் தொடரவேண்டும் என்பதும் இடைநிறுத்தும் செய்பவர்களின் எண்ணிக்கை குறையவேண்டும் என்பதுமே நோக்கம் என்கிறார் கிருத்திகா.
இவர்களது நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்கான நிதித்தொகையைக் கொண்டே ’நுக்கட் பாத்ஷாலா’ தொடங்கப்பட்டது.
”ஒவ்வொரு மையத்திலும் நூலகம் அமைப்பது உள்ளிட்ட நோக்கம் சார்ந்து நிதி உயர்த்தும் பிரச்சாரத்தை நாங்கள் ஏற்பாடு செய்தோம். தற்போது அனைத்து மையங்களின் செலவுகளையும் நிர்வகித்து வருகிறோம். எனினும் அனைத்து வகுப்பறைகளையும் டிஜிட்டல்மயமாக்க மற்றொரு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார் கிருத்திகா.
நுக்கட் பாத்ஷாலா என்றால் என்ன?
’நுக்கட் பாத்ஷாலா’ இந்திய கிராமங்களில் கேஜி வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு இலவசமாக பயிற்சியளிக்கும் மையமாகும். குழந்தைகளுக்கு அடிப்படை கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களில் பயிற்சியளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 கிராமங்களில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
”கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்கப்படவேண்டும் என்பதும் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் இருக்கவேண்டும் என்பதும் மட்டுமே எங்கள் மையத்தை அமைப்பதற்கான நிபந்தனையாகும். சில இடங்களில் பஞ்சாயத்து சார்பில் இலவசமாக இடம் வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் வாடகை முறையில் செயல்படுகிறோம்,” என்றார் கிருத்திகா.
சராசரியாக ஒரு நுக்கட் பாத்ஷாலாவில் 30-35 மாணவர்கள் உள்ளனர். ஆனால் சில மையங்களில் 70-80 மாணவர்களும் உள்ளனர். சிறிய வகுப்புகளில் ஒரு ஆசிரியரும் அதிக மாணவர்கள் இருக்கும் வகுப்புகளில் இரண்டு ஆசிரியர்களும் பயிற்சியளிக்கின்றனர்.
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரண்டு மணி நேரம் வகுப்பெடுக்கின்றனர். மாணவர்களுக்கு பரிசோதனைகள் மற்றும் மாடல் மூலம் கணிதம் மற்றும் அறிவியல் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த நேரங்களில் பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களில் இருக்கும் சந்தேகங்களும் தீர்த்துவைக்கப்படும்.
வெள்ளிக்கிழமை புத்தக க்ளப் போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் இந்த மையம் ஏற்பாடு செய்கிறது. கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண இது உதவுகிறது. புத்தக க்ளப் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவுகிறது. அனைத்து மையங்களிலும் வெவ்வேறு வயதினருக்கான புத்தகங்களுடன் நூலகம் அமைக்கப்படுகிறது.
மாணவர்களின் வாசிப்புத் திறனும் தொடர்புகொள்ளும் திறனும் மேம்பட ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசித்துக் காட்டுகின்றனர்.
”வெள்ளிக்கிழமைகளில் எங்களது பாத்ஷாலாவில் மாணவர்கள் வட்டமாக அமர்ந்து கடந்த வாரம் படித்த புத்தகங்கள் குறித்து பேசுவார்கள். இது அவர்கள் புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள உதவுவதுடன் ஒவ்வொரு முறை ஒரு புதிய புத்தகத்தை எடுக்கும்போதும் அவர்களது கண்களில் உற்சாகம் அதிகரிப்பதைப் பார்க்கமுடிகிறது,” என்றார் கிருத்திகா.
மதிப்பு மற்றும் வழிகாட்டலில் கவனம்
பாத்ஷாலாவில் புக் க்ளப் மட்டுமல்லாது மதிப்புகளை கற்பிக்கும் திட்டமும் உள்ளது. ஊடாடும் வகையில் மதிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது நன்னெறிக் கோட்பாடுகள், மதிப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட மதிப்பு தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மையங்களிலும் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் அது குழந்தைகள் மனதில் பதியவைக்கப்படும். இதனால் குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
மதிப்பு தொடர்பாக சமீபத்தில் ‘அன்பு’ என்கிற தலைப்பு மையமாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக கிருத்திகா தெரிவித்தார். இதில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் இரக்கக் குணத்துடன்கூடிய ஒரு செயலில் ஈடுபட்டு அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் இந்தச் செயலில் விரும்பி ஈடுபட்டதால் இந்த குறிப்பிட்ட நடவடிக்கை ஒரு வார காலத்திற்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருப்பினும் இரண்டு மாதங்கள் இதில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
”எதிர்கால தலைவர்களாக திகழக்கூடிய தனிநபர்களை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதற்கு முறையான கல்விக்கு இணையாக மதிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். ஒருவர் நன்கு கற்றறிந்தவராக இருப்பினும் சிறந்த பண்பு இல்லையெனில் சமூகம் அவரை மதிக்காது. எனவே பாடபுத்தகங்களைத் தாண்டி மாணவர்களின் வளர்ச்சி இருப்பதில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.
செயல்வழிக் கற்றல் என்கிற மற்றொரு திட்டமும் இந்த பாத்ஷாலாவில் உள்ளது. இதில் மாணவர்கள் வகுப்பில் கற்றுக்கொள்ளும் கோட்பாடுகளை செயல்வழியில் கற்றுக்கொள்வார்கள். பாடங்களை, குறிப்பாக கணக்கு மற்றும் அறிவியல் கோட்பாடுகளை மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ள உதவும் வகையில் விளையாட்டுகள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
”இந்த முறையில் கற்பிப்பது மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. புரிந்துகொள்ளும் திறன், நினைவில் நிறுத்திக்கொள்ளும் திறன் ஆகியவை மேம்படுவதுடன் புதிய கருத்துக்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அதிகரிப்பதைக் கண்டோம்,” என்றார் கிருத்திகா.
அத்துடன் மாணவர்கள் சிறப்பாக ஆங்கிலம் கற்க உதவும் வகையில் பாத்ஷாலாவில் ஆன்லைன் வழிகாட்டலும் தொடங்கப்பட்டுள்ளது.
“எங்கள் அமைப்பு மிகவும் எளிமையானது. வகுப்பில் ஒரு ப்ரொஜெக்டர் பொருத்திவிடுவோம். வீடியோ கால் மூலம் பயிற்சியளிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் எங்களது ஆலோசகர்கள் புதிய கதைகளை வாசிப்பார்கள். இதில் மாணவர்களின் உச்சரிப்பிலும் இலக்கணத்திலும் கவனம் செலுத்தப்படும். இந்தத் திட்டம் சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் எங்களது மாணவர்கள் வகுப்பில் கலந்துரையாடல்கள் நடக்கும்போது பங்கேற்கத் தொடங்கியுள்ளனர். ஆங்கிலத்தில் பேசும்போது அவர்களது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது,” என்றார் கிருத்திகா.
ஆரம்பகட்ட சவால்கள்
கிராமப்புற மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சி எளிதாக இருந்துவிடவில்லை என்கிறார் கிருத்திகா. படிப்படியாக இந்தப் பிரச்சனையை சமாளித்துள்ளனர்.
”ஆன்லைன் அமர்வுகள் நடத்துவதற்காக எங்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வைப்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. மாணவர்கள் கற்பதன் பலன் அதிகரிக்க உதவும் வகையில் தற்போது இலவசமாக ஆன்லைனில் கிடைக்கக்கூடிய தகவல்களைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,” என்றார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கியபோது ஆரம்பத்தில் சில ஆசிரியர்கள் தயக்கம் காட்டியதாக ஒப்புக்கொண்டார் இணை நிறுவனரான கிருத்திகா. எனினும் தற்போது அதிக முனைப்புடன் செயல்பட்டு பாடத்தொகுப்புகளை அனைத்து மையங்களுக்கும் பகிர்ந்துகொள்கின்றனர். கற்றல் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்ற புதிய யோசனைகளை பரிந்துரை செய்தும் வருகின்றனர்.
மாணவிகள், குறிப்பாக ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவிகளை பள்ளி நேரம் முடிந்த பிறகு ஏற்பாடு செய்யப்படும் அமர்வுகளுக்கு வரவழைப்பது மற்றுமொரு சவாலாக இருந்தது. ”எங்களது பயிற்சி மையங்கள் மாலை நேரங்களில் செயல்படுகிறது.
பெரும்பாலான பெற்றோர்களிடம் தங்களது குழந்தைகள் மாலை நேரங்களில் வீடு திரும்பி வேலைகளில் உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கும். பல்வேறு அமர்வுகள் ஏற்பாடு செய்து குழந்தைகளைத் தொடர்ந்து பயிற்சியெடுக்க அனுப்புமாறு பெற்றோர்களை சம்மதிக்க வைத்தோம்,” என்றார்.
6ம் வகுப்பு மாணவரான ஹரிப்ரியனின் அம்மா செல்வி கூறுகையில், ”நான் சுமை தூக்கும் வேலை செய்கிறேன். என்னுடைய கணவர் ஓட்டுநராக உள்ளார். நாங்கள் சேலத்தில் உள்ள தொப்பபட்டி கிராமத்தில் நாள் முழுவதும் வேலை செய்கிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். நுக்கட் பாத்ஷாலா வகுப்புகளுக்கு சென்ற இவரது குழந்தைகள் பலனடைந்துள்ளனர்.
”என் குழந்தைகள் பள்ளி நேரம் முடிந்த பிறகு நுக்கட் பாத்ஷாலா வகுப்பிற்கு செல்கின்றனர். அவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் அவர்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இனி அவர்களது வருங்காலம் குறித்த கவலை எனக்கு இல்லை,” என்கிறார் செல்வி.
தாக்கத்தை ஏற்படுத்துதல்
நுக்கட் பாத்ஷாலா மாணவர்களில் 50 சதவீதத்தினர் தங்களது பள்ளிப் படிப்பில் முன்பைக் காட்டிலும் 30 சதவீதம் முன்னேறியுள்ளதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மையங்களில் 86 சதவீத மாணவர்கள் வருகை பதிவாகியுள்ளது. இங்கு எடுக்கப்படும் வகுப்புகளில் கலந்துகொண்ட பிறகு தங்களது குழந்தைகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக 89 சதவீத பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பள்ளிப் பாடங்கள் குறித்த நேர்மறையான அணுகுமுறை, மற்றவர்கள் முன்னிலையில் பதட்டமின்றி பேசும் திறன், அதிகம் கற்கவேண்டும் என்கிற ஆர்வம், பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளில் ஈடுபாடு போன்றவை காணப்படுகிறது.
”மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதுடன் முழுமையான வளர்ச்சியை சாத்தியப்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம். கற்றல் என்பது பாடபுத்தகங்களுடன் நின்றுவிடக்கூடாது. மாணவர்களின் புத்தியைக் கூர்மைப்படுத்தி ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கவேண்டும்,” என்றார் கிருத்திகா.
எதிர்காலத் திட்டம்
மாணவர்களிடையே செயல்வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் சார்ந்த கிட் உருவாக்கும் பணியில் தற்போது நுக்கட் பாத்ஷாலா ஈடுபட்டு வருகிறது. செயல்பாட்டு அடிப்படையிலான நிதி கல்வித் திட்டத்தை உருவாக்கும் பணியிலும் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பட்ஜெட்டிங் போன்ற சிக்கலான தலைப்புகளைக் கற்றுக்கொடுப்பதற்கு முன்பு பணம் குறித்த அறிமுகம், அதை எப்படி நிர்வகிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.
”குழந்தைகள் கருத்துக்களை சிறப்பாகப் புரிந்துகொள்வதற்காக அனைத்தும் விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் கற்றுக் கொடுக்கப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்,” என்றார் கிருத்திகா.
தமிழ்நாடு மட்டுமல்லாது இதர பகுதிகளுக்கும் விரிவடைய திட்டமிட்டுள்ளது. முதலில் மஹாராஷ்டிராவில் செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ”நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் சென்றடைய விரும்புகிறோம்,” என்றார் கிருத்திகா.
பயிற்சி மையங்கள் தகவல்களுக்கு: Nukkad Pathshala
ஆங்கில கட்டுரையாளர்: ஊர்வி ஜேக்கப் | தமிழில்: ஸ்ரீவித்யா