‘மெட்ராஸில் இருந்து ஒரு மெஸ்ஸி’ - ரூ.100 கோடி செலவில், 23 ஏக்கரில் பிரம்மாண்ட கால்பந்து அகாடமி உருவாக்கிய கிரீஷ் மாத்ருபூதம்!
உலகப்புகழ் பெற்ற கலைநகரமான மாமல்லபுரம், செஸ் ஒலிம்பியாட் மூலம் மேலும் பிரபலமானது. தற்போது அந்நகரத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பது போல், தொழிலதிபர் கிரீஷ் மாத்ருபூதம், 100 கோடி ரூபாய் செலவில், 23 ஏக்கரில் ‘எஃப்சி மெட்ராஸ்’ என்ற மிகப் பிரமாண்டமான கால்பந்து அகாடமி ஒன்றை அங்கு உருவாக்கியிருக்கிறார்.
FreshWorks எனும் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைப் பொறுப்பில் (CEO) இருக்கும் கிரீஷ் மாத்ருபூதம், உலக அளவில் அறியப்படும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்தவரான கிரீஷ் மாத்ருபூதம், கலிஃபோர்னியாவில் தனது நிறுவனத்தைத் தொடங்கி, அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் முதல் இந்திய மென்பொருள் சேவை ஐ.டி நிறுவனம் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
உலகின் மிக முக்கியப் பங்குச் சந்தைகளில் ஒன்றாக கருதப்படும், நியூயார்க் பங்குச் சந்தையில் (நாஸ்டாக் குறியீடு) தன் நிறுவனத்தை பட்டியலிட்டு டெக் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர்.
வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் இவர், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நல்லான்பிள்ளைபெற்றால் கிராமத்தில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான கால்பந்தாட்ட அகாடமி ‘Home of FC Madras' என்ற பெயரில் ஒன்றைத் துவக்கி இருக்கிறார்.
கிழக்கு ஆசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம்
எஃப்சி மெட்ராஸ் (FC Madras) என்ற இந்த கால்பந்தாட்ட மைதானம் அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பு (AIFF) மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றால் குறித்துரைக்கப்பட்டவாறு FIFA தரநிலைகளுக்கு இணக்கமானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஹோம் ஆஃப் எஃப்சி மெட்ராஸ் என இவ்வளாகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 2,000 குழந்தைகளில் இருந்து, 50 மாணவர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள் எஃப்சி மெட்ராஸ் அகாடமியில் கால்பந்து பயிற்சியோடு, அதற்கான உதவித்தொகையையும் பெறுவார்கள். கூடவே அவர்களுக்குத் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு தரப்படுகிறது.
“சர்வதேச அளவில் இந்திய நாட்டின் பிரதிநிதிகளாக சிறப்பாக விளையாடி தேசத்திற்கு பெருமை சேர்க்கின்ற கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதே இந்த அகாடமியின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவில் கால்பந்தாட்டத்திற்கு மிகச் சிறப்பான பயிற்சி வழங்கும் மையமாக இதனை உருவாக்கி இருக்கிறோம். அதற்காக, நாடு முழுவதிலும் இருந்து, திறனும், ஆர்வமும் மிக்க கால்பந்தாட்ட வீரர்களை தேடிக் கண்டறிந்து, அவர்களது திறமையை மேலும் மெருகூட்டும் வகையில், திறமையான இளம் கால் பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சியோடு ஸ்காலர்ஷிப்பும் (கல்வி உதவித்தொகை) வழங்கப்படுகிறது,” என்கிறார் எஃப்சி மெட்ராஸின் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான கிரிஷ் மாத்ருபூதம்.
குட்டி ஸ்மார்ட் விளையாட்டு கிராமம்
கழுகுப் பார்வையில் நோக்குகையில், அத்தனை நவீன வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு குட்டி ஸ்மார்ட் கிராமம் போன்றே காட்சி அளிக்கிறது இந்த எஃப்சி மெட்ராஸ் அகாடமி. இரவிலும் கால்பந்து வீரர்கள் தொய்வின்றி தங்களது பயிற்சியைத் தொடரும் வகையில், கால்பந்தாட்ட மைதானங்கள் முழுவதும் ஒளிவிளக்குகளால் நிரப்பப்பட்டிருக்கிறது.
“மெட்ராஸிலிருந்து அடுத்த மெஸ்ஸியை கண்டறிவதே எங்களது கனவு. மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புவதே எங்கள் இலக்கு. அதே நேரத்தில், அவர்களது கல்வியும் பாதிக்கப்படாத வகையில், ஒரே நேரத்தில் விளையாட்டோடு நாங்கள் கல்வியையும் வழங்குகிறோம்.”
நமது நாட்டில் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்கும் அளவிற்கு, அனைத்து தகுதிகளையும் கொண்ட மிகத்திறமையான இளம் விளையாட்டு வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், அவர்களது திறமைகளை வெளிக்கொணர்வதற்கு உகந்த உட்கட்டமைப்பு வசதி, சூழல் மற்றும் வாய்ப்பு அவர்களுக்கு தேவைப்படுகிறது,” என்கிறார் கிரிஷ்.
சுமார், 130 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான வசதிகளை உள்ளடக்கிய இந்த அகாடமியில், உடல்வலுவை மேம்படுத்தி உடற்தகுதியைப் பேணுவதற்கான மையம், மருத்துவ சிகிச்சை மற்றும் காயங்களிலிருந்து மீண்டு குணமடைவதற்கான சிகிச்சை மையங்கள், சர்வதேச தரத்தில் ஒரு உள்ளரங்க கால்பந்தாட்ட மைதானம், 6 லேன்கள் கொண்ட நீச்சல் குளம், நவீன சமையலறை மற்றும் உணவுக்கூடங்களுடன் கூடிய தங்கும் விடுதி, NIOS (திறந்த நிலை பள்ளி கல்விக்கான தேசிய நிறுவனம்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மாற்றுவழி கற்றல் மையம் ஆகியவை இவ்வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆகவே, கிழக்கு ஆசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம் என்ற பெருமையையும் எஃப்சி மெட்ராஸ் அகாடமி பெற்றுள்ளது.
“எங்கள் மதிப்பீட்டின்படி, இந்த அகாடமியை திறன்பட இயக்குவதற்கு ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் தேவைப்படும். எனவே, நாங்கள் எஃசி மெட்ராஸ் அறக்கட்டளையை அமைக்கிறோம். இதன்மூலம் கிடைக்கப்படும் நன்கொடைகள் வருமான வரிச் சட்டத்தின் 80 ஜி பிரிவின் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதி பெறும். முழுநேர பயிற்சி மட்டுமின்றி, கோடைகால முகாம்கள் மற்றும் வார இறுதி பயிற்சி வகுப்புகளையும் நடத்த எங்கள் குழு திட்டமிட்டுள்ளது. மேலும், கூடுதல் வருவாயை ஈட்ட உதவும் வகையில் ஆஃப்-சைட்களுக்கான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த வசதி திறக்கப்படும்,” என்கிறார் கிரிஷ்.
கால்பந்தில் கிரீஷ்க்கு ஏற்பட்ட காரணம் என்ன?
உலக அளவில் அறியப்படும் வெற்றிகரமான தொழிலதிபரான கிரிஷ், திடீரென ஏன் கால்பந்து மைதானத்தை அமைத்தார்? என்ற கேள்வி உங்களுக்குள் எழுவது நியாயமான ஒன்றுதான். அவருக்கு எப்படி இந்த ஆர்வம் வந்தது என்பது பற்றி அவரே பின்வருமாறு கூறுகிறார்.
“மற்ற பெற்றோர்களைப் போலத்தான் நானும் என் மகனை சென்னை அடையாறில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு விளையாட அழைத்துச் சென்றேன். அங்கு புல்லே இல்லாத மண் தரை மைதானத்தில் சுமார் 60 முதல் 80 மாணவர்கள் வரை கால்பந்து விளையாடுகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் நான் பார்த்த காட்சிகள் இதற்கு அப்படியே நேர்மாறானது. அங்குள்ள பள்ளிகள் மற்றும் மைதானங்களில் கால்பந்து பயிற்சி பெற மாணவர்களுக்கு எல்லாவித வசதிகளும் எளிமையாக கிடைக்கிறது.”
”திறமையான வீரர்கள் கொட்டிக் கிடக்கும் நம் நாட்டில், அவர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்காதது எனக்கு வேதனையைத் தந்தது. கால்பந்து போட்டி ஒன்றைக் காண்பதற்காக ஒரு முறை தனியார் கல்லூரி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு குழந்தைகள் விளையாடியதைப் பார்த்து அசந்து போய் விட்டேன். அவ்வளவு திறமைகளைப் பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது,” என்கிறார் கிரிஷ்.
பனை அணில் லோகோ
இந்த உந்துதலின் தொடர்ச்சியாகத்தான் மாமல்லபுரத்தில் ரூ.100 கோடி செலவில் எஃப்சி மெட்ராஸ் அகாடமியை அவர் உருவாக்கி இருக்கிறார். சுறுசுறுப்பு, வலிமை மற்றும் பார்வை ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் அகாடமியின் லோகோவில் ’பனை அணில்’ உள்ளது குறிப்பிடத்தக்கது. கூடவே, அணில் தீமிலேயே அங்குள்ள ஹாஸ்டல்கள் மற்றும் கஃபேக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த அகாடமியில், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும், தேசிய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனுமான அபிஷேக் யாதவ், எஃப்சி மெட்ராஸ் அகாடமியின் சிஇஓவாகவும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான வெங்கடேஷ் சண்முகம் தொழில்நுட்ப இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சி.என்.நாராயணா கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன் இயக்குநராக உள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின்(இந்தியன் பிரீமியர் லீக் அணி) டேட்டா மற்றும் செயல்திறன் பிரிவுக்கு தலைமை தாங்கும் தனஞ்சய் சிகேஎம், இந்த அகாடமியின் விளையாட்டு மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“இந்த எஃப்சி மெட்ராஸ் வளாகத்தை நேர்த்தியாக உருவாக்கி, அதனை வெற்றிகரமாகத் திறந்திருக்கிறோம். இனி வரும் காலங்களில், இதுபோன்ற அகாடமிகளை உருவாக்க பிற பிசினஸ் நிறுவனங்களும் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களும் இதனை உத்வேகமாக எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறோம்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் கிரிஷ்.