7.2 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியது சென்னை ஆரம்பக் கல்வி நிறுவனம்!
குழந்தைகளின் கற்றலுக்கு கோவிட்-19 தடையாக இருக்கக்கூடாது என்று இந்நிறுவனம் பல தீர்வுகளை வழங்குகிறது.
சென்னையைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பான ஃப்ளின்டோ லெர்னிங் சொல்யூஷன்ஸ் (Flinto Learning Solutions) நிறுவனம் லைட்பாக்ஸ் வென்சர்ஸ் மூலம் 7.2 மில்லியன் டாலர் ப்ரீ-சீரிஸ் பி நிதி உயர்த்தியுள்ளது.
லைட்பாக்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர் பிரசாந்த் மேத்தா கூறும்போது,
“மழலையர் பள்ளியில் படிக்கும் பருவத்திலேயே ஒரு குழந்தையின் மூளை 90 சதவீதம் வடிவம் பெறுகிறது. இருப்பினும் உலகளவில் வெறும் 10-15 சதவீத நிதி மட்டுமே ஆரம்பநிலை கற்றலுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆரம்ப கல்விக்கான வளங்களில் பற்றாக்குறை உள்ளது. குழந்தைகளை மையமாகக் கொண்டு கற்பிக்கும் முறையைப் பின்பற்றும் பாடதிட்டங்கள் அதிகம் இருப்பதில்லை. குழந்தைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் போன்றோர்களைக் கொண்டு பிராடக்டை உருவாக்கி ஆரம்பநிலை கற்றலின் தனித்துவமான தேவைகளை ஃப்ளின்டோ பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்றார்.
ஃப்ளின்டோ நிறுவனம் அதன் ஆரம்பக் கல்விப் பிரிவில் சிறப்பாக வளர்ச்சியடையவும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள Flintoclass@HOME தீர்வை விரிவடையச் செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தளம் மூலம் வீட்டிலேயே ஆரம்ப கற்றல் முறையாக வழங்கப்படும் என்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் காலகட்டத்தில் வீட்டிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பாக படிக்க உதவுவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் இந்த ஸ்டார்ட் அப் தெரிவித்துள்ளது.
“ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் Flintoclass@HOME மாணவர் சேர்க்கை 3,000-ஆக உள்ளது. இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவிட்-19 காரணமாக குழந்தைகளின் கற்றல் தடைபடக்கூடாது. எனவே இந்தத் தீர்வினை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சிகளுக்காக இந்த நிதித்தொகையைப் பயன்படுத்த உள்ளோம்,” என்றார் ஃப்ளின்டோ லெர்னிங் சொல்யூஷன்ஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ அருண்பிரசாத் துரைராஜ்.
ஃப்ளின்டோ 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அருண்பிரசாத் துரைராஜ், விஜய் பாபு காந்தி, ஸ்ரீநிதி ஸ்ரீரங்கம் ஆகியோரால் நிறுவப்பட்டது. 2-12 வயது வரையிலும் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியில் ஃப்ளின்டோ கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய பிராடக்ட் ‘ஃப்ளின்டோபாக்ஸ்’ இந்தியா முழுவதும் உள்ள ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு சேவையளிக்கிறது.
இதன் மற்றொரு சேவையான Flintoclass குழந்தைகளுக்கான சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு சிறந்த வணிக மாதிரியையும் வழங்குகிறது. கடந்த 1.5 ஆண்டுகளில், ஃப்ளின்டோகிளாஸ் எட்டு நாடுகள் முழுவதும் 700-க்கும் அதிகமான மழலையர் பள்ளிகளைச் சென்றடைந்துள்ளது.
“குழந்தைகளின் கற்றலுக்கு கோவிட்-19 தடையாக இருக்கக்கூடாது என்று விரும்பினோம். ஆறு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பல்வேறு புலன்கள் சார்ந்த அனுபவம் அவசியம். இவர்களுக்கு சலிப்பூட்டும் வகையிலான ஆன்லைன் வகுப்புகள் பொருத்தமானதாக இருக்காது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேசமயம் அவர்கள் தொடர்ந்து கற்பதையும் உறுதிசெய்ய விரும்பினோம்,” என்றார் அருண்பிரசாத்.
Vedantu, Pariksha, Classplus, Byju’s, Pedagogy, Instasolv, Edvizo, Guvi, Camp K12, Winuall, Ken42 போன்றவை நாடு தழுவிய ஊரடங்கு சமயத்தில் நிதி உயர்த்தியுள்ள மற்ற கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களாகும்.