உலகின் இரண்டாவது பணக்காரர் ஆன கௌதம் அதானி: சொத்து மதிப்பு என்ன?
ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் கோடீஸ்வரரான கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இந்தியாவின் கோடீஸ்வரரான தொழிலதிபர் கௌதம் அதானி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரார் ஆனார். ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 5.2 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது. அதாவது, முந்தைய மதிப்பைக் காட்டிலும் 3.49 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்படி,
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 155.5 பில்லியன் டாலர். இந்திய ரூபாயின் மதிப்பில் 12.37 லட்சம் கோடி ரூபாய்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் 10 பணக்காரர்களில் 92.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இடம்பெற்றுள்ள மற்றுமொரு இந்தியர் முகேஷ் அம்பானி.
பில் கேட்ஸ், லேரி எலிசன், வாரன் பஃபெட், லேரி பேஜ், செர்ஜி பிரின் போன்ற பில்லியனர்களும் ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர் பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெசோஸ் 2-வது இடத்திலிருந்து 4-ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 149.7 பில்லியன் டாலர். ஜெஃப் பெசோஸ், பெர்னார்ட் அர்னால்ட் இருவரையும் பின்னுக்குத் தள்ளியிருக்கும் இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி, ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி Louis Vuitton தலைவர் மற்றும் சிஇஓ பெரினார்ட் அர்னால்ட் அவர்களை பின்னுக்குத் தள்ளி அதானி உலகின் மூன்றாவது பணக்காரர் ஆனார். உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஆசிய பணக்காரர் இடம்பெறுவது அதுவே முதல் முறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: ஸ்ரீவித்யா