ரூ.405 கோடி சம்பள உயர்வை ஏற்க மறுத்தாரா சுந்தர் பிச்சை? காரணம் என்ன?
Google சுந்தர் பிச்சைக்கு இந்திய மதிப்புப் படி 405 கோடி ரூபாய் மதிப்பு பங்கு ஒதுக்கீட்டை வழங்கியதாகவும், அதை அவர் மறுத்ததற்கான பல காரணங்களும் சொல்லப்படுகிறது...
முன்னணி நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய ஊயர்வு கவனத்தை ஈர்த்து செய்தியாவது இயல்பானது தான். ஆனால், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை விஷயத்தில் அவர் பங்கு ஒதுக்கீடு வாயிலான ஊதிய உயர்வை ஏற்க மறுத்திருப்பதாக கூறப்படுவது செய்தியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர் பிச்சை ஊதிய உயர்வை வேண்டாம் என மறுத்திருப்பது ஒரு பக்கம் பாராட்டை பெற்றாலும், இன்னொரு பக்கம் இதற்கான காரணம் தொடர்பான விவாதங்களும் சூடு பிடித்துள்ளன. சுந்தர் பிச்சை வேறு நிறுவனத்திற்கு செல்ல இருக்கிறாரா? என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.
இந்தியரான சுந்தர் பிச்சை, கடந்த 2015ம் ஆண்டு, முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுளின் தலைமை செயல்திகாரி (சி.இ.ஓ) ஆக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தை திறம்பட வழிநடத்தி வருகிறார்.
உலகின் செல்வாக்கு மிக்க சி.இ.ஓக்களில் ஒருவராக இருப்பதோடு, அதிக ஊதியம் பெறும் சி.இ.ஓக்களில் ஒருவராகவும் சுந்தர் பிச்சை திகழ்கிறார். தலைமை செயலதிகாரி என்ற முறையில் அவருக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதோடு, நிறுவன பங்குகள் போன்ற பரிசுகளும் அளிக்கப்படுவதுண்டு.
முன்னணி நிறுவனமான கூகுள் சிறந்த திறமைகளை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தனது உயரதிகாரிகளுக்கு பலவிதமான சலுகைகள் மற்றும் பரிசுகளை வழக்கம் கொண்டுள்ளது. அந்த வகையில்,
கூகுள் நிறுவனம், சுந்தர் பிச்சைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பங்கு ஒதுக்கீட்டை அளிக்க முன் வந்திருந்தது. ஆனால், இந்த பங்கு ஒதுக்கீட்டை சுந்தர் பிச்சை ஏற்க மறுத்துவிட்டதாக புளும்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அதிக ஊதியம் பெற்று வருவதாக கூறி சுந்தர் பிச்சை, பங்கு ஒதுக்கீட்டை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட பங்கு ஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்று தெரியவில்லை என்றாலும், இது இந்திய மதிப்பு படி ரூ.405 கோடி இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே 2014 மற்றும் அடுத்து வந்த ஆண்டுகளில் சுந்தர் பிச்சை முறையே ரூ.700 கோடி மற்றும் ரூ.1400 கோடி பங்கு ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
சுந்தர் பிச்சை பங்கு ஒதுக்கீட்டை மறுத்ததாக கூறப்படுவது குறித்து கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. சி.இ,ஓக்களின் ஊதியம் தொடர்பான விஷயங்களை வெளிப்படையாக விவாதிப்பதில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதும் என்ற மனதுடன் சுந்தர் பிச்சை, தனக்கான பங்கு ஒதுக்கீட்டை வேண்டாம் என மறுத்துள்ளதாக கூறப்பட்டாலும், இதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக, தொழில்நுட்ப உலகில் சி.இ.ஓக்களுக்கு வழங்கப்படும் அதிக சம்பளம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. தலைமை அதிகாரி மற்றும் பிற நிர்வாகிகள் சம்பளம் இடையே காணப்படும் இடைவெளி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கருதப்படுகிறது.
அண்மையில், கூகுள் கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் தங்களைப்போன்றவர்கள் குறைவான சம்பளத்தில் அல்லாடும் போது, சுந்தர் பிச்சைக்கு மட்டும் அதிக ஊதியம் வழங்கப்படுவது ஏன் எனும் கேள்வி எழுப்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பின்னணியில் தனது ஊதிய உயர்வால் இந்த விவாதம் மேலும் தீவிரமாவதை தவிர்க்க சுந்தர் பிச்சை இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வருவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்துடனான ஒப்பந்தம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து கூகுள் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியது, சீனாவில் தணிக்கைக்கு உள்ளான தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் திட்டம், பாலியல் சீண்டல் புகாருக்கு இலக்கான அதிகாரிகளுக்கு அதிக பணம் அளிக்கப்பட்ட புகார் என பல்வேறு சர்ச்சைகள் கூகுளை உலுக்கியது.
இதனிடையே தேடியந்திர முடிவுகளில் அரசியல் சார்பு புகார் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை முன் ஆஜராகியும் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்தார். இது போன்ற சர்ச்சைகள் சுந்தர் பிச்சையின் தலைமை பண்பு தொடர்பான மதிப்பீட்டை பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சி.இ.ஓக்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சுந்தர் பிச்சை, கடந்த முதல் பத்து இடத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், கூகுள் போன்ற லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் தலைமை பதவியை வகிக்கும் போது, எடுக்கப்படும் முடிவுகளை எதிர்ப்பவர்களும், விமர்சிப்பவர்களும் இருப்பார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
இதனிடையே, சுந்தர் பிச்சை கூகுளை விட்டு வேறு நிறுவனத்திற்கு மாறுவதற்கான அறிகுறியாகவும் இந்த செய்தி பார்க்கப்படுகிறது. இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில் சுந்தர் பிச்சை, சிலிக்கான வேலியின் மதிப்பு மிக்க சி.இ.ஓவவாக தொடர்கிறார். அவருக்கு அதிக ஊதியம் அளிப்பதோடு, அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் கூகுள் அதிக தொகை செலவு செய்து வருகிறது.