இந்தியாவில் செய்தி விழிப்புணர்வுக்காக 10 லட்சம் டாலர் நிதி அளிக்கும் கூகுள்!
உலக அளவில் ஊடக கல்விக்கு கூகுள் அறிவித்துள்ள 10 மில்லியன் டாலர் நிதியின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
முன்னணி இணைய நிறுவனமான கூகுள், இந்தியர்கள் மத்தியில் செய்தி தொடர்பான கல்வியறிவை வளர்க்க ஒரு மில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது.
இந்த நிதி, இண்டர்நியூஸ் சர்வதேச லாப நோக்கில்லாத அமைப்பிற்கு வழங்கப்படும். இந்த அமைப்பு, 250 பத்திரிகையாளர்கள், தகவல் சரி பார்ப்பவர்கள், கல்வியாளர்கள் மற்றும் என்.ஜி.ஓக்களை இந்தத் திட்டத்திற்காக தேர்வு செய்யும் என இது தொடர்பான செய்து வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஊடகக் கல்விக்கு கூகுள் அறிவித்துள்ள 10 மில்லியன் டாலர் நிதியின் ஒரு பகுதியாக இது அமைகிறது. இதற்கான பாடத் திட்டம், சர்வதேச மற்றும் உள்ளூர் வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கப்படும் என கூகுள் தெரிவித்துளது. ஏழு இந்திய மொழிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
"இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் வல்லுனர்கள், இந்தியாவில் உள்ள மெட்ரோ அல்லாத நகரங்களில் புதிய இணைய பயனாளிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள், இணையத்தில் சரியாக தகவல்களைத் தேட வழிகாட்டுவார்கள்,” என கூகுள் அறிக்கை தெரிவிக்கிறது.
பொய்ச்செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 240 பத்திரிகையாளர்கள் மற்றும் இதழியல் கல்வியாளர்கள் கொண்ட கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் இந்திய டிரைனிங் நெட்வொக்ர், கடந்த ஆண்டு முதல், தங்கள் செய்தியறை மற்றும் அதற்கு வெளியே பொய்யான தகவல்களை கட்டுப்படுத்த முயன்று வருகிறது.
கடந்த ஆண்டு, பயிற்சியாளருக்கு பயிற்சி அளிக்கும் முறை மூலம், இந்த நெட்வொர்க், இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்களும் சிறப்பாக செயல்பட்டால் தான் கூகுள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், கூகுள் நிறுவனம் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆவதால் எந்த அபாயமும் இல்லை என்றும் கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை அண்மையில் கூறியிருந்தார.
"எங்கள் நிறுவன அளவு காரணமாக, கண்காணிப்பும் வருகிறது. ஆம், நாங்கள் ஸ்டார்ட் அப்’களை வாங்கியிருக்கிறோம். அதே நேரத்தில் எங்கள் முதலீடு பிரிவு மூலம் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்திருக்கிறோம்,” என்றும் சுந்தர் பிச்சை உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் நடைபெற்ற உரையாடலின் போது குறிப்பிட்டார்.
இந்த அமைப்பின் தலைவர் கிலாஸ் ஸ்வெப், கூகுள் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமாக உருவாகும் அபாயம் இருக்கிறதா என கேட்ட போது, மற்ற நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் நாங்களும் சிறப்பாக செயல்பட முடியும் என சுந்தர் பிச்சை கூறினார்.
தமிழில்: சைபர்சிம்மன்