கூகுள்-ஜியோ இணைந்து குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும்!
இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 33,737 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது கூகுள் நிறுவனம்.
ரிலையன்ஸின் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் சமீபத்திய அந்நிய முதலீட்டாளர் கூகுள் நிறுவனம். இந்நிறுவனம் 7.7% பங்குகளை வாங்க ஜியோ நிறுவனத்தில் 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
இதனால் ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய சிறுபான்மை பங்குதாரர் ஆகியுள்ளது கூகுள் நிறுவனம். ஜியோ இதுவரை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 1,52,056 கோடி ரூபாய் முதலீடாகப் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மெய்நிகர் வடிவில் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் ஒன்றாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்தே தற்போது ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 500 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயனர்கள் உள்ள நிலையில் டிஜிட்டல் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்த கூகுள்-ஜியோ பார்ட்னர்ஷிப் உதவும்.
மேலும் ஜியோ பிளாட்பார்ம் மற்றும் கூகுள் இணைந்து குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் தயாரிக்கவும் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் சார்ந்த இந்த சாதனம் ஜியோ அறிமுகப்படுத்த உள்ள 5ஜி நெட்வொர்க் மூலம் செயல்படும். இந்தியாவின் 350 மில்லியன் 2ஜி பயனர்களை ஸ்மார்ட்போன் பயனர்களாக மாற்றுவதே இதன் நோக்கம்.
கூகுளின் முதலீடு குறித்து அம்பானி கூறும்போது,
“ஜியோ நிறுவனம் போன்றே கூகுள் நிறுவனமும் மாற்றத்தையும் புதுமையையும் ஊக்குவிக்கிறது. கூகுள் நிறுவனம் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பயனுள்ள தகவல்களைப் பெற உதவுகிறது. எங்களுடன் இணைந்து செயல்பட கூகுள் நிறுவனத்தை நாங்கள் வரவேற்கிறோம். இணைய பயன்பாட்டை உலகமயமாக்குவது, புதிய டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது என இந்தியர்களுக்கு இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு சிறப்பாக சேவையளிக்கப் போவதை நினைத்து உற்சாகமடைகிறோம். மில்லியன் கணக்கான பயனர்கள் ஸ்மார்ட்போன் சேவையைப் பயன்படுத்த உள்ளனர். இந்த முயற்சி புதிய வாய்ப்புகளை உருவாக்கும்,” என்றார்.
குறைந்த விலையிலான இந்த சாதனம் ரிலையன்ஸ் ஜியோபோனின் மேம்பட்ட வடிவமாகும். மில்லியன் கணக்கான பயனர்களை ஜியோபோன் 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றியதுடன் 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவில் டிஜிட்டல் செயல்பாடுகளில் காணப்பட்ட இடைவெளியை நிரப்புவதில் முக்கியப் பங்களித்துள்ளது.
ஜியோ உடன் இணைந்து செயல்படுவது குறித்து சுந்தர் பிச்சை கூறும்போது,
“இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் வருங்கால செயல்பாடுகளுக்கு இந்த கூட்டு முயற்சி முக்கியமானது. ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்வதில் கூகுள் பெருமைகொள்கிறது. தற்சமயம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு சேவையளிப்பதில் எங்களது கூட்டு முயற்சி கவனம் செலுத்தும். அதேசமயம் அனைவரின் மொபைல் அனுபவத்தையும் மேம்படுத்த விரும்புகிறோம்.
இந்தியாவின் டிஜிட்டல் துறையில் உள்ள மாற்றங்களுக்கு ஜியோ பிளாட்பார்ம் சிறப்பாக பங்களிக்கும். இந்தியாவில் டிஜிட்டல் துறை மாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவிற்கான தயாரிப்புகளை முதலில் உருவாக்கினால் எல்லா இடங்களிலும் உள்ள பயனர்களுக்கு சிறப்பான தயாரிப்புகளை உருவாக்க உதவும் என்கிற எங்களது கருத்து மேலும் வலுவடைகிறது,” என்றார்.
கடந்த மூன்று மாதங்களில் ஜியோ பிளாட்பார்மில் பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் முதலீடு 14-வது முதலீடாகும்.
ஜியோ பிளாட்பார்ம் இதற்கு முன்பு ஃபேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ், விஸ்டா ஈட்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆர் போன்ற பல்வேறு நிறுவனங்களில் இருந்து முதலீடு பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் தங்களது தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கி நிலைப்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் ஜியோ பிளாட்பார்மில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த 12 மாதங்களில் ஜியோவிற்கான அந்நிய பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) குறித்து ரிலையன்ஸ் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.