15,500 பெண் ஊழியர்களுக்கு $118 மில்லியன் இழப்பீடு தர கூகுள் ஓப்புதல்: ஏன் தெரியுமா?
பாலின பாகுபாடுடன் நடந்து கொண்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் 118 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
'பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்...' என்ற பாரதியாரின் பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் விதமாக ஆட்டோவில் ஆரம்பித்து விண்வெளி ஆராய்ச்சி வரை, பெயின்டிங்கில் ஆரம்பித்து பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பு வரை ஆணுக்கு நிகராக பெண்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
வேலை நேரம், திறமை, பொறுப்பு, ஆளுமை என தனக்கு ஒதுக்கப்பட்ட பதவியில் பெண் ஊழியர்கள் ஆண் ஊழியருக்கு நிகராக செயல்பட்டாலும், ஆணை விட பெண்ணுக்கு குறைவாகவே சம்பளம் ஒதுக்கப்பட்டுகிறது. இது சாதாரண வேலைகளில் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகள் வரை சாபக்கேடாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், பாலின பாகுபாடு தொடர்பான சர்ச்சையில் சிக்கிய உலகிலேயே முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான கூகுள், அதற்கு இழப்பீடாக 15,500 பெண் ஊழியர்களுக்கு 118 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பாலின பாகுபாடு சர்ச்சை :
சமீப காலமாகத் தொழில்நுட்ப உலகில் உச்சத்தில் இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பாலின, நிற மற்றும் சாதி ரீதியிலான பாகுபாடுகள் பார்க்கப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. கூகுள் போன்ற நிறுவனங்களில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பெண் பணியாளர்களுக்கு அவர்களது தகுதிக்குக் குறைவான பணிகள் ஒதுக்கப்படுவதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2017ம் ஆண்டு கலிபோர்னியாவின் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 3 பெண்கள் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் கூகுள் நிறுவனம் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், 2013ம் ஆண்டு செப்டம்பர் 14 முதல் 236 வெவ்வேறு பதவிகளில் கலிபோர்னியாவில் பணிபுரியும் 15,500 பெண் ஊழியர்களுக்கு சுமார் 118 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம்,
"எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் சமத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், ஏறக்குறைய ஐந்து வருட வழக்குகளுக்குப் பிறகு, எந்தவொரு ஒப்புதலும் அல்லது கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இந்த விஷயத்தைத் தீர்ப்பது அனைவருக்கும் நல்லது என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம். மேலும், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," எனத் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா சட்டம் சொல்வது என்ன?
கலிபோர்னியாவில் ஜனவரி 1, 2019 முதல் அமலில் உள்ள திருத்தப்பட்ட சம ஊதியச் சட்டத்தின்படி, எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அல்லது வெவ்வேறு இனம் அல்லது இனக்குழுவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய ஏற்றத்தாழ்வை முதலாளிகள் ஒரு ஊழியரின் முந்தைய ஊதியத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கக் கூடாது என்கிறது.
கலிபோர்னியா அரசாங்கத்தின் தொழில்துறை உறவுகள் துறையின் இணையதளத்தின்படி,
"திருத்தப்பட்ட சம ஊதியச் சட்டம், எதிர் பாலினத்தவர், அல்லது வேறு இனம் அல்லது வேறு இனக்குழுவைச் சேர்ந்த ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை விட குறைவான ஊதிய விகிதங்களை நிறுவனங்கள் வழங்குவதைத் தடை செய்கிறது. கணிசமான அளவில் ஒரே மாதிரியான வேலைக்காக, திறன், முயற்சி மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, தற்போதைய சட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் தனக்கு ஒரு ஊழியர் அல்லது எதிர் பாலினம், வேறுபட்ட இனம் அல்லது வெவ்வேறு இனக் குழுவைச் சேர்ந்த ஊழியர்களைக் காட்டிலும் குறைவான ஊதியம் பெறுகிறார் என்பதை நிரூபிக்க முடியும்.
அதேபோல், ஊழியரின் சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளதற்கான சரியான காரணங்களை நிறுவனங்களும் முன்வைக்க முடியும்.
அதாவது, ஒரு நிறுவனம் அல்லது முதலாளி தனது ஊழியரின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற வழக்கை முறியடிக்க நினைத்தால், கணிசமான அளவில் ஒரே மாதிரியான வேலைக்கான ஊதியத்தில் உள்ள வேறுபாடு, பணி மூப்பு, தகுதி, உற்பத்தியை அளவிடும் அமைப்பு அல்லது பாலினம், இனம் அல்லது இனக்குழு ஆகியவற்றைத் தவிர்த்து சரியான காரணங்களை முன்வைக்கலாம்.
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் கூகுள்:
பலமுறை கூகுள் நிறுவனம் ஊழியர்களைக் கையாளும் விதம் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பெண் பொறியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கியதாகவும், ஆசிய வேலை விண்ணப்பங்களை புறக்கணித்ததாகவும் எழுந்த புகாரை தீர்க்க கூகுள் $2.5 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டது.
இதேபோல், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க - ஆப்ரிக்கர்கள் மற்றும் கருப்பினத்தவர்களை கூகுள் நிறுவனம் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கருப்பினத்தவர்களுக்கு திறனற்ற வேலை குறைந்த ஊதியம் பதவி உயர்வு இல்லாத பணி போன்றவை ஒதுக்கப்படுகின்றன. இதனால், அவர்கள் பாதியிலேயே பணியிலிருந்து விலகி விடுவதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், கலிபோர்னியா டிபார்ட்மெண்ட் ஆஃப் ஃபேர் எம்ப்ளாய்மென்ட் அண்ட் ஹவுசிங் (DFEH) நிறுவனத்தில் உள்ள கறுப்பின பெண் ஊழியர்களுக்கு எதிரான சாத்தியமான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு பற்றிய குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - கனிமொழி