பளுதூக்கும் வீரர் மீராபாய் சானுவுக்கு வெளிநாட்டுப் பயிற்சி, 40 லட்சம் நிதி உதவி: அரசு ஒப்புதல்!
ஒலிம்பிக் வீரர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
பளுதூக்கும் வீரர் மீராபாய் சானுவின் வெளிநாட்டுப் பயிற்சிக்கு நிதி உதவி அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒலிம்பிக் வீரர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல், பேட்மிட்டன், குத்துச் சண்டை, பாரா விளையாட்டுகள், பளு தூக்குதல், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளின் வீரர்களுக்கு ரூபாய் 1.5 கோடிக்கும் அதிகமான நிதி உதவியை வழங்குவதற்கான முன்மொழிதல்களை விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில் இன்று நடைபெற்றது.
இந்த ‘மிஷன் ஒலிம்பிக் செல்’லின் கூட்டத்தில், பளுதூக்கும் வீரர் மீராபாய் சானுவின் வெளிநாட்டுப் பயிற்சிக்கும், அவரது நீண்டநாள் காயத்துக்கான சிகிச்சைக்கும் ரூபாய் 40 லட்சம் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நிதியுதவியின் மூலம் அமெரிக்காவில் உள்ள கன்சாசுக்கு மீராபாய் சானு, அவரது பயிற்சியாளர் மற்றும் முட நீக்கியல் நிபுணர் ஆகியோர் சென்று இரண்டு மாத பயிற்சியிலும், சிகிச்சையிலும் ஈடுபடலாம்.
இந்த முடிவைப் பற்றிக் கூறிய மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் வீரர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.
"ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறச் செல்லும் நமது வீரர்களுக்கு சிறந்த வசதிகளை அளிக்க நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என அண்மையில் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.
தகவல்: பிஐபி