ஏர் இந்தியா 100 சதவீத பங்குகளை விற்க அரசு முடிவு!
ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மார்ச் 17ம் தேதிக்குள் விருப்ப விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா முழுவதும் தனியார் வசமாகும் நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான, ஏர் இந்தியா நிறுவனம், நீண்ட காலமாக கடன் சுமையில் தடுமாறி வருகிறது. அதற்கு 60,000 கோடி கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் நாள்தோறும் ஏர் இந்தியா இழப்புகளை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு 25 ஆயிரத்து 509 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்கக் கடந்த 2018ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டும், இதை வாங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனையடுத்து, தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏல விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் எனவும், அதற்காக விண்ணப்பிக்க மார்ச் 17 கடைசித் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியாவின் கிளை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளும், ஏர் இந்தியா சிங்கப்பூர் ஏர்போர்ட் டெர்மினல் சர்வைசஸ் நிறுவனத்தின் 50 சதவீதப் பங்குகளும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் நிறுவனத்துக்கு அதன் முழு நிர்வாக உரிமையும் வழங்கப்படும். ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் அதன் ரூ.23,286.5 கோடி கடன் பாக்கியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், எஞ்சிய கடன் முழுவதும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் இருக்கும் எனவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்தை வாங்குபவர்கள், அதன் பிராண்ட் பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்றும், இந்திய நிறுவனங்கள் மட்டுமே ஏர் இந்தியாவை வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: சைபர்சிம்மன்