'தாடியில் முளைத்த தொழில் ஆசை' - ரூ.50 லட்சம் டர்ன்ஓவர் செய்யும் சரவணன்!
தாடி வளர்க்க தரமான எண்ணெயை தேடிய சரவணனுக்கு உதித்த தொழில் ஐடியா, இன்று தாடியுடன் சேர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது.
2015ல் பல இளைஞர்களைப் போல கல்லூரியை முடித்தார் சென்னையைச் சேர்ந்த சரவணன் ராமகிருஷ்ணன். பட்டம் பெற்றதும் ஹைதராபாத்தில் வேலையும் கிடைத்தது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணி. 2 ஆண்டுகள் அதே நிறுவனத்தில் வேலை. அனுபவம் கிடைத்தது, ஆனால் அதற்கேற்ற பெரிய சம்பளம் இல்லை.
சரவணன் வருமானத்தைப் பற்றி கவலைப்படவில்லை, அங்கு கிடைத்த கற்றலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் வீடியோக்கள், பயிற்சி பட்டறைகள் என பலவற்றின் மூலம் அதில் தன் திறமையை வளர்த்துக் கொண்டு ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
எல்லாம் நன்றாகப் போய் கொண்டிருந்தாலும், தொழில்முனைவு வேட்கை இருப்பவர்களால் பல நாள் ஒரே இடத்தில் பணிபுரிவது கடினம். அதே நிலை தான் சரவணனுக்கும் ஏற்பட்டது.
“செய்து கொண்டிருந்த பணி எனக்கு மிகுந்த திருப்தியை கொடுத்தது, ஆனாலும் என் சொந்த நிறுவனத்தை நிறுவவே மனம் துடித்தது. எனக்கு தெரிந்தது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மட்டும்தான். அதனால் அதை வைத்தே தொழில் தொடங்க முடிவெடுத்தேன்,” என்றார் சரவணன்.
FMCG என்று சொல்லப்படும் வேகமாக வர்த்தகமாகும் சில்லறைப் பொருட்கள் ப்ராண்டுகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய முடிவெடுத்து, 2017ல் வேலையை விட்டார் சரவணன்.
தாடியில் முளைத்த தொழில் ஆசை
தொழில்முனைவர் ஆக நினைத்த சரவணன், தனது புது முயற்சிக்கு முன் தன் கெட்-அப்’பை கொஞ்சம் மாத்த நினைத்து, அப்போது பிரபலமாக இருந்த ‘தாடி’ வைத்துக் கொள்ள விரும்பியுள்ளார்.
“எல்லாரும் அப்போ தாடி வைத்துக் கொண்டனர். சரி நாமும் வச்சுக்கலாமே என தாடி வளர்க்க ஒரு நல்ல எண்ணெயை தேடினேன். நெட், நண்பர்கள், கடைகள் என எங்கு தேடியும் ஒரு நல்ல தாடி எண்ணெய் கிடைக்கல. மேலும் அது பற்றி ஆராய்ந்ததில், மார்க்கெட்டில் இருந்த பல தாடி எண்ணெய்கள் பக்கவிளைவுகள் ஏற்படுத்துவதாய் இருந்தது,” என தான் விரிவாக சிந்தித்த தருணத்தை விவரித்தார்.
இத்தனை பேர் தாடி வளர்க்கையில், அதற்கு ஒரு தரமான எண்ணெய் சந்தையில் இல்லை என்பது சரவணனுக்கு ஆச்சர்யமாக இருந்துள்ளது. அது பற்றி ஆர்வம் அதிகரிக்க, மேலும் பல ஆய்வுகளில் இறங்கியுள்ளார்.
சரவணன் தனது அப்பாவிடம் இது பற்றி பேசுகையில், தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், மூலிகை எண்ணெய் தயாரிக்கிறார் என்று சொல்லி அவரிடம் சரவணனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
“25 ஆண்டுகளாக மூலிகை எண்ணெய் தயாரிக்கும் அந்த நண்பருடனான எனது போன் கால் என் வாழ்க்கையையே மாற்றியது,” என்கிறார் சரவணன்.
தாடி பற்றிய தனது சந்தேகம், தரமான எண்ணெய் இல்லாதது என அனைத்தையும் அவரிடம் விவரிக்க, அவர் சொன்னதோ, ‘தம்பி நல்லா க்ளீன் ஷேவ் பண்ணி இருந்தாதானே நல்லா இருக்கும், எதுக்கு தாடிலாம் வளத்துக்கிட்டு...’ என்றுள்ளார்.
இப்படி ஒரு மணி நேரம் உரையாடல் போக, கடைசியாக அவருக்கு என் ஆசையை புரியவைத்து, தாடி வளர்க்க ஒரு பிரத்யேக எண்ணெய் தயாரித்து கொடுக்க கேட்டார் சரவணன்.
“6 மாதங்களுக்குப் பின் தாடி வளர்க்கும் ஒரு மூலிகை எண்ணெயுடன் என்னை தொடர்பு கொண்டார். ஒரு பாட்டில் 800 ரூபாய்க்கு வாங்கினேன். 2 மாதத்தில் நல்ல ஒரு மாற்றம். எனக்கு தாடி வளரத் தொடங்கியது. 6 மாதம் தொடர்ந்து பயன்படுத்தியபின் முழு தாடி வளர்ந்ததைப் பார்த்து அசந்து போனேன். இதில் சிறப்பே ஒரு பக்கவிளைவும் எனக்கு ஏற்படவில்லை.”
நானே என்னை தாடியுடன் பார்த்த போது ஹீரோ போல் உணர்ந்தேன், என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை, என்றார்.
தான் பெற்ற தாடி... பிறருக்கும் வளரட்டுமே...
தலைமுடி, மீசை, தாடி என்பதெல்லாம் ஒவ்வொருவர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் விஷயங்கள். அதில் எப்போதும் சமரசம் கிடையாது. அப்படித்தான் சரவணனின் தாடி வளர்க்கும் கதை ஒரு தொழிலுக்கு விதையாய் அமைந்தது.
“தாடி வளர்க்க என்னைப் போல் எத்தனை பேர் ஆசைப் படுவார்கள். அவர்களுக்கும் இதை பகிர நினைச்சேன். எப்படியாவது தாடி வைக்கவேண்டும் என எண்ணும் இளைஞர்களுக்கு உதவிட நினைத்தேன்,” என்றார்.
உடனே நண்பரிடம் இருந்து டிஎஸ்எல்ஆர் கேமரா ஒன்றை வாங்கி, தன்னை தாடியுடன் விதவிதமாக படம் எடுத்துக் கொண்டார். அதை ஃபேஸ்புக், இன்ஸ்டா என எல்லா இடத்திலும் பகிர்ந்துள்ளார்.
“பல ஃப்ரெண்ட்ஸ் என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். கரு கருவென தாடியுடன் என்னை பார்த்துவிட்டு உடனே போன் செய்து எப்படி வளர்ந்தது என விசாரிக்கத் தொடங்கினர். மூலிகை எண்ணெய் பற்றி சொன்னதும் பலரும் தங்களுக்கு வேணும் என கேட்டனர்.”
சரவணனில் நண்பர்களுக்கும் 2 மாதங்களில் தாடி வளர, அப்படியே இந்த எண்ணெயின் மகிமை நண்பர்கள் வட்டம், அடுத்த வட்டம் என பரவத் தொடங்கியுள்ளது. இப்படி வைரலாக பரவிய தாடி எண்ணெயை முறையாக விற்பனை செய்தால் என்ன என சரவணனுக்கு தோன்றியுள்ளது.
“எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது. என்னிடம் ஒரு நல்ல பொருள் உள்ளது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிவும் உள்ளது, வேறென்ன வேண்டும்? என்று யோசித்த போது அய்யோ முதலீட்டுக்கு பணம் வேண்டுமே என்று உதித்தது,” என்றார் சரவணன்.
தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. வீட்டில் இருக்கும் முதலீட்டாளர் அப்பா தானே. அவரே அதைக் கொடுக்க ஒரு வழியாக தொழில் தொடங்கினார்.
2017ல் ‘BeardMen' (‘பியர்ட்மென்’) தொடங்கினார். பிசினசுக்கு தேவையான சட்ட நடவடிக்கைகள், ப்ராண்ட் பதிவு என அனைத்திற்கும் சரவணனில் அப்பா உதவினார். எல்லாம் ரெடியானதும், தரமான தாடி எண்ணெய் என சந்தையில் விற்பனை செய்ய, சரியான விலையை நிர்ணயிக்க சில அனுபவசாலிகளின் வழிகாட்டுதல்களோடு தொடங்கியது.
தாடியும் வளர்ந்தது; தொழிலும் வளர்ந்தது
“டிஜிட்டல் தளங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாயிலாக விளம்பரங்கள் போட்டு, நல்ல விற்பனை நடந்தது. தொடங்கிய சில மாதங்களிலே இப்படி ஒரு வரவேற்பை எதிர்ப்பார்க்கவில்லை. எண்ணெயின் தரம் எங்களுக்கு நீடித்த வாடிக்கையாளர்களை பெற்றுத் தந்தது.”
“ஒரு நாளைக்கு 100 முதல் 150 எண்ணெய் பாட்டில்கள் விற்பனை ஆகிறது. மாதத்திற்கு சுமார் 3 ஆயிரம் பாட்டில்கள்; வருடத்திற்கு 25 ஆயிரம் வரை விற்பனை நன்றாக நடக்கிறது. 2018ல் ரூ.35 லட்சமும், 2019ல் ரூ.50 லட்சம் டர்ன்ஓவர் ஆனது,” என்றார்.
ஒரு நிறுவனம் தொடங்கி வெறும் ஒரே ஒரு எண்ணெய் விற்பனை செய்து கொண்டு இருக்க முடியாது என்பதால், மற்றொரு புதிய தாடி எண்ணெய் ‘Kellywille’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினர். அடுத்து, தாடி முடி நேராக்கும் Beard straightner என்ற ப்ராடக்டை இந்தாண்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளனர். அமேசான் தளத்திலும் இவர்களின் எண்ணெய் விற்பனை ஆகிறது.
ஒருவர் தொடங்கிய இந்நிறுவனம் இன்று 10 ஊழியர்களுடன் செயல்படுகிறது. 1 கோடி ரூபாய் விற்றுமுதலை 2021ல் பெற தீவிரமாக செயல்படுகிறது. அடுத்தக்கட்டமாக வெளிநாடுகளுக்கும் தாடி எண்ணெய் ஏற்றுமதி செய்ய ‘BeardMen’ எதிர்நோக்கியுள்ளதாக சரவணன் தனது வருங்காலத் திட்டத்தை பகிர்ந்துகொண்டார்.
வலைதளம்: BeardMen