'ஜி.எஸ்.டி நாயகன்': கட்சி எல்லைகளைக் கடந்து நேசிக்கப்பட்ட வசீகர நிர்வாகி!
சாதுர்யமான பேச்சாற்றலாலும், அனைவருடனும் இணக்கமாக பழகும் இனிமையான தன்மையாலும் கட்சி எல்லைகளை கடந்து நண்பர்களை பெற்றிருந்த தலைவராக அருண் ஜெட்லி விளங்கினார்.
மாணவர் தலைவர், அவசர நிலையை எதிர்கொண்டவர், வெற்றிகரமான வழக்கறிஞர், கிரிக்கெட் ரசிகர், செயல்திறன் மிக்க நிர்வாகி என பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த அருண் ஜெட்லி மறைந்துவிட்டார்.
தனது சாதுர்யமான பேச்சாற்றலாலும், அனைவருடனும் இணக்கமாக பழகும் இனிமையான தன்மையாலும் கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை பெற்றிருந்த தலைவராக ஜெட்லி விளங்கினார். செயல்திறன் மிக்க அமைச்சராக விளங்கியதோடு, சர்ச்சைகளை எதிர்கொள்ளவும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் கட்சி நாடிய சிறந்த வியூகம் அமைப்பவராகவும் ஜெட்லி அறியப்படுகிறார்.
சிறிது காலம் நோயவாய்ப்பட்டிருந்த நிலையில், 66 வயதில் மறைந்த அருண் ஜெட்லி, இந்திய அரசியல் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்துச் சென்றிருக்கிறார். நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பான ஜி.எஸ்.டி சட்டம் கொண்டு வரப்பட்டதில் முக்கிய பங்காற்றிய செயல்பாடுகள் மூலம் அவர் சிறந்த நிர்வாகியாகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். எதிர்கட்சித்தலைவராக செயல்பட்ட போதும் அவர் தனது இணக்கமான செயல்பாட்டால் சிறந்து விளங்கினார்.
பிஜேபியின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவான, அருன் ஜெட்லி, தில்லியில் 1952ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை மகராஜ் கிஷோர் ஜெட்லி வழக்கறிஞராக இருந்தார், தாய் ரத்னா பிரபா சமூக சேவகராக இருந்தார். தில்லியின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான செயின்ட் சேவியர் பள்ளி மற்றும் ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்சில் படித்த ஜெட்லி, பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டப்படிப்பை முடித்தார்.
1977ல் சட்டம் முடித்தவுடன், வழக்கறிஞராகவும் பயிற்சியைத் தொடங்கினார். அதற்கு முன்னரே மாணவர் தலைவராக அவரது அரசியல் வாழ்க்கை துவங்கிவிட்டது. பின்னாளில் நாவன்மைக்காக அறியப்பட்டது போலவே, மாணவர் பருவத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கினார். பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பிரகாசித்தவர், தான் பயின்ற கல்லூரியின் மாணவர் தலைவராக செயல்பட்டார்.
அப்போது காங்கிரஸ் ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், பிஜேபி’யின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) சார்பில் மாணவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அவர் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு, அவர் அரசியலில் கவனிக்கப்படும் ஆளுமையாக உருவானார்.
1970 களில் பல இளம் தலைவர்கள், சோஷலிச தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனால் ஈர்க்கப்பட்டது போலவே, அருண் ஜெட்லியும் கவரப்பட்டார். இதன் விளைவாக, 1975ல் அவரச நிலை அறிவிக்கப்பட்ட போது ஜெட்லியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 19 மாதங்கள் அவர் சிறைவாசம் அனுபவித்தார்.
1977ல் லோக்தந்திர்க் யுவமோர்ச்சா அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், ஏபிவிபி தில்லி தலைவராகவும், அகில இந்திய செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் பிஜேபியில் இளைஞர் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டு, 1980ல் தில்லி பிரிவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனிடையே, உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் அவர் வழக்கறிஞராக திறம்பட செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
1982 ல் ஜெட்லி, சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். ஜெட்லி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இருவருமே வெற்றிகரமான வழக்கறிஞர்களாக உள்ளனர். 1990ல் ஜெட்லி மூத்த வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்று, துணை சோலிசிடர் ஜெனரலாக பணியாற்றினார். இந்த காலத்தில் அவர் போபர்ஸ் வழக்கில் பணியாற்றினார்.
1999ல் பிஜேபியின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதே ஆண்டு முதல் முறையாக மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார். வாஜ்பாய் அரசில், தகவல் ஒளிபரப்பு அமைச்சராக பணியாற்றினார். பின்னர் சட்டம், வர்த்தகம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பங்கு விலக்கல் துறை இணை அமைச்சராகவும் செயல்பட்டார்.
2000வது ஆண்டு ஜெட்லி மாநிலங்களவை உறுப்பினரானார். சட்டம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தவர், பின்னர் காபினெட் அமைச்சரானார். அவருக்கு சட்டத்துறை வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு அமைச்சரவையில் இருந்து விலகிய ஜெட்லி, பிஜேபி பொதுச் செயலாளரானார். கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டார்.
2003ல் அவர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றார். இந்த காலகட்டத்தில் தான் அவர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரானார். குஜராத் முதல்வராக இருந்த கேஷுபாய் பட்டேல் நீக்கப்பட்டு, நரேந்திர மோடி மாநில முதலவரானதில் ஜெட்லி முக்கியப் பங்காற்றினார். மோடியின் நெருக்கமான நண்பராக விளங்கிய அவர், குஜராத் கலவரங்களுக்கு பின், மோடி கடும் விமர்சனத்திற்கு இலக்கான போதும் அவருடன் இருந்தார். பின்னர், 2014ல் மோடி, கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் யோசனை தெரிவிக்கப்பட்ட போது, ஜெட்லி ஆரம்பம் முதல் மோடிக்கு துணை நின்றார்.
2004ல் பிஜேபி ஆட்சியை இழந்த பிறகு, நாடாளுமன்றத்தில் கட்சியின் குரலாக ஒலித்தார். பின்னர் அவர் எதிர்கட்சித்தலைவராகவும் திறம்பட செயல்பட்டார். கட்சி செய்தித் தொடர்பாளராகவும், எதிர்கட்சித் தலைவராகவும், தெளிவாக, மென்மையாக, அழுத்தந்திருத்தமாக கருத்துகளை எடுத்து வைக்கும் அவரது பாணி அனைவரையும் கவர்ந்தது. கட்சி சார்பின்றி தனிப்பட்ட முறையிலும் பழகக் கூடியவரான ஜெட்லி, அனைத்து அரசியல் கட்சிகளிலும் நண்பர்களை பெற்றிருந்தார். இந்த பண்பு எதிர்கட்சித்தலைவராக இருந்த போது கைகொடுத்ததோடு, பின்னர் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் பெருமளவு உதவியது.
முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வியூகங்களை வகுக்க அருண் ஜெட்லியின் செயல்திறனும், நட்பான அணுகுமுறையில் பிஜேபிக்கு பெரிதும் உதவியது.
இதனிடயே பிஜேபி தேர்தல் பிரச்சாரங்களுக்கான வியூகங்களை வகுப்பதிலும் அவர் தனது செயல்திறனை வெளிப்படுத்தினார். மீடியாவை கையாள்வதிலும் அவர் சிறந்து விளங்கினார். பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அவர் நல்லுறவை வளர்த்துக் கொண்டிருந்தார். இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும், கட்சி நிலைப்பாட்டை தெளிவாகவும் எடுத்துக்கூறியவராக அவர் பாராட்டப்படுகிறார்.
2014ல் நரேந்திர மோடி பிரதமரான போது, அருண் ஜெட்லி நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மோடியின் முதல் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களில் அவர் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலாக்கத்தில் அவரது பங்கு கணிசமானது. சர்ச்சைக்குரியதாக இருந்த ஜி.எஸ்.டி மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.
எதிர்கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தது மற்றும் அவரது நட்பான அணுகுமுறை இதற்கான ஒருங்கிணைப்பில் உதவியது. இதனால் பல்வேறு வரி விதிப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களையும் அவர் திறம்பட நடத்தினார்.
ஜி.எஸ்.டி தவிர, பணமதிப்பு நீக்கம், ஆதார் உள்ளிட்ட விஷயங்களின் அமலாக்கத்திலும் அவர் முக்கியப் பங்காற்றினார். முக்கிய விஷயங்களில் சமரசம் இல்லாத போக்கை கடைப்பிடித்த அதே நேரத்தில் எப்போதும் திறந்த மனதுடன் விவாதத்திற்கு தயாரான மனநிலையையும் அவர் கொண்டிருந்ததாக ஜெட்லியை நன்கறிந்த மூத்த அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிதி அமைச்சராக அவரது காலம் மறக்க முடியாதது என பலரும் கருதுகின்றனர். பல்வேறு முக்கிய சீர்த்திருத்தங்களை கொண்டு வந்ததோடு, திவால் சட்டம் போனவற்றிலும் அவர் கவனம் செலுத்தினார். ஜி.எஸ்.டி சட்டத்தைக் கொண்டு வருவதில் இருந்த கருத்து வேறுபாட்களை களைந்தது மற்றும் மாநிலங்களின் சம்மதததை பெற்றது அவரது முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
ஜெட்லி, கிரிக்கெட் விளையாட்டிலும் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத்தலைவராக அவர் சிறந்த கிரிக்கெட் நிர்வாகியாகவும் செயல்பட்டிருக்கிறார். கட்சி எல்லைகளை கடந்த அவரது செயல்பாட்டிற்கு கிரிக்கெட் ஆர்வமும் துணை புரிந்தது. ஜெட்லி அதிகமாக சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது இல்லை.
சாதுர்யமான பேச்சு, நட்பான அணுகுமுறை, நிர்வாக செயல்திறன், அனைவரையும் அரவணத்துச்செல்லும் தன்மை ஆகியவற்றால் அரசியல், சட்டம், கிரிக்கெட் என பல அரங்குகளில் பிரகாசித்த அருண் ஜெட்லி இனிய தலைவராக என்றென்றும் நினைவில் நிற்பார்.
-