‘அதிவேக கணக்கிடும் மனிதர்’ - மறைந்த கணித மேதை சகுந்தலா தேவிக்கு கின்னஸ் விருது!
40 ஆண்டுகளுக்குப் பின் சகுந்தலா தேவிக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரபல கணித மேதை சகுந்தலா தேவிக்கு கின்னஸ் உலகச் சாதனைக்கான அங்கீகாரம் 4 தசாப்தங்களுக்குப் பின் கிடைத்துள்ளது. 28 நொடிகளில் கணக்கு போடும் அதிவேக மனிதரான சகுந்தலா தேவிக்கு ‘அதிவேக கணக்கிடும் மனிதர்’ 'fastest human computation' என்ற கின்னஸ் டைட்டில் வழங்கப்பட்டுள்ளது.
“ஜூன் 18ம் தேதி 1980ல் லன்டன் இம்பீரியல் கல்லூரியில் நடைப்பெற்ற சோதனையில், 13 இலக்கம் கொண்ட இரண்டு பெரிய எண்களை வேகமாக பெருக்கிக் காட்டி சாதனை படைத்தார் சகுந்தலா.”
மனித கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் மறைந்த கணித மேதை சகுந்தலா தேவிக்கு கிடைத்த இந்த கின்னஸ் சாதனையை அவரது மகள் அனுபமா பானர்ஜி பெற்றுக் கொண்டார்.
“நான் 10 வயதாக இருந்தபோது என் அம்மா இந்த உலகச் சாதனையைப் படைத்தார். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் என் அம்மாவின் சாதனைப் பற்றி பேசுவார்கள். அது எத்தகைய பெரிய சாதனை என அப்போதே உணர்ந்திருந்தேன்,” என்றார் அனுபமா.
லண்டன் கொவென்ட்ரியில் ட்ரோகடெரோ மையத்தில் என் அம்மாவின் போட்டோ உள்ளது. அதைப் பார்த்தபோது பெருமையாக இருந்தது என்கிறார்.
அமேசான் ப்ரைம் வீடியோவில், வித்யா பாலன் நடித்த ‘சகுந்தலா தேவி’ திரைப்படம் வெளியாக இருந்த தினத்துக்கு முந்தைய தினம் இந்த கின்னஸ் சாதனை விருது பற்றிய அறிவிப்பு வந்தது. அனு மேனன் இயக்கியுள்ள கணித மேத சகுந்தலா தேவியின் சுயசரிதை திரைப்படம் ப்ரைம் வீடியோவில் வெளியாகி அவரின் கதை உலக மக்களிடையே பிரபலமாகியுள்ளது.
வித்யா பாலன் கின்னஸ் சாதனை செய்தி பற்றி தனது அறிக்கையில் கூறுகையில்,
“இது அற்புதமான செய்தியாகும். லண்டனில் சகுந்தலா தேவி திரைப்பட படப்பிடிப்பின் போது, நான் அடிக்கடி அனுபமா பானர்ஜியை சந்திப்பேன். அப்போதுதான், சகுந்தலா தேவிக்கு இந்த கின்னஸ் சாதனை கிடைக்காமல் இருந்தது பற்றி தெரியவந்தது. அதனால் உடனே நானும் எங்கள் பட தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவும் கின்னஸ் உலகச் சாதனை குழுவினரிடம் பேசி, உரிய ஆவணங்களை அனுப்பி, எங்களால் முடிந்த அனைத்து முயற்சியையும் எடுத்தோம்,” என்றார்.
இது பற்றி பேசிய அனுபமாவும், வித்யா பாலன் எடுத்த இந்த முயற்சி எங்கள் எதிர்ப்பார்ப்புகளை தாண்டிய ஒன்று என்று தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்தை பற்றி பேசிய அவர்,
“வித்யா அற்புதமாக நடித்துள்ளார். இதில் என் அம்மா மற்றும் எங்களுடைய முழு வாழ்க்கைக் கதை அடங்கியிருப்பதால், படம் வருவதற்கு முன்னால் அது எவ்வாறு வெளிவரப்போகிறது என்று சற்று பதட்டமாக இருந்தேன். ஆனால் படம் வெளியானதும் அதில் வித்யா அந்த கதாப்பாத்திரைத்தை ஏற்று நடித்தது, படத்தின் படைப்பும் மிக அழகாக இருந்தது,” என்றார் அனுபமா.
சகுந்தலா தேவியாக வித்யா பாலனும், அனுபமா பானர்ஜியாக சன்யா மல்ஹோத்ராவும் படத்தில் நடித்துள்ளனர். தன்னைப் போல் அற்புதமாக சன்யா நடித்துள்ளதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார்.
கின்னஸ் உலகச் சாதனை ஆசிரியர் க்ரேக் க்ளெண்டே ‘சகுந்தலா தேவி’-ன் சாதனை பற்றி குறிப்பிடுகையில்,
“இதுவரை யாராலும் அவரின் வேகத்தில் கணக்கு போடமுடியவில்லை. அவரின் சாதனை நேரத்தின் பாதியை கூட செய்யமுடியவில்லை. சகுந்தலா தேவியின் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். அவருக்கான இந்த கின்னஸ் உலகச் சாதனை அங்கீகாரம் நீண்ட நாள் தாமதமாக வந்திருந்தாலும் இது அவருக்கு நாம் அளிக்கும் சிறந்த மரியாதை,” என்றார்.
தகவல் உதவி: பிடிஐ